Saturday, November 5, 2011

ஆசிரியர் பக்கம்

உங்களுடன்
உயிர் அணு உலை
கூடங்குளத்தில் மின்சாரம்
உற்பத்தியாகும் முன்னரே
மக்களிடம் அச்சத்தின் உற்பத்தி.
அச்சத்தின் ஊற்றுக்கண்களை
அடைத்தபின்னே அணுமின் உற்பத்தித் தொடங்குமென
அரசுகளின் உறுதிமொழிகள்.
மின்தடைப் பிசாசுகள் ஓடுமென்றும்
நல்லகாலம் பிறக்குமென்றும்
நம்பிக்கை விற்கும் விஞ்ஞானக் கோடாங்கிகள்.
விமான விபத்து, ரயில் விபத்து,
சாலை விபத்து நடைபெறுவதால்
பயணங்கள் நிற்பதில்லையே.
நடைபாதையிலும் விபத்து நடக்கும்
நடக்காமல் இருக்க முடியுமோ?
காற்றிலும் மாசுகலப்பதால்
மூச்சுவிடாமல் வாழ்க்கை ஓடுமோ?
அணுமின் உலையில் விபத்து வருமென்று
நிலையத்தை முடக்க நினைக்கலாமா?
இன்றையத் தொழில்நுட்ப வளர்ச்சி
எதிர்வரும் விபத்தைத்தடுக்காதா?

வாகனவிபத்துகள்
பயணம் செய்வோரையும் பக்கத்தில் இருப்போரையும்தான்
பாதிக்கும்
அணுஉலை விபத்து
அடுத்தடுத்தத் தலைமுறைகளையும் பாதிக்கும்.
புயலையும் மழையையும் வெய்யிலையும்கூட
முன்னதாகச் சொல்லும்
வானிலை ஆராய்ச்சி
முறியடிக்கவோ மழுங்கடிக்கவோ முடிவதில்லையே
நிலநடுக்கமும் சுனாமியும்
எந்த நேரமும் எங்கேயும் நிகழலாம்
தடுத்துநிறுத்தவோ, திருப்பிவிடவோ
இப்போதும் கூட அறிவியல் இல்லை.
மின்சாரம் வேண்டும்தான்
மின்சாரம் இல்லாமல் வாழ்க்கை இல்லைதான்.
அணுமின் உலையின் ஆபத்தைச் சுமக்காமல்
கழிவுகளை
அப்புறப்படுத்தவும் பாதுகாக்கவும்
உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு
ஓயாதுபயத்தில் உழைக்கவேண்டும்
அணுமின் நிலையச் செயற்பாட்டுக்கான
அடிப்படை யுரேனியக் கையிருப்பும்
நடப்பாண்டிற்குள் கரைந்துபோகும்
ஜேம்ஷெட்பூர் சுரங்கத்து யுரேனியம்
அணுமின் உலைக்கான தரத்தில் இல்லை
ஆந்திரா, மேகாலயாச் சுரங்கங்களில்
யுரேனியம் எடுக்கப் பொதுமக்கள் எதிர்ப்பு
அணுமின் நிலைய இடுபொருளுக்கு
அடுத்த நாட்டில் கையேந்தும்நிலை.
அபாயத்தையும் உற்பத்திசெய்யும்
அணுமின் நிலையம்தவிர
யாரிடமும் கையேந்தாமல்
எதற்காகவும் அச்சப்படாமல்
இயற்கையிடம் பெறுவதற்கு
எவ்வளவோ வாய்ப்புகள்.
சூரியனை நம்பலாம்
செலவு அதிகம் என்றாலும்
பயம் இல்லை
காற்று கைகொடுக்க ஓடிவருகிறது
காற்றிலிருந்து மின்சாரம் கறக்க
இந்தியா திட்டமிட்ட 5340 மெகாவாட்டில்
தமிழ்நாட்டிலிருந்தே 2000 மெகாவாட்
கூடங்குளத்திற்கு அருகிலிருந்தே
சாத்தியமாகியிருக்கிறது.
கூடங்குள அணுமின் நிலைய வளாகத்திலும்
காற்றுமின்சாரக் காற்றாடிகள்.
காற்றுக்கும் வெயிலுக்கும் கையேந்தவேண்டாம்
அச்சப்பிசாசுகளின் அணிவகுப்பும் கிடையாது.
இருந்தும் அணுமின் நிலையம் ஏன்?
அணுமின் நிலைய உலக வரலாற்றில்
அச்சம் தரும் பக்கங்கள் உண்டு
அணுமின் நிலையத்தில்
மின்சாரம் மட்டும் உற்பத்தியாவதில்லை
கழிவுகளும் உற்பத்தியாகின்றன.
அவற்றிலிருந்து கிடைக்கும்
புளுட்டோனியம்
அணுஆயுதத்தின் அடிப்படை இடுபொருள்.

அணுமின்சாரம், அணுஆயுதம் என்ற
இருநோக்கும் இதன் கண் உள
உலகச்சந்தையின் வணிகநோக்கும்
உலகப்பாதுகாப்புக்குழுவில் உறுப்பினர் ஆவதும்
ஆய்வு செய்வதும் அண்டைநாட்டாரை மட்டுமன்றி
வல்லரசாக உலகை மிரட்டவுமான
பல்நோக்கும்கூட இதன் கண் உளவென்று
International Automic Energy Agency
கண்காணித்துக் கட்டுப்படுத்துகிறது.
கல்பாக்கத்திலும்
புற்றுநோய் உற்பத்தி கூடியிருக்கிறதாம்
ஒருலட்சம் பேருக்கு இரண்டு முதல் நான்கு பேர்
புற்றுநோயால் உயிர் இழக்கிற
இந்திய சராசரிப் புள்ளிவிவரம்
25ஆயிரம்பேர் இருக்கிற கல்பாக்கத்தில்
மூன்று பேர் உயிர் இழப்பதாக உயர்ந்திருக்கிறது.
கடுமையான புயல் அலைகளிலும்
கட்டுமரத்தில் மனம் கலங்காத மீனவர்கள்
சுனாமி பயத்தைக்கூடக் கொஞ்சகாலத்திலேயே
மறக்க முடிந்த மக்கள்
நடக்கப் போவதாக நினைக்கும்
அணுமின் உலை விபத்துக்காக
அச்சத்தில் காய்கிறார்கள்.
அடுத்தத் தேர்தல், அடுத்த பிரதமர்.
ஊழலற்ற இந்தியா, உத்தம வேடம் என்ற
அரசியல் அன்றாடங்காய்ச்சிகளுக்கு
அடுத்தடுத்தத் தலைமுறையைப் பாதிக்கும்
அணுமின் நிலையம் பிரச்சினையாக இல்லை

அணுமின் உலை வெடித்தால்
பாதிப்பிற்கு ஆளாகப்போவது
வாழும் தலைமுறை
வளரும் தலைமுறை
வரும் தலைமுறைகள்
மட்டுமன்றி
உலகின் மிகத்தொன்மையான நிலப்பகுதியான
பொதிகைமலை
பறவைகளும் விலங்குகளும்
மரம் செடி கொடிகளும்
மருத்துவ மூலிகைகளும் கூடத்தான்.
எனவே
மக்களின் அச்சம் என்பது
வாழ்கிற
வாழ வேண்டிய
தலைமுறைகளின் அச்சம்.
ஆகவே
அணுமின் உலை
உயிர் அணுக்களுக்கு
உலையாக வேண்டாமே!

ம.ரா.

No comments:

Post a Comment