Saturday, December 3, 2011

கடைசிபக்கம் - ஒற்றைப் பரிமாணசமய, மொழி வெறி வக்கிரங்கள்

இந்திரா பார்த்தசாரதி

ஏ.கே.ராமாநுஜன் ’இராமாயணம்’ பற்றிய கட்டுரை தில்லிப்பல்கலைகழகப் பாடத்திட்டத்தினின்றும் நீக்கப்பட்டிருகின்றது என்பது, அப்பல்கலைக் கழகத்தில் 26 ஆண்டுகள் பணிபுரிந்த எனக்கு அதிர்ச்சியாக இருக்கின்றது.

இது இப்பொழுது ஒற்றைப் பரிமாணச் சிந்தனைவாதிகளின் செல்வாக்கு உயர்ந்திருப்பதைத்தான் குறிக்கின்றது.

இராமாயணம், மஹாபாரதம் ஆகிய இரண்டும், இந்தியப் பண்பாட்டு ஆழ்மனத்தின் இன்றியமையாத நுட்பக் கூறுகளாக அமைந்து விட்டன. இந்தியாவின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் இக்கதைகளை அவர்கள் அவர்களுடைய பண்பாட்டுக்கேற்ப எப்படி உள்வாங்கிக் கொண்டிருக்கின்றார்களோ அதன் வெளிப்பாடாகத்தான் அவ்விடத்தில் இவ்விரு இதிகாசங்களும் உருப்பெற்றிருக்கின்றன. இக்கதைகளின் காப்புரிமை எந்தச்சமய, மொழி ஆதிக்கச்சக்திகளுடனும் இருக்க இயலாது. சில பூர்வகுடிமக்கள் இராமாயணக்கதையில் இராவணந்தான் கதாநாயகன். இது அவர்கள் கலாசார வெளிப்பாடாக இயல்பாகவே உருவானதே தவிர, புலவர் குழந்தை வெளிப்படுத்தியது போல் எதிர்ப்புணர்வின் வடிவம் அன்று. இந்தியாவிலும், கிழக்காசிய நாடுகளிலும் நூற்றுக்கணக்கான ராமாயணங்களும் கிளைக்கதைகளும் இருக்கின்றன. சங்கச் செய்யுட்களிலேயே ராமாயணக் கதையில் புதுச்செய்திகள் பல தென்படுகின்றன.

கோடிக்கரையில் இராம, இலக்குவர்வானரத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியபோது புள்ளினங்களும் அமைதி காத்தன என்று ‘அகநானூற்றில்’ வருகிறது. பக்தி இயக்கதின் போது, இராமகாதை ஆழ்வார்ப் பாடல்களில் பல புதுப்பரிமாணங்களைப் பெறுகிறது. திருமங்கை மன்னன் இராமன் குகனைத் தோழனாகவும் சகோதரனாகவும் ஏற்றுக்கொள்ளும் கதையைக் குறிப்பிடுகிறார். குகனை ஓர் அற்புதமான கதாபாத்திரமாகக் கம்பன் படைத்ததற்கு இது ஆதாரமாக இருந்திருக்கவேண்டும். ‘ஆயிரம் இராமர் உன் கேள் ஆவரோ’ என்று பரம இராமபக்தனாகிய பரதனையே சொல்ல வைக்கின்றது. தமிழ்நாட்டில் நாட்டார்கதைகளில் குகனைப் பற்றிய இவ்வகையான வடிவம் நடைமுறையில் இருந்திருக்க வேண்டும்.
பொய்கையாழ்வார் ஒரு புதுபுராணச் செய்தியையே, அவதாரத்தையே உருவாக்கிவிடுகிறார். இராவணன் பிரும்மாவிடம் வரன் பெறச்சென்ற போது, திருமால் ஒரு குழந்தையாகப் பிரும்மாவின் மடியிலிருந்து இராவணனின் அவன் மறைத்துவைத்திருந்த ஒன்பதுதலைகளையும் எண்ணி அவன் யார் என்று பிரும்மாவுக்குப் புலப்படுத்துகிறாராம். இதுவும் அவர்காலத்திய மக்களிடையே வழங்கிய கதைகளில் ஒன்றாக இருக்க வேண்டும். பூதத்தாழ்வாரும் இக்கதையைக் குறிப்பிடுகிறார். வால்மீகியைக்காட்டிலும், கம்பன் அகலிகைக்கதையை எவ்வளவு நாகரிகமாக, நளினமாக, இலக்கியநயத்துடன் சொல்கிறான் என்று ராமாநுஜன் எடுத்துக் காட்டியிருப்பதுதான் ஹிந்தி வெறியர்களுக்குக் கோபத்தை உண்டாக்கியிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. கம்பன் அடிப்படையில் ஒரு நாடக ஆசிரியன். இக்கதையின் நாடகச் சாத்தியப்பாடுகளை உணர்ந்து அகலிகையை மனச்சிக்கல்கள் நிறைந்த ஒரு complex கதாபத்திரமாக அவன் சித்திரித்திருக்கிறான் வால்மீகி. அகலிகை ஒற்றைப் பரிமாணக் கதாபாத்திரம்.. ஆனால், கம்பன் அகலிகை மனப் போராட்டத்துக்கு உள்ளாகிற மானுடப் பெண். இந்திரன், கௌதமனாக வந்து அகலிகையுடன் உறவு கொள்வதைப் பின்புலக் காட்சிகளுடன் ஒரு நாடகச் சித்திராமாக்குகிறான் மகாகவி கம்பன். வால்மீகியின் அகலிகைக்கு அவன் கௌதமனில்லை, இந்திரந்தான் என்று உடலுறவு கொள்வதற்கு முன்பே தெரியும். கம்பனின் அகலிகைக்கு உடலுறவு கொள்ள ஆரம்பித்த பிறகுதான் தெரிகிறது. அவள் ஆழ்மனம் இந்திரனை நாடியிருக்க வேண்டுமென்பதை அவள் அப் பொழுதுதான் உணர்கிறாள். ஆழ்மன உனர்வுக்கு அவள் தடை போடவிரும்பவில்லை. சிறுசிறு நிகழ்வுகளையும் அற்புதமான சொல்லோவியங்களாக, நாடகக்காட்சிகளாகக் காட்டுவதுதான் கம்பனின் கைவண்ணம்.

No comments:

Post a Comment