Monday, February 20, 2012

கடைசிப்பக்கம் - சரித்திரமும் சக்கரமும்

இந்திரா பார்த்தசாரதி


‘பிலாட்டோவின் சக்கரம்’ என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? முதலில் ‘ஜனநாயக’த்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். ‘டெமோஸ்’ (மக்கள்) என்ற கிரேக்க சொல்லிலிருந்து வந்தது ‘டெமொக்ரஸி’ (ஜனநாயகம்). பெரிக்லெஸின் (கி.மு. 460 -430) மறைவுக்குப்பிறகு, கிரீஸில் ஜனநாயகம் தழைக்கத்தொடங்கியது. ஆனால், பிலாட்டோவுக்கு, அது அவ்வளவு உற்சாகத்தைத்தரும் செய்தியாக இல்லை. அவர் கூறினார்:’ இப்பொழுது என்ன நடந்து கொண்டிருக்கிறது? அராஜகத்தைச் சுதந்திரம் என்கிறார்கள். ஊதாரித்தனத்தைப் பொருளாதார மேம்பாடு என்கிறார்கள். வன்முறையை வீரம் என்கிறார்கள். வயதானவர்கள் கூட இளைஞரைப் பின்பற்றிக் காலத்துக்கேற்ற கோஷம் எழுப்புகிறார்கள். சட்டத்தை அநுசரிப்பது என்பது பிற்போக்கானக் கருத்தாக மாறிவிட்டது. எதுவும் அளவுக்கு மீறினால், எதிர்விளைவு ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை. ஜனநாயகத்தின் எதிர்விளைவு சர்வாதிகாரம். இதை மக்கள் உணரவேண்டும்’.

தற்காலத்திய நம் இந்தியாவைப்பற்றிப் பிலாட்டோவுக்கு எப்படித் தெரிந்திருக்கக்கூடும் என்பது நியாயமான கேள்வி! ஏதென்ஸைப் பொறுத்தவரையில், பிலாட்டோ கூறியது நடந்துவிட்டது. ஏதென்ஸில், பணக்காரர்கள் இன்னும் பெரியபணக்காரர் ஆனார்கள். ஏழைகள் இன்னும் பெரிய ஏழைகள் ஆனார்கள். ஏதென்ஸில் ஜனநாயகம் என்பது கேலிக்கூத்தாயிற்று. ஏழைகளுடைய வாக்குகள் விலைக்கு வாங்கப்பட்டன.
வில்டூரன்ட் (Will Durant) கூறுகிறார்:’ கோடீஸ்வரர்கள், செனட்பிரதிநிதிகளையும், மக்கள் வாக்குகளையும் விலைக்கு வாங்கினார்கள். விலைக்கு வாங்க முடியாவிட்டால் கொலைகள் நடந்தன. நாட்டாண்மைக்காரர்களுக்கு வாக்கு அளிக்காதவர்களுடைய வீடுகள் எரிக்கப்பட்டன’.



நம் அரசியல்வாதிகள் பிலாட்டோ-வையோ, வில்டூரன்டையோ படித்திருக்கக்-கூடிய வாய்ப்பில்லை. கிரேக்க, ரோமானிய வரலாறுகளை அவர்கள் அறிந்து வைத்திருப்பர்கள் என்றும் அவர்கள் மீதுகுற்றம் சாட்ட முடியாது.

ஆனால் சரித்திரம் அலுப்பு, சலிப்பு இல்லாமல் எப்படித்திரும்ப நடக்கிறது?

ரோமவரலாற்றில், தொல்குடிச்செல்வந்தர்கள் (Aristocrats), பாம்பி (Pompey) யை அழைத்துச்சட்டத்தை நிலைநாட்டச்-சொன்னார்கள். சாதாரண மக்கள் இதற்கு ஜூலியஸ்ஸீஸரை நாடினார்கள். ஸீஸரால் தான் ஜனநாயகம் பிழைக்கும் என்று ஒரு சாதாரணக் குடிமகன் நம்பினான்.
ஜனநாயகத்தின் பேரில் பதவிக்கு வந்த ஸீஸர் விரைவில் சர்வாதிகாரியானான்! அவன் முடியை நாடுகிறானென்று குற்றம் சாட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டான். பிறகு என்ன நடந்தது? அவன் சகோதரியின் மகன்அகஸ்டஸ், மக்களின் ஒப்புதலுடன் மாமன்னனாக முடிசூட்டிக் கொண்டான்! பிலாட்டோவின் சக்கரம், வட்டமாகச் சுற்றிபழைய நிலையிலேயே வந்துநின்றது!

இந்தியா ஒரு முடியரசாகவும், தில்லியை ஆளுகின்றவர் சக்கரவர்த்தியாகவும், மாநில முதல்வர்கள் குறுநில மன்னர்களாகவும் அறிவிக்கப்-படக்கூடிய சாத்தியக்கூறுகள் இல்லாமலில்லை. மன்னர்கள் காலத்துப் போர்க்காலச் சூழ்நிலைபோல், இப்பொழுது தமிழ்நாட்டில் ஒருரூபாய்க்கு அரைடஜன் ‘தளபதிகளும்’ ‘இளையதளபதிகளும்’ எல்லாத்துறைகளிலும் விரவிக்கிடக்கிறார்கள் என்பதுதானே உண்மை?
பிஜுபட்நாய்க்கை ஞாபகம் இருக்கிறதா? அவர் ஒருசமயம் கூறினார்: ‘ஜெயின் டயரியில் (ஹாவாலாபுகழ் ஜெயின்) மன்மோகன்சிங் பெயர் இடம் பெறவில்லை.

ஆகவே அவர்தான் இந்தியாவி ன் பிரதமாராக இருக்கத்தகுதியானவர்’ என்று. அது அப்படியே நடந்தும் விட்டது, வேறு பல அரசியல் நிர்ப்பந்தங்களினால். பட்நாய்க் சொன்ன காரணம், இந்திய அரசியல்-வாதிகளில், லஞ்சம் வாங்காதவர்கள் யாருமே இருக்கமுடியாதென்று. லஞ்சம் வாங்கா-விட்டாலும், மற்றவர்கள் லஞ்சம் வாங்குவதைப் பற்றிக் கவலைப்படாமல் ஒரு பிரதமர் இருக்கலாமா என்பது வேறு கேள்வி. நேருவுக்கே இந்தப் பிரச்சினை இருந்0-திருக்கிறது.

ஜெயின்டயரியில் பெயர் இடம் பெறவில்லை என்பதுதான் தகுதி என்றால், இந்தியாவின் அரசியல்வாதிகளைத் தவிர இந்தியக்குடிமக்கள் அனைவருமே பிரதமராவதற்குத் தகுதி பெற்றவர்கள் என்று இதற்கு விளக்கம் கூறப்பட்டது! ஜெயினுக்குப் பதிலாக பிறகு டெல்கி!
டெல்கியினால் ஆதாயம் பெறாத அரசியல், அதிகாரவர்க்கத்தினர் என்று பட்டியலிட்டால், அந்த லிஸ்ட் மிகக் குறுகியதாகத்தான் இருக்கும் என்றார்கள் ரோமுக்கும் இந்தியாவுக்கும் வரலாற்றில் மட்டுமல்ல, இப்பொழுதும் உறவுவகையிலும் ஒரு நெருங்கிய பிணைப்பு இருக்கின்றது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயந்தான்!

நூல் அறிமுகம் - இமையம்

மனித மனத்தின் விசித்திரங்களை. . .


தூக்கத்தைத் தொலைத்தவர்களுடைய கதைகளைச் சொல்கிறது துயில் நாவல். ஒரு மனிதனின் கதையோ, ஒரு குடும்பத்தின் கதையோ- வாழ்க்கையோ விவரிக்கப்-படவில்லை. நூற்றுக்கணக்கான மனிதர்களின் கதை-வாழ்க்கை நாவலினூடாக விரிகிறது. அவரவர் கதையை-வாழ்க்கையை வாக்கு மூலங்களாக அவரவர்களே சொல்கிறார்கள். நோய், துயரம், கசப்பு-மனிதர்களை வாய்விட்டுக் கதற வைக்கிறது. நாவல் ஒரே நேரத்தில் மூன்று விதமாக வளர்கிறது. இது தமிழிற்குப் புதிது. தெக்கோடு என்ற சிறுகிராமத்தில் நடக்க இருக்கிற துயில்தரு மாதாகோயிலின் பத்து நாள் திருவிழாவில் கடற்கன்னி ஷோ நடத்தபோகும் அழகர், சின்னராணி, திருச்செல்வி ஆகியோர் அடங்கிய சிறு குடும்பத்தின் வழியே நாவல் சொல்லப்படுகிறது. இரண்டாவது தெக்கோடு செல்லும் பயணிகள் தங்கிச் செல்லும் இடமாக இருக்கிற எட்டூர் மண்டபம். மூன்றாவது தெக்கோடு கிராமத்திற்கு 1873 -1874 இல் மருத்துவம் செய்ய வந்த ஏலன்-லாகோம்பே இருவரின் கடித உரையாடல்களின் வழியே சொல்லப்படுகிறது. அழகரின் குடும்பம் தெக்கோடு செல்வதற்காக ரயிலுக்குக் காத்திருப்பதில் தொடங்கி, திருவிழா முடிந்த மூன்றாம் நாள் தெக்கோட்டைவிட்டுக் கிளம்பி ரயிலுக்காக காத்திருப்பதில் நாவல் முடிகிறது. நாவலின் நிகழ்காலம் பதினைந்து நாட்கள் மட்டுமே 1982 மே மாதத்தில்.

தெக்கோடு சிறு கிராமம். பெரிய ஊரல்ல. புனித தலமுமல்ல. தென் தமிழகத்தில் இருக்கிறது. அங்கு நூறு ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட பிரமாண்டமான துயில் தருமாதா கோயில் இருக்கிறது. கோயில்தான் விசேஷம். அதைவிட விசேஷம் வெயில். ஒவ்வொரு ஆண்டும் கோவிலில் பத்து நாள் திருவிழா நடக்கும். திருவிழாவில் கலந்துகொள்ள நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் திரள் திரளாகப் பயணிக்கிறார்கள். பயணத்தில் தங்களுடைய கதைகளை அல்ல-வாழ்ககையைச் சொல்கிறார்கள். வேறுவேறுபட்ட மனிதர்கள். வேறுவேறுபட்ட வாழ்க்கை முறைகள். குறைந்தது நாவலுக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்களுடைய, குடும்பங்களுடைய கதைகள் இருக்கிறது. எல்லாருடைய கதையும் தெக்கோட்டை மையமாக வைத்து சொல்லப்-படுகிறது. தெக்கோடு மனச்சுமையை இறக்கி வைக்கிற இடமாக, மனம்விட்டு பேசுவதற்-கான, கூச்சமில்லாமல் அழுவதற்கான இடமாக, நோய்களை ஏற்றுக்கொண்டு தூக்கத்தை, சிரிப்பை யாசிக்கிற இடமாக இருக்கிறது. தெக்கோடு ஊராகத் தெரியாமல்-தண்ணீர் நிறைந்த பிரதேசம்மாதிரி-அதில் குளித்து-கழுவி-உடற்நோய்களை, மனநோய்களைப் போக்கிக்கொள்ள விரும்புகின்றனர். மொத்த பயணிகளின் நோக்கத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது அழகர் குடும்பத்தின் நோக்கம். அவர்கள் ஏமாற்றுவதற்காகப் போகிறார்கள். சாதாரண பெண் கடற்கன்னியாக வேஷமிட்டு ஏமாற்றி பிழைப்பதுதான்-அவர்களுடைய தொழில்-வாழ்க்கை நெறி. அழகர் குடும்பம்-மாதிரி வித்தைக்காட்டி ஏமாற்றுவதற்-காகவே பலர் தெக்கோட்டிற்கு வருகிறார்கள்.

நாவலில் வருகிற நூற்றுக்கணக்கான மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கையை ஒளிவுமறைவின்றி சொல்கிறார்கள். எத்தனை விதமான வாழ்க்கை முறைகள்? நாம் இதுவரை அறிந்திராத வாழ்க்கை முறைகள். பரந்துப்-பட்ட வாழ்க்கை அனுபவத்தைத் துயில் தருகிறது. இதுதான் நாவலின்-நாவலாசிரியர் எஸ்.ராமகிருஷ்ணனின் வெற்றி. அழகர், சின்னராணிகூட தங்களுடைய கதையை-வாழ்க்கையை அவர்கள்தான் சொல்கிறார்கள். நினைவோட்டமாக. தாயை இழந்த அழகர் இட்லி கடைக்கார கிருஷ்ணனின் மனைவி-யோடு தன் தந்தை உறவுக்-கொள்வதைப் பார்க்கிறான். அதனால் சொந்த தகப்பனாலேயே விரட்டியடிக்கப்பட்டு லாரி டிரைவரின் உதவியால் பழனி வருகிறான். பேரின்பவிலாஸ் ஹோட்டலில் வேலை செய்கிறான். அங்கிருந்து ஜிக்கியுடன் சேலம் செல்கிறான். கொஞ்ச காலம் விபச்சாரிகளோடு வாழ்கிறான். ராமி என்ற விபச்சாரியுடன் ஓடுகிறான். அவள் வேறு ஒருவனோடு ஓடிவிட சின்னராணியைக் கட்டிக்கொண்டு அவன் வாழ்வதற்காக கடைசியாக தேர்ந்தெடுக்கிற கடற்கன்னி ஷோகூட ஊர் ஊராக அலைகிற வாழ்க்கைதான். ஓரிடத்தில் நில்லாத வாழ்க்கை.

நாவலில் நிறைய பெண்கள் வருகிறார்கள். எல்லாப் பெண்களுமே திருவிழாவில் காணாமல்போன குழந்தைகள்மாதிரி பரிதவித்து நிற்கிறார்கள். வெளிநாட்டிலிருந்து சேவை செய்ய வந்த ஏலன் குதிரை ஓட்டியால் கொல்லப்படுகிறாள். இரண்டு மகள்களை உயிரோடு வைத்து வாழ வழிதெரியாமல் சூசனா தற்கொலை செய்து கொள்கிறாள். ரோமி அடுத்தடுத்து ஆட்களை மாற்றிக்-கொண்டே போகிறாள். டோலி காதல் என்ற பெயரில் ஏமாந்து ஐந்து ரூபாய் கிராக்கியாகி நடுத்தெருவில் செத்து அனாதை பிணமாகக் கிடக்கிறாள். சின்னராணி அழகரிடமிருந்து தப்பிக்க வழியின்றி கடற்கன்னியாகி கூண்டுக்குள் அடைப்பட்டு காட்சிப்பொருளாகி கிடக்கிறாள். அமுதினி மட்டும்தான் தன் ஆசையை, விருப்பத்தை நிறைவேற்றிக்-கொள்கிறவளாக இருக்கிறாள். ஆனால் அவளும் அமைதியாக இல்லை. கிடைத்த வாய்ப்பு பறிப்போய்விடுமோ என்ற கவலையில் மனநோயாளியாகி எல்லாரையும் இம்சிக்கிறாள். கொண்டலு அக்கா-பிறர் சொல்வதையெல்லாம் அலுக்காமல், முகம் சுளிக்காமல் கேட்டுக்கொண்டு ஜடம்மாதிரி இருக்கிறாள். ஜிக்கி-பாவம் கிழவியாகி-விட்டாள். ஒரு கிளாஸ் சாராயத்திற்கு கையேந்தி நிற்கிறாள். திருச்செல்வி ஊனமான குழந்தை. குழந்தை பிறக்கவில்லை என்பதால் தனிமைப்-படுத்தப்படுகிறாள் கோமகள். கல்யாணமாகாததாலேயே நங்கா தற்கொலை செய்துகொள்கிறாள். சென்னகேசவபெருமாளின் தங்கையும், அவளுடைய மருமகளும் வாசகர் மனதில் என்றும் இருப்பார்கள். பசியை தாங்க முடியாமல் தாழ்த்தப்பட்ட சாதியினரிடம் கூழ்வாங்கிக் குடித்ததற்காக கர்ப்பிணியைக் கொன்று தானும் தற்கொலை செய்து-கொள்கிறாள் கிழவி. சாவதிலும் சாதி பெருமை. நாவலில் வருகிற பெண்கள் சராசரியான எளிய வாழ்வைக்கூட வாழ முடியமல் தத்தளிக்கிறார்கள். அமைதியாக ஒருசில பொழுதுகளைக்கூட அவர்களால் நகர்த்த முடியவில்லை. ஆண்களாவது நல்லவிதமாக இருக்கிறார்களா, தூங்குகிறார்களா என்றால் அதுவுமில்லை. பெண்களைவிட அவர்கள்தான் கொண்டலு அக்காவிடம் வாய்விட்டு கதறி அழுகிறார்கள். பெண்கள் தங்களுக்குள்ளாகவே அழுகிறார்கள். ஏன் யாருமே அமைதியாக இல்லை. இதுதான் நாவல் வாசகர்முன் வைக்கும் முக்கியமான கேள்வி. இதைத்தான் நாவலாசிரியர் நாவல் முழுக்க திரும்பத்திரும்ப ரகசியமாக கேட்டுக்கொண்டேயிருக்கிறார். ஒரு விதத்தில் நம்முடைய கடவுள்கள் கல்லாகவும், மண்ணாகவும், மரமாகவும் இருப்பது நல்லதுதான். கூடைகூடையாக கொட்டப்படும் மனச்சுமைகளை, நோய்க்கிருமிகளை அவர்கள் மட்டும் எப்படி தாங்க முடியும் என்ற கேள்விக்குக் கடைசியாக எஸ்.ராமகிருஷ்ணன் வந்து விடுகிறார்.

நாவலில் மனிதர்கள் ஓயாமல் ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள். வாழ்க்கையின் நெருக்கடிகள் துரத்திக்கொண்டேயிருக்கிறது. நோய், பிடுங்கல்கள், மனச்சிக்கல்கள் எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு ஓட நினைக்கிறார்கள். அதற்கான நம்பிக்கையைத் தருகிற இடமாக இருப்பது தெக்கோடு. விடுதலையை அல்ல -தற்காலிக நம்பிக்கையைத் தருகிறது. அதற்காக மனிதர்கள் பயணிக்கிறார்கள். மனச்சுமையிலிருந்து, உடல், மன நோயிலிருந்து விடுபடுவதற்கான பயணத்தில்-முடிவு என்ன என்பதை நாவல் சொல்லவில்லை. அவ்வாறு சொல்வது நாவலின் வேலையும் அல்ல. பயணமும், பயணத்திற்கான நோக்கம்தான் முக்கியம். துயில் தரு மாதா -மரண தேவதையாகக்கூட இருக்கலாம். மனித பயணத்தின் முற்றுப்புள்ளி-தெக்கோடாக இருக்கலாம். இந்து முறைப்படி வடக்கு நோக்கிய பயணம்-மரணம். வனப்பிரஸ்தம்.
“இரவில் உறக்கமற்றுபோனவர்கள் பெருகினார்கள்” (139) இதுதான் நாவலின் மையம். நாவலில் வரக்கூடிய நூற்றுக்-கணக்கான மனிதர்களுக்கு சுமக்க முடியாத பாரமாக இருப்பது-நேற்றுவரையிலான வாழ்க்கைப்பற்றிய நினைவுகள்தான். அந்த பாழும் நினைவுகளிலிருந்து விடுபடவும், துண்டித்துக்கொள்ளவும் முயல்கிறார்கள். ஆனால் இன்றைய வாழ்விற்கான ஆற்றலை நேற்றைய வாழ்வுதான் அளிக்கிறது என்று எஸ்.ராமகிருஷ்ணன் பூடகமாக உணர்த்துகிறார். ஒவ்வொரு மனிதனும் மன அமைதியைத் தேடி அல்லது தூக்கத்தைத் தேடி அலைகிறார்கள். கொண்டலு அக்காவிடம் தங்களுடைய கதைகளைச் சொல்கிற சீயென்னா, சிவபாலன், கூட்டுறவு துறையின் உயர் அதிகாரி, கோமகள் போன்ற பலரும், அவர்களுடைய அமைதியை, தூக்கத்தைத் தொலைத்தவர்கள் அவர்கள்தான். அதைத் தேடுபவர்களும் அவர்கள்தான். பொதுவாக மனித வாழ்க்கையில் நாளை என்பதுதான் பிரதானம். ஆனால் துயில் நாவல் முன்வைப்பது நேற்று என்பதை. நேற்றைய வாழ்க்கையைச் சொல்வதற்காகத்தான் இன்று இருக்கிறது.

நாவலில் இவர்தான் முக்கியமான பாத்திரம் என்றில்லை. இதுதான் துயில் நாவலின் சிறப்பு. ஒரு ஊர் நாவலின் மையமாகி இருக்கிறது. அதாவது மண். மனித வாழ்க்கை மண்ணை அடிப்படையாகக் கொண்டதுதானே. பிரமாண்டமான வீட்டில் எது முக்கியம், எது முக்கியமல்ல என்பதைக் கூற முடியாது. எல்லாமும் முக்கியம் வீட்டிற்கு. அது போன்றதுதான் துயில் நாவலில் வரும் பாத்திரங்கள்.

மனித மனத்தின் விசித்திரங்களைப் படம் பிடிக்க முயன்றுள்ளார் எஸ்.ராமகிருஷ்ணன். ஒன்றின் மீது பற்றுக்கொள்வதும் சட்டென்று அதிலிருந்து விலகிவிடுவதும் மனித மனத்தின் இயல்பாக இருக்கின்றன. மனைவி பக்கத்தில் இருக்கும்போதே ரயில் பயணி பொன்னியுடன் காதல் கொள்கிறான் அழகர். முன்பின் தெரியாத மனிதனுடன் படுப்பதற்கு உடனே அவளும் சம்மதிக்கிறாள். மனிதர்களுக்குத் தங்கள் மீதோ, தங்களுடைய செயல்களின் மீதோ மதிப்போ கௌரவமோ கிடையாது. எல்லாருமே கோழைகள். வாய்விட்டுக் கதறி அழுகிறார்கள். ஆனால் வாழ்வதற்கான ஆசையை மட்டும் வளர்த்துகொண்டே இருக்கிறார்கள். இது எப்படி மனித மனதிற்குள் நிகழ்கிறது என்பதை சொல்கிறது-துயில். சூசனாவும், நங்காவும்தான் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அவர்களிடமிருந்த துணிச்சல் வேறு யாருக்குமில்லை.
நாவலில் ஏலன்-லாகோம்பே-கடித உரையாடல் மதிப்பு வாய்ந்தது. ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய தமிழகம்-மக்கள்-குணாதிசயங்கள் அனைத்தும் மிகையில்லாமல் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. வரலாற்றைச் சொல்ல தேர்ந்தெடுத்த வடிவமும்-உரையாடலும் எஸ்.ராமகிருஷ்ணனின் திறமையை காட்டுகிறது. நாவல் எழுதப்பட்ட விதம், நாவலின் மையம், மொழி, கால குழப்பமின்மை எல்லாமும சேர்ந்து நாவலைத் தொடர்ந்து படிக்க தூண்டுகின்றன.

அறிந்ததிலிருந்து அறியாதவற்றுக்கு, தெரிந்ததிலிருந்து தெரியாதவற்றுக்கு இட்டு செல்வதே இலக்கியப் படைப்பின் அடிப்படை அலகு. நாவல் என்பது கதை சொல்வதுதான். அதே நேரத்தில் கதை சொல்வது மட்டுமே அல்ல. தகவல்கள் கட்டாயம் இருக்க வேண்டும். ஆனால் தகவல் களஞ்சியமாக இருக்கக்கூடாது. வாழ்க்கை அனுபவங்களைத் தகவல்களாக இல்லாமல் வாழ்க்கை அனுபவங்களாக மாற்றுகிற நுட்பம்தான் ஒரு படைப்பின் வெற்றியாக இருக்கும். ஒரு சிறந்த படைப்பு வாசகனின் சிந்தனைக்கும், அவன் இட்டு நிரப்புவதற்கும் இடம் தரும். அப்படியான சந்தர்ப்பத்தைத் துயில் தரவில்லை. நாவலாசிரியர் பேசிக்கொண்டே இருக்கிறார். ஓயாத பேச்சு. நாவலில் வருகிற அனைவருமே நவீன கவிதை மொழியில் தத்துவமாகப் பேசுகிறார்கள். தன் இயல்பில் பேசிய ஒரே பாத்திரம்-பொன்னி மட்டும்தான். குழந்தையான திருச்செல்விக்கூட அல்ல. கொண்டலு அக்காவிடம் பேசுகிறவர்களில் ஒரு ஆள்கூட சாதாரணமாகப் பேசவில்லை. வாழ்க்கை வேறுவேறாக இருக்கிறது. எஸ்.ராமகிருஷ்ணன் மிகைநாடிய கலைஞனாக இருக்கிறார். கால் ஊனமாக திருச்செல்வி நாவல் முழுக்க ஓடிக்கொண்டேயிருக்கிறாள். விபச்சாரியான ரோமி சிறுவனான அழகருடன் படுக்க ஆசைப்படுவது விநோதம். நூற்றுக்கணக்கான ஊர்களின் பெயர்கள் வருகின்றன. வெறும் பெயர்களாக. எந்த அடையாளமும், தனித்துவமும் இல்லை. ஊர்கள்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்த அடையாளத்தை வழங்குகின்றன.
ஒரு இளம் எழுத்தாளனுக்கு மொழி மீதான கவர்ச்சி இருக்கலாம். எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அவ்வாறு இருப்பது நியாமில்லை. அலங்காரமான சொற்களின் மீதான கவர்ச்சி படைப்பாளியை வீழ்த்திவிடும். மொழியைக் கையாள்வதில் சிக்கனமும், கூடுதல் கவனமும் அவசியம். அவ்வாறு இல்லாதப்பட்சத்தில் அதுவே பலகீனமாகிவிடும். அதுதான் துயில் நாவலில் நிகழ்ந்திருக்கிறது. “துண்டிக்கப்பட்ட பல்லியின் வால் தனியே துடித்துக்-கொண்டிருப்பதுபோல தங்களின் கண்முன்னே பகல் துடித்து கொண்டிருப்பதை அவர்கள் பார்த்தபடியே இருந்தார்கள் (27)”, “மேய்ச்சலுக்குப்போன ஆடுகளை ஒட்டிக்-கொண்டு போவதுபோல யாரோ தெற்காக மேகங்களைக் கொண்டு-போய்க்-கொண்டிருந்தார்கள். (139)”, “அப்பாவின் நினைவு தண்ணீரில் நகர்ந்து செல்லும் மேகம்போல சத்தமில்லாமல் ஜிக்கிக்குள் ஊர்ந்து செல்லத்துவங்கியது.” (296)”, “அப்பாவின் சம்பாத்தியத்தில்தான் அம்மாவின் தங்கைகள் யாவரும் திருமணம் செய்துபோனார்கள்.” (301), “அந்த மழை திருடனைத் துரத்தி ஓடும் ஊர் மக்களின் ஆவேசத்தைப் போலிருந்தது.” (439), “தண்டவாளங்கள் மீது கம்பளி பூச்சி ஊர்ந்து செல்வதுபோல மெதுவாக முக்கி முக்கி சென்று கொண்டிருந்தது-ரயில் ” (23), “சூடு தாங்கா ரயில்வே கிராதிகள் முறுக்கேறி திமிறிக்கொண்டிருந்தன.”(23), “புழுதி படிந்து கசங்கிகிடந்த காகிதம் ஒன்று வெயில் தாளாமல் நடுங்கியபடி இருந்தது” (23), “ரயில் சீற்றத்துடன் பெருமூச்சிட்டபடி நின்று-கொண்டிருந்தது” (58), “நாங்கள் மழையின் முதுகைக்கூட பார்க்கவில்லை” (455), இதுபோன்ற கவித்துவமான ஆனால் பொருள் தராத அல்லாத முரண்பட்ட பொருள் தருகிற வாக்கியங்கள் நாவல் முழுவதும் நிறைந்து இருக்கின்றன. இப்படியான வாக்கிய அமைப்புகள் நாவலுக்கு வலு சேர்ப்பதற்குப் பதிலாக பலகீனத்தை உண்டாக்கும்.

---------------துயில்,
-எஸ்.ராமகிருஷ்ணன்

உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை - 18, விலை 350/-

பெப்ரவரி 2012 - ஆசிரியர் பக்கம்

எழுத்தும் தண்டனையும்


எழுத்து தண்டனையெனில்
எழுதுகிறவர்களுக்கா? படிப்பவர்களுக்கா?
படிப்பவர்களுக்கு என்றால்
படிக்காமல் போகலாம்
எழுதுகிறவர்களுக்கு என்றால்
எழுதுவானேன்?
விவரம் அறியும் பருவத்திலேயே
சுவரில் கிறுக்கும் குழந்தைக்கு
எழுத்து, தண்டனையா?
படிக்காமல் இருப்பதும் எழுதாமல் இருப்பதும்
சுயதண்டனைகள் அல்லவா?
படிப்பதும் எழுதுவதும்
மனசாட்சியின் தண்டனையிலிருந்து
தப்பிக்கத்தானோ!
படிக்கவிடாமலும் எழுதவிடாமலும்
தடுப்பவர்களே தண்டனைக்குரியவர்கள்.

தாமத வருகைக்கு
சிறுசிறு தவறுகளுக்குப்
பள்ளிக்கூடத்தில்தான்
எழுத்து, தண்டனையாகிறது.
எண்ணும் எழுத்தும் கண்கள் என்று
சொல்லிக்கொண்டே
இம்போசிஷன் என்று
எழுத்தைத் தண்டனையாக
இளம்வயதில் பதிக்கிறோம்.
தண்டனை என்றால்
பயமும் வெறுப்பும் வரும்.
எழுத்தில் வெறுப்பு வந்தால்
படிப்பதில் வெறுப்பு வராதா?
படிப்பதற்காக அனுப்பப்படும்
பள்ளிக்கூடங்களில்
எழுத்தில் வெறுப்புத்தீ!

ஜெய்ப்பூரில் இலக்கியத்திருவிழா.
எழுத்தாளர்களும் வாசகர்களும்
இருக்கவிரும்பும் உலகம்
2006 முதல் நடந்துவருகிறது
இந்த ஆண்டு ஜனவரி 20- 24
சல்மான்ருஷ்டி தடுக்கப்பட்டார்
The satanic verses
சிந்திப்பதற்கு
யாருக்கும் எப்போதும் தடையில்லை
வெளிப்படுத்தும் போதுதான் தகராறு.
வரலாற்றில் பிப்ரவரி
சிந்தனை வெளிப்பாட்டிற்குத்
தண்டனை வழங்கும் புனிதமாதம்
புருனோ (G iordam o Bruno) வைக்
கைது செய்தனர்;
மணிக்கணக்கில் தலைகீழாகத்
தொங்கவிட்டனர்;
கண்களைக் குத்தினர்.
கட்டுப்பட மறுத்த புருனோவை
உயிருடன் எரித்தநாள்
பிப்ரவரி 17, 1600.
சல்மான்ருஷ்டிக்கு
மரணதண்டனை (Fatwa) விதிக்கப்பட்ட நாள்
பிப்ரவரி 14, 1989
அவருக்கு ஒன்றும் ஆகவில்லை
ஆனால் அவரது புத்தகத்தை
ஜப்பானில் மொழிபெயர்த்தவர்
1991 இல் கொல்லப்பட்டார்.
சல்மான்ருஷ்டியின் எழுத்து,
தரமற்றதாக இருக்கலாம்
அவரைப்படிப்பது
வெளிநாட்டில் வாழ்வதால் போற்றுகிற
இந்தியத் தாழ்வுமனப்பான்மையாக இருக்கலாம்.
ஆனால் சல்மான்ருஷ்டியின்
இலக்கியச் சேவைக்காக
அட்லாண்டா, எமரிக்
பல்கலைக்கழகத்தில் பதவி,
புக்கர் பரிசு
1945க்குப் பிறகு மிகச் சிறந்த
50 எழுத்தாளர்கள் வரிசையில்
டைம்ஸ் இதழ் தந்த 13ஆவது இடம்
ஐரோப்பிய, அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில்
மதிப்புறு முனைவர் பட்டங்கள் -
தாழ்வு மனப்பான்மை
இந்தியர்களுக்கு மட்டுமல்ல போலும்!

ஆண்டவனை மறுத்ததால்
நக்கீரன் எரிக்கப்பட்டான்.
திருமாலுக்கு எதிராகப் பேசியதால்
இரணியன் கிழிக்கப்பட்டான்.
அப்பரைக் கட்டிக் கடலில் போட்டார்கள்.
இராமனைப் போற்றியவர் கண்களைப் பறித்தார்கள்
நந்தனை நெருப்பில்... வள்ளலாரை அறைக்குள்...
உலகத்தமிழ்மாநாட்டிலிருந்து
கார்த்திகேசு சிவத்தம்பி வெளியேற்றம்.
நமது நாடு
மிகப்பெரிய ஜனநாயக நாடு
எழுத்துரிமையும் பேச்சுரிமையும்
சுதந்திரத்தின் மூச்சுக் காற்றுகள்
எழுத்தை எழுத்தால் பேச்சைப் பேச்சால்
மறுக்கலாம்; மாற்றலாம்.
எழுதுகோல் அல்ல எழுத்தே ஆயுதம்
எழுத்து இல்லாமல் அதிகாரம் இல்லை.
எழுத்தை அதிகாரம் எதிர்க்கலாமோ?
எழுத்தாளர்கள்
சாதி மதம் நாடு கடந்த
உலகக் குடிமக்கள்.
அவர்கள் வாழ்நிலை வேறு
வாழ விரும்பும் உலகம் வேறு
அடிமைப்பட்ட இந்தியாவில்
ஆனந்தப் பள்ளு ஆடியவன் பாரதி.
வரவிரும்பிய உலகை வரவேற்க
வாழும் உலகின் கதவுகளை உடைக்கிறார்கள்
வாழும் உலகைப் போற்றிப் பெறும்
விருதுகளைவிட
வரவேண்டிய உலகிற்கு வழிதிறப்பதில்
விழுப்புண் ஏந்துகிறார்கள்.
எழுத்தாளரின் சுதந்திரத்திற்கு
எழுத்தின் தரமதிப்பீடு தீர்வாகாது
அண்மையில் நடந்த புத்தகக் காட்சியில்
நீதிநாயகம் சந்துரு சொல்லியிருக்கிறார்
“ஓர் எழுத்தாளரின் நூல்கள் தாக்கப்பட்டால்
ஒரு சமுதாயத்தின் பண்பாடு அழிக்கப்படுகிறது.
ஓர் எழுத்தாளர் தாக்கப்பட்டால்
ஒரு வரலாறு அழிக்கப்படுகிறது”
ஆம்! ஒரு சமுதாயத்தின்
பண்பாடு என்பதும் வரலாறு என்பதும்
ஒட்டுமொத்த மனிதகுல வரலாற்றில்
உள்ளடங்கும் தானே!
வாழும் உலகை எப்படிப் பார்ப்பது?
வரவேண்டிய உலகை வரவேற்பது எப்படி என்று
யாரும் யாரையும்
கட்டாயப்படுத்துவதில்
நாகரிகம் தண்டனைக்காளாகிறது.
தடையும் தண்டனையும்
எழுத்திற்கென்றாலும்
எழுத்தாளருக்கென்றாலும்
தலைகுனிவது மானுட நேயமே!
-ம.ரா

பெப்ரவரி 2012 இதழ் உள்ளடக்கம்




கவிதை
  • Grace Butcher
  • நா.விச்வநாதன்
  • பி.முகுந்தராஜன்
  • கே.ஸ்டாலின்
  • அ.ஸ்ரீதர்பாரதி
  • நாகேந்திரபாரதி

கட்டுரை
  • ரதன்
  • கி.நாச்சிமுத்து
  • க.அம்சப்ரியா

நூல் அறிமுகம்
  • இமையம்
  • வெங்கட்சாமிநாதன்
  • மலர்மன்னன்

கதை
  • ஹாரிகெமெல்மேன்
  • வாஸந்தி
  • கமலாதேவி அரவிந்தன்
  • நீ.பி.அருளானந்தம்


கடைசிப்பக்கம்
  • இந்திரா பார்த்தசாரதி

பெப்ரவரி 2012 மாத இதழ்





ஆண்டு சந்தா: (
உள்நாடு)ரூ220/- (வெளிநாடு)US$30
இரண்டு ஆண்டு சந்தா: (
உள்நாடு )ரூ440/- (வெளிநாடு)US$50
ஆயுள் சந்தா: (
உள்நாடு )ரூ5000/- (வெளிநாடு)US$300

அனைத்துத் தொடர்புகளுக்கும்.

பதிப்பாளர்: சேது.சொக்கலிங்கம்
கவிதா பப்ளீகேஷன்: 8, மாசிலாமணி தெரு, தியாகராயநகர், சென்னை-600 017
தொலைபேசி: 24364243, 24322177