Monday, March 5, 2012

தொடர்: காலம் கொன்ற விருந்து - 6



நரசய்யா

இரண்டாவது விரோதியும் நிரந்தர நண்பனும்


‘மணிக்கொடி’ க்கு எழுதும் துணிச்சலைச் சிட்டிக்குக் கொடுத்தவர்   1932-இல் இந்தியா நாளேட்டின் துணை ஆசிரியராக இருந்து பின்னர் சுதேசமித்திரனில் தலையங்கம் எழுதும் துணையாசிரியராகச் சேர்ந்த எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி என்பவர் என்று சிட்டி கூறுவார். அவரிடம் தான் சிட்டி பத்திரிகைத் துறை பயிற்சி பெற்றார். அப்போது சிட்டிக்குத் தனது தமிழ் சொல்லாட்சியின் மீது நம்பிக்கை இருக்கவில்லை. மாறாக ஆங்கிலத்தில் சிறப்பாகவே எழுதிக் கொண்டிருந்தார். ஒருநாள் கிருஷ்ணமூர்த்தி  மணிக்கொடி இதழொன்றைக் காட்டி, சிட்டியை அப்பத்திரிகையில் ஏன் எழுதலாகாது எனக் கேட்டாராம். “தமிழ் இலக்கிய உலகத்திற்கு இப்பத்திரிகை ஒரு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது”  என்று அவர் சொன்னது, தனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது என்கிறார் சிட்டி. சிட்டி நகைச் சுவையுடன் சொன்னது - “தமிழ் இலக்கிய உலகம் என்று அவர் சொன்னது தான் எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது”

அப்பத்திரிகையைச் சிட்டி வாங்கி அதில் எழுதியிருந்த வ. ரா. வின் கட்டுரைகளைப் படித்தபோதுதான் அவருக்கு இப்படியும் எழுதுபவர்கள் தமிழில் உள்ளார்களா என்றும் அச்சில் உள்ள எழுத்துக்கு இவ்வளவு சக்தி உண்டா என்றும் தோன்றியதாம்!  சிட்டி, நான் சாதாரண மனிதன் எழுதும் போது சொன்னார்: “இவ்வளவு உயர்ந்த இலக்கியத்தரமிகுந்த பத்திரிகையில் நான் எழுதினால் பிரசுரிப்பார்களா என்ற சந்தேகம் இருந்தபோதிலும், நண்பர் கொடுத்த யோசனையை ஏற்று, ஒருவித அசட்டுத் தைரியத்துடன், அப்போது சென்னைக்கு காந்தி விஜயம் செய்ததை நினைவு கூர்ந்து, ஒரு நகைச் சுவை கட்டுரை எழுதி அனுப்பி வைத்தேன். சிலநாட்களில் மணிக்கொடியிலிருந்து ஒரு கடிதம் வந்தது. இனிமேல் எழுதாதே என்று புத்திசொல்லி எழுதியிருப்பார்கள் என்று நினைத்துக் கடிதத்தைப் பிரித்துப் பார்த்தேன். அது கு. ஸ்ரீனிவாசனால் எழுதப்பட்டிருந்தது. மணிக்கொடி காரியாலயத்துக்கு வரச்சொல்லி எழுதியிருந்தார்.”

அதைச் சொல்கையில் இவ்வளவு வருடங்களுக்குப் பின்னர் கூட சிட்டி உணர்ச்சிவசப்பட்டார்! அப்போதுதான் முதன் முறையாகச் சிட்டி வ. ரா. வைச் சந்தித்திருக்கிறார். அவருடன் பேசிக்-கொண்டிருந்த ஒருமணிநேரத்தில், அவர் கருத்துகளுக்கு அடிமையாகிவிட்டார் சிட்டி! அன்றிலிருந்து வ. ரா இறுதிவரை அவருடைய நிரந்தர நண்பனாகவும் ஆகிவிட்டார்.

வ. ராமஸ்வாமி பிறந்தது செப்டம்பர் மாதம் 17, 1889 ஆம் வருடத்தில்.  அவருடைய 60 ஆவது வயது நிறைவின் போது, அதாவது 1949 இல் அவரை ஆல் இந்தியா ரேடியோ, ஒலிபரப்பவேண்டி, ரேடியோவுக்கு ஒரு சொற்பொழிவு செய்யுமாறு கேட்டிருந்தது. ஒப்புக் கொண்டு தலைப்பை மட்டும் வ. ரா. தந்திருந்தார். அவர் கொடுத்திருந்த தலைப்பு, “எனது இரண்டாவது விரோதி” என்பதாகும். அன்றைய நிர்வாகியான், ஜி. டி சாஸ்திரிக்கும் சிட்டிக்கு மட்டும் தான் அத்தலைப்பின் பொருள் தெரியும். மற்ற நிர்வாகிகள் குழம்பிப் போயிருந்தனர். வ. ரா. பேச ஆரம்பித்த போதுதான் தலைப்பின் பொருளை விளக்கினார். “நான் பிறந்த வருடம் தமிழில் விரோதி எனப் பெயர் கொண்டது. இன்று எனது அறுபதாவது வயதில் இரண்டாவது விரோதி வந்துள்ளது” என்றார்!

இக்கட்டுரைத் தொடரின் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட காலம் கொன்ற விருந்தாக நான் கண்ட கருவூலத்தில், (சிட்டியின் பாதுகாப்பிலிருந்த பழைய அட்டைப் பெட்டியில்) வ. ரா பற்றிய பல பழைய குறிப்புகள் கிடைத்தன. அவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
வ. ரா. எழுதிய மகாகவி பாரதியார் என்ற நூலின் பழைய பிரதியும் கிடைத்து. வ. ரா. பாரதியைச் சந்தித்த விவரம் அந்நூலின் 4, 5 பக்கங்களில் காணப்படுகிறது.



இந்த நூலை 1944 ல் வெளியிட்டவர் வை. கோவிந்தன் என்பவர். அவர் 23- 8- 55 அன்று மூன்றாவது பதிப்பாக சுந்தரி என்ற வ ராவின் நாவலை வெளியிடுகையில், வ. ரா வின் மகாகவி பாரதியார் நூலை இரண்டாவது பதிப்பாக 1946இ-ல் வெளியிட நேர்ந்த விவரத்தைப் பற்றி எழுதுகிறார்:
“1940 என்று நினைக்கிறேன். 46, முத்துமாரி செட்டி தெருவில் என்னுடைய காரியாலயம் இருந்தது. அங்கே மாடியில் என்னுடைய அறை. ஸ்ரீ தி ஜ. ரங்கநாதன் என் அறைக்கு வந்தார். அப்போது தி. ஜ. ர. நான் நடத்திய சக்தி மாதவெளியீட்டில் ஆசிரியராக இருந்தார். வந்ததும், ‘வ. ரா. வந்திருக்கிறார். உங்களைப் பார்க்கவேண்டுமாம்’ என்றார். ’சரி. வரச் சொல்லுங்கள்’ என்றேன். வ. ரா வும் தி. ஜ. ரவும் வந்தார்கள்.

‘வாருங்கள்’ என்றேன். ‘சரிதானையா. நீர் எனக்குத் தமிழ் எழுதத் தெரியாது என்று சொன்னீராமே’ என்றார். ‘ஆமாம் கொச்சையாக நீங்கள் எழுதுகிறீர்கள். நிறைய நிறையப் பிறமொழிச் சொற்களை உபயோகிக்கிறீர்கள். அதுவும் அல்லாமல் தமிழ்ப் பண்டிதர்களை - அவர்கள் பிழையில்லாமல் எழுதுவதை - வேறு கண்டிக்கிறீர்கள். ஆதலால் உங்களுக்கும் தமிழுக்கும் சம்பந்தமில்லை’ என்று சொன்னேன். ‘உமக்குப் பிடிக்காதையா, இன்னும் கொஞ்ச காலத்தில் நீர், நான் எழுதுவது தான் தமிழ் என்று சொல்லப்போகிறீர்’ என்றார்.

அப்படித்தான் அவர் எழுதிய மகாகவி பாரதியார் என்ற புத்தகத்தை 1944-ஆம் வருஷத்தில் வெளியிட்டேன். தொடர்ந்தாற்-போல, சுந்தரி, வாழ்க்கைச் சித்திரம் என்ற நூல்களையும் வெளியிட்டேன். காரணம் என்ன? ஸ்ரீ வ. ரா. தமிழ்ப் பண்டிதர் அல்ல., தமிழ் மொழியை வளப்படுத்த வந்த புரட்சிக் காரர் என்பதை அறிந்தேன். மக்கள் எல்லோரும் படித்துப் பயன் பெற வேண்டுமானால், வ. ரா. அவர்களின் ஆணித்தரமான தமிழ் நடைதான் வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். பிறகுதான் அவருடைய நூல்களை வெளியிட்டேன்.

ஸ்ரீ வ. ரா. அவர்களைப் புரட்சிக்காரர் என்று சொல்லலாம், தீர்க்கதரிசி என்று சொல்லலாம். மக்களின் எழுத்தாளர் என்றும் சொல்லலாம். அதற்குச் சான்று இந்தச் சுந்தரி என்ற நாவலே போதும்.

படித்துப் பாருங்கள், முப்பத்தெட்டு வருஷங்களுக்கு முன் வெளி வந்த இந்த நாவல் ஏன் இன்றும் வெளிவருகிறதென்று.
இந்த மூன்றாம் பதிப்பு வெளிவருவதைப் பார்க்க வ. ரா. உயிருடன் இல்லை. தமிழ் மக்கள் பயனடையத்தானே இந்தப் புத்தகத்தை எழுதினார். வ. ரா வின் எண்ணம் ஈடேறுகிறதல்லவா?”

இது எழுதப்பட்ட நாள் 25 - 5 - 1955. இந்த நூலின் முதற்பதிப்பு, 1917 இலும், இரண்டாம் பதிப்பு 1946 இலும், மூன்றாம் பதிப்பு மேலே குறிப்பிட்ட நாளிலும் வெளிவந்துள்ளன.

இந்த நாவலின் இரண்டாவது பதிப்புக்கு, வ. ரா. எழுதிய முன்னுரை, சுந்தரியின் புனர் ஜன்மம் என்று தலைப்பு இடப்படிருந்தது.  அதில் “. . .அந்த சமயத்தில் என் கற்பனையில் கருத்தரித்தவள் சுந்தரி. 1915 ஆகஸ்டில் ஆரம்பித்து 1916 மார்ச்சில் சுந்தரியை முடித்தேன். சுந்தரியை வெளியிடுவதற்கு நான் பட்ட கஷ்டத்தைச் சொல்லி முடியாது. சுமார் எண்ணூறு ரூபாய் வரையில் செலவாகும் என்று சொன்னார்கள் அச்சுத்தொழில் நிபுணர்கள். அவ்வளவு பணத்துக்கு நான் எங்கே போக? இதிலும் ஓரளவு டாக்டர் ராஜன் எனக்கு உதவி செய்தார்.  சுந்தரி 1917-ஆம் வருஷம் முற்பகுதியிலேயே வெளி வந்தாள். நான் போட்டது ஆயிரம் பிரதிகள். மூன்று மாதத்துக்குள் அத்தனையும் விற்றுப் போயிற்று. திருச்சியில் கையெழுத்துப் பிரதியிலேயே சுந்தரியயை படித்த நண்பர், சுந்தரி ரொம்ப கடுமையான பாஷையில் இருக்கிறது. உண்மையை, கலையழகோடு சேர்த்துச் சொல்லவேண்டும். இப்பொழுது நீங்கள் எழுதியிருக்கும் முறையினால் மேல் ஜாதிக்காரர்களுக்கும், மடாதிபதிகளுக்கும், சன்னியாசிகளுக்கும் உங்கள் பேரில் ஆத்திரம் உண்டாகும்’ என்றார். 'உண்டாகுமா' என்று கேட்டேன். ஆம் என்று அவர் அழுத்திச் சொன்னார். அப்படியானால் நான் எழுதின முறைதான் சரி என்று சொல்லிவிட்டு அவரிடம் விடை பெற்றுக்கொண்டேன்” என்கிறார்! இதை அவர் எழுதிய நாள் 20.03.1946. முதற் பதிப்பு வந்து கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்குப் பின்னர் வந்த இரண்டாம் பதிப்பில்.



சமர்ப்பணத்தில், ‘எனது பரமகுரு ஸ்ரீமான் அரவிந்தருக்கு’ என்று எழுதியுள்ளார். அரவிந்தரைப்பார்க்க வ. ரா. புதுச்சேரி சென்றார். பாரதியைக் கண்டார். பாரதியுடன் அரவிந்தரைக் காணச் சென்றார். அரவிந்தரை பாரதி முரடன் என்றுதான் அப்போது குறிப்பிட்டாராம்!
இப்பதிப்புக்கு தி. ஜ ரங்கநாதன் முன்னுரை எழுதியிருந்தார். அதுவே அன்றைய் எழுத்துலககை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. முக்கியமாக தமிழ் நாவ்ல்கள் நிலையைப் பார்க்கலாம்: தி. ஜ. ர. எழுதுகிறார்: “நான் ஏராளமாகத் தமிழ் நாவல்கள் படித்த காலம். இந்தக்காலம், அநேகமாகப் பதினைந்து வயதிலிருந்து இருபத்தைந்து வயதுக்குள் பெரும்பாலான வாலிபர்களுக்கு ஏற்பட்டிருக்கும். அந்தக் காலத்தில், நல்லது, கெட்டது, சுவையற்றாது, சுவையுள்ளது குப்பை, கூளம் முத்து மரகதம் அத்தகைய எல்லா நாவல்களும் ஒன்று தான். கதை என்றிருந்தால் போதும்; படித்து விடுவோம். பகுத்தறிய மாட்டோம். எல்லாம் பிடித்தாற்போலத்தான் இருக்கும். ஆனாலும் இதுதான் இலக்கியப்பிரஞ்ஞை உருவாகும் காலம். சுவை திரளும் காலம். கால ஓட்டமும் வாழ்க்கை அனுபவ்மும் சிந்தனைமுதிர்ச்சியும், படித்தவைகளை எல்லாம் சலித்துவிடும். காலவெள்ளம் அடித்துச் செல்லும் அவைகளில் ஒன்றிரண்டுதான் கரையேறும் என்மனதில் அப்படிக் கரையேறின ஒன்று ‘சுந்தரி’ “
வ. ரா வுக்கு உதவிய கணபதிராயன் பற்றிய விவரங்களை அவரே தருகிறார்.

1938 துவக்கத்தில் விரைவாக மக்களிடையே பரவி வந்த ஊடகமான திரைப்படத்தின் ஆற்றலை உணர்ந்து, வ. ரா. ராமானுஜர் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க முயன்றார். அவர் வசனமெழு, அன்றைய பிரபல் எழுத்தாளர்கள் நடிக்க முன் வந்தனர். இளைய ராமானுஜராக ந. ராமரத்தினம், முதியவராக சங்கு சுப்பிரமணீயன், திருக்கச்சியூர் நம்பியாக பிச்சமூர்த்தி நடிக்க ஏ. நாராயணன் இயக்கத்தில் படம் எடுக்கப்பட்டது. தானே நடித்திருந்த-போதும், அன்றைய சிறந்த விமர்சகரான ராமரத்தினம், “ராமானுஜர் ஒரு கண்வலி” என்ற தலைப்பில் அப்படத்தை விமர்சித் திருந்தார்! வ. ரா வும் மற்றோர்களும் தெரிந்துகொண்ட-பாடம், சிட்டி சொற்களில், “திரைப்பட நடிப்புக்கும், இலக்கிய பணிக்கும் உள்ள அல்லது இல்லாத தொடர்பு கடும் சோதனைக் குள்ளாகியது.”

பின்னர் இந்நாடகம், வானொலி-யில் 1985  ல் ஒலிபரப்பப்பட்டது.

வ. ரா வின் மற்ற பழைய விவரங்களைத் தொடர்ந்து பார்ப்-போம்.
(அவர் எழுதிய சில நூல்களின் சிதைந்திருந்த சில முகப்புப் பக்கங்களையும் மற்ற சில பக்கங்களையும் காணலாம்)

No comments:

Post a Comment