Monday, March 5, 2012

மைதிலி மொழிக் கவிதை



டாக்டர் ஷெபாலிகா வர்மா
ஆங்கிலம் வழி தமிழில்: கி. சீனிவாச ராகவன்

பெண்


நான் ஒரு பெண்ணாய்ப் பிறந்து விட்டேன்
அது என் பிழையல்ல
ஆம், பெண்ணாய்ப் பிறந்தது என் பிழையல்ல
உன் கற்பனையின் ஒப்பனையில்
நான் ஒரு சாதாரண மானுட ஜன்மமல்ல --
மாதவம் செய்து பிறந்த மங்கை
தேவியென பூஜிக்கப்படும் தெய்விக நங்கை

ஆனால்,
எதார்த்தத்தில் என் நிலை என்ன தெரியுமா --
பாவம்செய்தோரை பாதாளப் படுகுழியில் தண்டிக்கும்
நரகதேவதையும் கதறியழுவாள் என் அவலக்குரல் கேட்டு
ஆற்றாது நான் வடிக்கும் கண்ணீர்
வற்றாத கோசி நதியாய் பிரவாகமெடுக்கும் --
இருள் சூழ்ந்த இரவுகள்,
வசந்தத்தைக்காணாத வாழ்க்கை
அசோகவனத்து சீதையின் ஆழ்ந்த சோகம்
என் விழிகளில் --

என் ஜாதகத்தில் மட்டுமல்ல
என் சேலைத்தலைப்பின் வேலைப்பாட்டில்கூட
நன்மைக்கு அதிபதியாகும் நட்சத்திரங்களில்லை
சாதகத்தைத்தரும் சந்திரனும் சஞ்சரிக்கவில்லை
பாதகத்தையே தரும் ராகுவும் கேதுவும்தான் அங்கு
அலங்கரிக்கும் சித்திரங்கள்

இந்த இழிநிலை இன்றோடு அகலட்டும்
இனி,
வீசும் காற்றும் என்னை மாசுபடுத்தாது விலகட்டும்
நரம்பும் சதையும், உடம்பில் ஓடும் குருதியும்
இருபாலர்க்கும் ஒன்றே எனில்
ஏற்றத்தாழ்வுக்கு இடமேது
மென்மைத்தன்மை பெண்மைக்குப் பெருமையெனில்
எனக்குமட்டும் ஏனிந்த கொடுமை

பூங்கொடி நான் --
அசைந்தாடுவேன்
தென்றல் வீசினால்
ஆர்த்தெழுவேன்
ஆணாதிக்கம் பேசினால்
பிறந்துவிட்டது புதுயுகம--பெண்களுக்குப்
புரிந்து விட்டது சுதந்திரத்தின் சுகம்

இனி,
அகத்திலும், எங்கள் முகத்திலும்
இருள் என்பதே இல்லை
ஆகாயமே எங்கள் எழுச்சியின் எல்லை
சடங்குகள், சம்பிரதாயங்கள் -- இவை
தடைக்கற்களானால் தகர்த்தெறிவோம்
புதுயுகம், புத்தொளிபரப்பும் புதுப்பிக்கப்பட்ட வானம்
நவீன சமுதாயம் நோக்கி பெண்களின் வெற்றிப்பயணம்

இத்தனை மாற்றங்களுக்கிடையேயும்
என் தாயுள்ளத்தின் கனிவு மாறவில்லையே
கவனித்தாயா மகனே --
கர்ப்பத்தில் உன்னை உருவாக்கி
பத்துமாதம் சுமப்பதில் சுகம் கண்டு
மானுடப்பிறவியை உனக்கு அளிக்கிறேன்
ஆனால்,
உன்னையே படைக்கும் என்னை
ஆட்டிப்படைக்கும் ஆண்டவன் ஆகிறாய் நீ
ஆண்மைய கருத்தாடலைத் தவிக்கவும்
பெண்மைய கருத்தாடலைத் தொடங்கவும்
இதுவே சரியான தருணம்

No comments:

Post a Comment