Saturday, December 3, 2011

கவிதை - பிழைகளின் முகம்

ராம்பிரசாத்

தூரத்துக் காட்டுக்குயிலின்
மெல்லிசையில்
மயங்கிக்கிடந்தது அந்த
அடர்ந்த கானகமும்,
கவிந்த இருளும்...


இயற்கையின் மெல்லிசையில்
பிழை சேர்க்கும்
முயற்சிகளின்றிப் போதலில்
எத்தனை யதார்த்தம்...

கரிய பிசாசென ஆங்கொருவன்
உள் நுழைந்து தன் போக்கில்
மூங்கில் துளையிட்டூதி
முறையாகச் சேர்ந்த பிழைகளை
இசையென கூவிச்சென்றான்...

கானகம் முழுமைக்கும்
அதிர்ந்து ஒடுங்கியது
இயற்கை...

இந்த இயற்கை எத்தனை
மென்மையானது..

கடைசிபக்கம் - ஒற்றைப் பரிமாணசமய, மொழி வெறி வக்கிரங்கள்

இந்திரா பார்த்தசாரதி

ஏ.கே.ராமாநுஜன் ’இராமாயணம்’ பற்றிய கட்டுரை தில்லிப்பல்கலைகழகப் பாடத்திட்டத்தினின்றும் நீக்கப்பட்டிருகின்றது என்பது, அப்பல்கலைக் கழகத்தில் 26 ஆண்டுகள் பணிபுரிந்த எனக்கு அதிர்ச்சியாக இருக்கின்றது.

இது இப்பொழுது ஒற்றைப் பரிமாணச் சிந்தனைவாதிகளின் செல்வாக்கு உயர்ந்திருப்பதைத்தான் குறிக்கின்றது.

இராமாயணம், மஹாபாரதம் ஆகிய இரண்டும், இந்தியப் பண்பாட்டு ஆழ்மனத்தின் இன்றியமையாத நுட்பக் கூறுகளாக அமைந்து விட்டன. இந்தியாவின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் இக்கதைகளை அவர்கள் அவர்களுடைய பண்பாட்டுக்கேற்ப எப்படி உள்வாங்கிக் கொண்டிருக்கின்றார்களோ அதன் வெளிப்பாடாகத்தான் அவ்விடத்தில் இவ்விரு இதிகாசங்களும் உருப்பெற்றிருக்கின்றன. இக்கதைகளின் காப்புரிமை எந்தச்சமய, மொழி ஆதிக்கச்சக்திகளுடனும் இருக்க இயலாது. சில பூர்வகுடிமக்கள் இராமாயணக்கதையில் இராவணந்தான் கதாநாயகன். இது அவர்கள் கலாசார வெளிப்பாடாக இயல்பாகவே உருவானதே தவிர, புலவர் குழந்தை வெளிப்படுத்தியது போல் எதிர்ப்புணர்வின் வடிவம் அன்று. இந்தியாவிலும், கிழக்காசிய நாடுகளிலும் நூற்றுக்கணக்கான ராமாயணங்களும் கிளைக்கதைகளும் இருக்கின்றன. சங்கச் செய்யுட்களிலேயே ராமாயணக் கதையில் புதுச்செய்திகள் பல தென்படுகின்றன.

கோடிக்கரையில் இராம, இலக்குவர்வானரத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியபோது புள்ளினங்களும் அமைதி காத்தன என்று ‘அகநானூற்றில்’ வருகிறது. பக்தி இயக்கதின் போது, இராமகாதை ஆழ்வார்ப் பாடல்களில் பல புதுப்பரிமாணங்களைப் பெறுகிறது. திருமங்கை மன்னன் இராமன் குகனைத் தோழனாகவும் சகோதரனாகவும் ஏற்றுக்கொள்ளும் கதையைக் குறிப்பிடுகிறார். குகனை ஓர் அற்புதமான கதாபாத்திரமாகக் கம்பன் படைத்ததற்கு இது ஆதாரமாக இருந்திருக்கவேண்டும். ‘ஆயிரம் இராமர் உன் கேள் ஆவரோ’ என்று பரம இராமபக்தனாகிய பரதனையே சொல்ல வைக்கின்றது. தமிழ்நாட்டில் நாட்டார்கதைகளில் குகனைப் பற்றிய இவ்வகையான வடிவம் நடைமுறையில் இருந்திருக்க வேண்டும்.
பொய்கையாழ்வார் ஒரு புதுபுராணச் செய்தியையே, அவதாரத்தையே உருவாக்கிவிடுகிறார். இராவணன் பிரும்மாவிடம் வரன் பெறச்சென்ற போது, திருமால் ஒரு குழந்தையாகப் பிரும்மாவின் மடியிலிருந்து இராவணனின் அவன் மறைத்துவைத்திருந்த ஒன்பதுதலைகளையும் எண்ணி அவன் யார் என்று பிரும்மாவுக்குப் புலப்படுத்துகிறாராம். இதுவும் அவர்காலத்திய மக்களிடையே வழங்கிய கதைகளில் ஒன்றாக இருக்க வேண்டும். பூதத்தாழ்வாரும் இக்கதையைக் குறிப்பிடுகிறார். வால்மீகியைக்காட்டிலும், கம்பன் அகலிகைக்கதையை எவ்வளவு நாகரிகமாக, நளினமாக, இலக்கியநயத்துடன் சொல்கிறான் என்று ராமாநுஜன் எடுத்துக் காட்டியிருப்பதுதான் ஹிந்தி வெறியர்களுக்குக் கோபத்தை உண்டாக்கியிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. கம்பன் அடிப்படையில் ஒரு நாடக ஆசிரியன். இக்கதையின் நாடகச் சாத்தியப்பாடுகளை உணர்ந்து அகலிகையை மனச்சிக்கல்கள் நிறைந்த ஒரு complex கதாபத்திரமாக அவன் சித்திரித்திருக்கிறான் வால்மீகி. அகலிகை ஒற்றைப் பரிமாணக் கதாபாத்திரம்.. ஆனால், கம்பன் அகலிகை மனப் போராட்டத்துக்கு உள்ளாகிற மானுடப் பெண். இந்திரன், கௌதமனாக வந்து அகலிகையுடன் உறவு கொள்வதைப் பின்புலக் காட்சிகளுடன் ஒரு நாடகச் சித்திராமாக்குகிறான் மகாகவி கம்பன். வால்மீகியின் அகலிகைக்கு அவன் கௌதமனில்லை, இந்திரந்தான் என்று உடலுறவு கொள்வதற்கு முன்பே தெரியும். கம்பனின் அகலிகைக்கு உடலுறவு கொள்ள ஆரம்பித்த பிறகுதான் தெரிகிறது. அவள் ஆழ்மனம் இந்திரனை நாடியிருக்க வேண்டுமென்பதை அவள் அப் பொழுதுதான் உணர்கிறாள். ஆழ்மன உனர்வுக்கு அவள் தடை போடவிரும்பவில்லை. சிறுசிறு நிகழ்வுகளையும் அற்புதமான சொல்லோவியங்களாக, நாடகக்காட்சிகளாகக் காட்டுவதுதான் கம்பனின் கைவண்ணம்.

தொடர்- காலம் கொன்ற விருந்து - 4


சர்ச்சையின் விளைவு திரண்டது திறனாய்வு
நரசய்யா




கட்டுரைகள் மூலமாகத் தாக்கிக்கொண்ட இந்த ஜாம்பவான்கள், தனிப்பட்ட முறையில் ஒருவிதக் காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல்தான் இருந்திருக்கிறார்கள். அந்த விவரங்களை, அதாவது, சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தவற்றை இப்போது பார்க்கையில் அம்மேலோர் எவ்வளவு திடமாகத் தாங்கள் நம்பியதை எழுதினார்கள் என்பது தெரிகிறது.
இலங்கையிலிருந்து வ. ரா. சுதேசமித்திரனுக்கு எழுதிய கட்டுரை டிசம்பர் 14, 1935 அன்று பிரசுரமானது. அது ஒரு நீண்ட கடிதம். அதில் அவர் தான் கூறிய ’ஒரு வரிக்கு ஈடாகாது’ என்ற சொற்கோவையை மட்டும் எடுத்துக்கொண்டு, கல்கி எழுதியதற்குப் பதிலாக இவ்வாறு கூறுகிறார்: “ஒரு வரி, ஒரு வரியென்று அதைப் பிடித்துக் கொண்டு தொங்க வேண்டாம். ஒரு குதிரை, ஒரு குதிரை ஒரு ராஜ்ஜியத்துக்கு ஒரு அதிரை என்று அவதிப்பட்ட 3ஆவது ரிச்சர்ட் தனது பட்டத்தை இழந்தான். (The reference is from Richard III the play by Shakespeare; Richard is unhorsed on the field at the climax of the battle, and cries out, "A horse, a horse, my kingdom for a horse!" Richmond kills Richard in the final duel). ஒரு வரி, ஒரு வரி என்று வேறு எதுவும் அகப்படாமல் அதைப் பிடித்துக் கொண்டு தொங்கினால் அது அறுந்து விழுந்து காயம் ஏற்பட்டாலும் ஏற்படும். அந்தக் கம்பங்கூத்தாடி வித்தை வேண்டாம்.என்று அதை ரா. கி. விட்டு விடுவாராக.”

வேடிக்கை என்னவெனில் அக்காலத்துத் தமிழ் எழுத்தாளர்கள் எல்லாரும் சில பேர்களைத் தவிர ஆங்கில இலக்கியத்திலும் புலமை பெற்றவர்கள். ஆகையால் சாதாரணமாகவே இலக்கியத் தொடர்பு கொண்ட ஆங்கிலச் சொற்றொடர்களைப் பயன் படுத்தினார்கள். அந்த வகையில் வ. ரா. கடிதத்தில் “ப்ரோமெதியஸ் அன்பவுண்ட்” என்ற சொற்றொடரைப் பயன் படுத்துகிறார்!

கிரேக்க புராணத்தின் படி, ப்ரோமெதியஸ் என்ற வீரன், டைடனின் குமாரன். மனித குலத்திற்காகப் போராடியவன். தேவலோகத்திலிருந்து ஜீயஸின் தெய்வீக அக்னியைத் திருடிக் கொண்டுவந்தவன். ஆகையால் தண்டிக்கப்பட்டவன். அவனை ஒரு பெரிய பாறையில் கட்டிவைத்துத் தினமும் கழுகுகள் அவனது ஈரலைத் தின்னும்படி செய்யப்பட்டான். ஆனால், கழுகு தின்றவுடன் அவனது ஈரல் மறுபடியும் வளர்ந்து விடும். பிறகு அவன் விடுவிக்கப்பட்டான். அது ப்ரோமெதியஸ் அன்பவுண்ட் என்ற கதையில் வருகிறது. இதைத்தான் வ. ரா. இங்கு குறிப்பிடுகிறார். அதன் காரணம் கல்கி, ”பாரதியின் எல்லா நூல்களையும் டால்ஸ்டாய் நெருப்பில் போட்டுக் கொளுத்தியிருப்பார்” என்று சொன்னதுதான்! அம்மாதிரியான ஒரு தெய்வீக அக்னியைக் கொண்டுவந்து பாரதியின் படைப்புகளை டால்ஸ்டாய் தீக்கிரையாக்கினால் பரவாயில்லை என்று சொல்கிறார்! “தெய்வீகக் கனலை வைத்துக் கொளுத்துவதாக இருந்தால் பாதகமில்லை” என்கிறார்! (டால்ஸ்டாயைப் பற்றி கல்கி சொன்னது சுதேசமித்திரன் 1935 டிசம்பர் 7 அன்று “டால்ஸ்டாய் ஒரு மஹான். ஆனால் அவர் ரஸிகருமல்ல; கவியுமல்ல. முதன்மையாக அவர் ஒரு சன்மார்க்கப் போதகர்; சீர்திருத்தக்காரர் என்று தங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். பாரதியாரின், ‘எந்த நேரமும் நின்மையல் மீறுதடி குறவள்ளி சிறுகள்ளி’ என்ற பாட்டை டால்ஸ்டாயிடம் கொடுத்திருந்தால் அவர் ‘பாரதியாரின் புஸ்தகங்கள் எல்லாவற்றையும் நெருப்பு வைத்துக் கொளுத்த வேண்டும்’ என்ற அபிப்ராயம் கொண்டிருப்பார்.”)

பல வருடங்களுக்குப் பின்னரும், அதாவது ஜனவரி 2003இல், சுமார் 68 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்த நிகழ்வுகளை நினைவு கூட்டி, பாரதிக்குத் தமிழர்கள் செய்யவேண்டிய தொண்டைக் குறிப்பிட்டு, பேரா. கா. சிவத்தம்பி இலங்கையிலிருந்து சிட்டிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார். அதில் சிட்டியும் கு. ப. ரா வும் செய்த தொண்டைக் குறிப்பிடுகிறார்.

இப்போது இந்தத் தர்க்க மேடையில் அதாவது மணிக்கொடி குழுவின் ஒரு புனிதப் போரில் பிரவேசிக்கும் சிட்டி, சற்றும் இலக்கியத்தரம் குறையாமல், “பாரதியும் இல்க்கியவிமர்சனமும்” என்ற கட்டுரையை எழுத அது சுதேசமித்திரன் டிசம்பர் 21, 1935 இதழில் பிரசுரமாயிற்று.

இந்த விவகாரம் பலருக்கும் தெரியும். ஆனாலும் ஒரு பதிவு செய்துதான் ஆகவேண்டும். அதாவது இந்தத் தர்க்க உத்வேகத்திலும், தமது நோக்கினை மறக்காது தர்க்கத்தையே சரியான திசையில் செலுத்திச் சென்றவர் சிட்டி தான். அவரது கட்டுரைகள் அவர் கற்ற ஆங்கிலத் திறனாய்வு, மற்றும் பாரதி பக்தி இரண்டும் கலந்து, விருப்பு வெறுப்பின்றி எழுதப்பட்டுள்ளன. தன்னை அறிமுகப் படுத்திகொள்ளும் போதே சிட்டி சொல்கிறார்: “வ ரா. வுக்கு நமஸ்காரம் செய்து நேர்முகமாகப் பேசும் ரா. கி. யின் பேச்சுக்கிடையில் வருமுன் நான் என்னைப் பற்றியும் கொஞ்சம் சொல்லிக்கொண்டால் தான் நீ யார் என்ற கேள்விக்குப் பதிலளிக்கத்தகுந்தவனாவேன். நான் ஷேஸ்பியரையும் ஷெல்லியையும் கடமையாகப் படித்தேன். தாகூரை என் ரசிகத் திறன் சோதனைக்காகப் படித்தேன். பாரதியை சந்தோஷத்திற்காகவும், ஆத்ம திருப்திக்காகவும் படித்தேன். (குட்டிச் சுவராகப் போனாலும் பரவாயில்லை) இந்த நான்கு கவிகளின் கற்பனையையும் அலசிப் பார்த்துவிடவில்லை. ஆயினும் பரீட்சை தேறுவதற்காக ஷேஸ்பியரைப் பற்றிய ஆராய்ச்சிகளையும், ஷெல்லி பற்றிய விமர்சனங்களையும் படிக்க நேர்ந்தது.
“என்னவிருந்த போதிலும், ஒப்பிட்டுப் பார்த்தால், பாரதி தற்சமயம் வெறும் பெயர்தான் என்பதை மறக்க முடியாது. அவரது மேதையை முற்றிலும் சோதித்து அறிந்து விட்டதாக சொல்வது அகம்பாவம் தான் ஆகும். சூரியன் இவ்வளவு யுகங்களாக இருந்து வருவதோடு, இவ்வளவு ஒளி கொடுப்பதில் சூரியனை விட பெரிய நட்சத்திரம் இருக்கமுடியாதென்று சொல்வது புத்திசாலித்தனமான பேச்சு என்போமா? பாரதி புது நட்சத்திரம். அவருடைய முழு ஒளியை நாம் பெறுவதற்கு ஷெல்லி, ஷேஸ்பியர், தாகூர் மூவருடைய மேதையைப் பரிசீலித்து ஆக வேண்டும்”.

சிட்டி எழுதியது இன்று படிக்கையிலும் இன்பம் தருவது. இளங்கோவனும் பி. எஸ். ராமையாவும் எழுதியவை அவ்வாறிருக்கவில்லை. அவர்கள் கல்கியைத்தாக்கித்தான் எழுதினார்கள்.புதுமைப் பித்தனும் கல்கியைத் தாக்கி எழுதியுள்ளதாகச் சிட்டி சொன்னார். ஆனால் அவ்விவரம் எனக்குச் சரியாகத் தெரியவில்லை.

சிட்டிக்குக் கொழும்புவிலிருந்து வ. ரா எழுதிய மற்றொரு முக்கியக் கடிதமும் இப்போது கிடைத்துள்ளது. அது 23.07.1936 அன்று எழுதப்பட்டது. அப்போது தான் சிட்டிக்கு விவாகம் ஆகி ஒரு வருடமாயிருந்தது. இலங்கையில் வ. ரா. தமது 47 ஆவது வயதில் புவனேஸ்வரி (ராஜஸ்தானைச் சேர்ந்த தேவி சிங் என்பவரின் குமாரி) என்ற ஒரு வட இந்தியப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட வருடம். வாழ்த்துகள் அனுப்பிய சிட்டி தம்பதிகளுக்கு இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இக்கடிதத்தில் சில முக்கிய விஷயங்களும் காணப்படுகின்றன. அவரது சென்னை திரும்பவேண்டுமென்ற ஆவலும் அதில் தெரிகிறது.. சிட்டி தம்பதிகளுக்கு என்று தான் ஆரம்பிக்கிறார். அதில் அவர் குறிப்பிடுவது. “உங்களுடைய இரண்டு நமஸ்காரங்களையும் அப்படியே எனது ’உயர்ந்த பாதி’க்கு கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டேன். எனக்கு ஒரு நமஸ்காரமும் கிடைக்கவில்லை.... என்னுடைய மூளை உண்மையிலேயே கொதித்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். என் கலியாண விஷயத்தை ஒருவருக்குமே நான் தெரிவிக்கவில்லை. ’வீரகேசரியில் தான் பிரசுரம் செய்தேனா? இல்லை. கொழும்புவிலும் ஒருவருக்கும் தெரியாது. இரண்டொருவருக்குத்தான் துவக்கத்தில் தெரியும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அது பரவி விட்டது. விளம்பரம் பிடிக்கவில்லை. வாழ்க்கையை வாழ்ந்து காண்பித்தால் அதுவே தலைமுறை தலைமுறையாக ஜில்லா ஜில்லாவாக பரவி விளம்பரமாகி வரும் என்பது என் சித்தாந்தம்.” கடிதத்தை முடிக்கையில், ‘சென்னைக்கு வந்து எவ்வளவோ செய்ய வேண்டும். . .” என்கிறார். அவர் சென்னைக்கு வரவேண்டுமெனத் துடித்துக் கொண்டிருந்தார். ஆயினும் அப்போதைக்கு ஒன்றும் சரியாக அமையவில்லை. கு.ப.ரா.வுக்கு 1935 டிசம்பர் 3, அன்று எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார். “இன்னும் நாலைந்து மாதம் கொழும்பில் இருப்பேன். ஒரு வருஷ ஒப்பந்தத்தின் பேரில் இங்கு வந்தேன். அது முடியும் முன்னரே, இந்தியாவுக்குத் திரும்பி வந்து விட வேண்டுமென்று துடித்துக் கொண்டிருக்கின்றேன். ஏதோ பக்குவமான வேலை தமிழ் நாட்டில் செய்யலாம் போல அறிகுறிகள் காணப்படுகின்றன. விவரமாக அதைப் பற்றி எழுதமுடியாவிட்டால், நேரில் வந்து சொல்லுகிறேன்.”

ஆனால் உடனே அவர் இந்தியா திரும்பிவிடவில்லை. சிட்டிக்கு அவர் எழுதிய கடிதத்தில் கண்டது போல, அடுத்த வருடமே அவருக்குக் கொழும்பு நகரத்திலேயே திருமணமாகிவிட்டது.

கவிதை: பாலநாயகர்



கடவுத்துதி
எண்ணிக்கையற்று
பரவிக்கிடக்கிறது ‘..........’
எறிந்த எரிதழலின் பொறிகள்
பரிபூரணங்களாக இல்லாவிட்டாலும்
அதாவதான வேளைகளில்
லௌகீகத்தின் மீட்சிபெற்று
ஆனந்தம் துய்த்திருக்கிறேன்.

கடனென்றில்லாமல்
காணிக்கையின் பால்
நின் பாதம் பற்றுகிறேன்
ஏன் ஏனென்று
எங்கு எப்படியென்று
எதுவுமில்லாத நீ கடவுளெனில்
இங்கு நான் யார்?
சதா காலமும் உன்னை
சபித்தால் நாஸ்திகனா?!
சதாசிவ உதாரணமும்
உன்னைத் துதிக்க அடியவனா?!
துதி கேட்கவா
துவங்கியிருக்கிறாய் உயிர் விளையாட்டை.
கடமையும் கடனும்
எதுவென நிரூ பணிக்க
எல்லாம் மாயையெமெனில்
நீ மட்டுமெப்படி நித்யமாக?!

ஆயினும்,
பரிபூரணங்களாக இல்லாவிட்டாலும்
நின் பாதம் பற்றுகிறேன்.
இங்கு நான் யார்?
எதுவுமில்லாத நீ கடவுளெனில்
கடவுத்துதி கர்மம் எதற்கு?

டிசம்பர் 2011 இதழ் உள்ளடக்கம்

கவிதை
பாலநாயகர்
நீலமணி
ஜனநேசன்
பொ.செந்திலரசு
கே.ஸ்டாலின்
சசி அய்யனார்
செழியரசு
ராம்பிரசாத்
ப.மதியழகன்

நூல் மதிப்புரை
வெங்கட்சாமிநாதன்
சக்தி அருளாந்தம்
வே.சபாநாயகம்

கதை
மலர்மன்னன்
ம.ராஜேந்திரன்
ஸிந்துஜா
லாவண்யா
எஸ்.ஷங்கரநாராயணன்
ஏ.என்.தேவகி

தொடர்
நரசய்யா

கடைசிப்பக்கம்
இந்திரா பார்த்தசாரதி

டிசம்பர் 2011 மாத இதழ்






ஆண்டு சந்தா: (
உள்நாடு)ரூ220/- (வெளிநாடு)US$30
இரண்டு ஆண்டு சந்தா: (
உள்நாடு )ரூ440/- (வெளிநாடு)US$50
ஆயுள் சந்தா: (
உள்நாடு )ரூ5000/- (வெளிநாடு)US$300

அனைத்துத் தொடர்புகளுக்கும்.

பதிப்பாளர்: சேது.சொக்கலிங்கம்
கவிதா பப்ளீகேஷன்: 8, மாசிலாமணி தெரு, தியாகராயநகர், சென்னை-600 017
தொலைபேசி: 24364243, 24322177

Saturday, November 5, 2011

காலம் கொண்ற விருந்து-3:மணிக்கொடியும் போர்க்கொடியும்

நரசய்யா



டி. எஸ் சொக்கலிங்கம், வ. ரா வைப்பற்றி எழுதுகையில் (வ. ரா. மணிமலர்) சொல்வார்: “1934 தமிழ்நாட்டிற்கு ஒரு முக்கியமான காலம். அதில் ஏற்பட்ட மாறுதல்களை எப்போதும் மறக்கமுடியாது. இன்று தமிழ் நாட்டில் தமிழ் மொழியிலும் புத்தக வளர்ச்சியிலும் ஏற்பட்டிருக்கும் அபிவிருத்திகள் எல்லாம் அந்த மணிக்கொடி காலத்திற்குப் பின்னதாக ஏற்பட்டதுதான். அந்த மாறுதல்களை ஏற்படுத்தியதற்கான முக்கிய பங்கு வ. ரா.வைச் சேரவேண்டும்” அவ்வாறு தனது உழைப்பால் முன்னிறுத்திய மணிக்கொடியை விட்டு வ. ரா விலகியது சோகக் கதை. இவ்வளவு சிறந்த நண்பர்களுள் என்ன கருத்து வேற்றுமை இருந்திருக்கலாம் எனத் தெரியவில்லை.

தொடர்ந்து வ. உ. சியின் உந்துதலால் கொழும்பு சென்று அவ்வூரிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகையான வீரகேசரியில் சேர்ந்தார். (வ. ரா வுக்கு 1935, மே மாதம் 8 ஆம் தேதி, வ. உ. சி எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “தேசத்திற்கு சேவை செய்ய வெளிக்கிளம்புக. கொழும்பு ‘வீரகேசரி’ தினசரிக்குத் தலைமை ஆசிரியர் தேவை. அப்பதவியைத் தாங்கள் வகித்து தேசத்திற்கு சேவை செய்ய வேண்டுமென்பது எனது விருப்பம். அதன் அதிபர் எனது நண்பர். நல்ல தேசாபிமானி. என் சொல் படி தங்கள் செலவுக்குப் பணம் கொடுப்பார்.... கடவுள் துணை. தங்கள் அன்பன் வ. உ. சிதம்பரம்.”)
வீரகேசரி தலைப்புக் கடிதக் காகிதத்தில் (Letter head) 31.2.1935 அன்று, வ. ராமஸ்வாமி ஐயங்கார், கு.ப. ராஜகோபாலனுக்குக் கொழும்புவிலிருந்து கடிதம் எழுதுகிறார்: அதில் அவர் சென்னையை விட்டுச் சென்றதைப் பழங்கதை என்று குறிப்பிடுகிறார். “முதலில் நான் சற்று வருத்தப்பட்டதுண்டு. ஆனால் என்னையே நான் தேற்றிக் கொண்டுவிட்டேன்” என்றும் சொல்கிறார்.

அக்கடிதம் எழுதுவதன் காரணம் விகடனில் வெளியிடப்பட்ட கடிதங்கள் தாம்! “நெல்லை நேசன் செய்த வேலையைப் பார்த்தீர்களா? ஆள் சேர்க்க எத்தனித்து, ஆனந்த விகடனுக்குப் பகிரங்கக் கடிதம் எழுதியிருப்பதையும் அதற்கு ரா.கி. பதில் கொடுத்திருப்பதையும் பார்த்திருப்பீர்கள். ஆனந்த விகடனை ‘ஆட்சேபித்து’ யாரேனும் பத்திரிகையில் எழுதுவார்களோ என்று பார்த்துக் கொண்டிருந்தேன் ஒருவரையும் காணோம். கடைசியாக நானே ஒருவாறு ஒரு மறுப்பு எழுதி சுதேசமித்திரனுக்கு அனுப்பினேன். அது நவம்பர் மாதம் 30 ஆம் தேதி சனிக்கிழமை பத்திரிகையில் வெளியாகியிருப்பதை, நேற்று கொழும்பில் படித்து ஒருவாறு மன நிம்மதி அடைந்தேன். ரா. கி இவ்வளவு அநாகரீகமாக எழுதுவார் என்று நான் நினைக்கவேயில்லை.”

இக்கடிதத்தில் இரு விஷயங்கள் தெளிவாகின்றன. இக்கடிதம் எழுதுகையில் கூட ‘இலக்கிய மாணாக்கன்’ என்ற பெயரில் எழுதியது நெல்லை நேசன் என்பவர் பி. ஸ்ரீ. ஆசார்யா தான் என வ. ரா. நம்பினார். (கல்கி அதை எழுதியது நெல்லை நேசன் இல்லை என்றுதான் சொன்னாரே ஒழிய யாரெழுதியது எனக் கூறவில்லை. சிட்டி அதுவும் கல்கி எழுதியது தான் என நினைப்பதாக என்னிடம் கூறினார். இதைக் குறித்து, வ.ரா. சுதேசமித்திரன் டிசம்பர் 14, 1935 இல் எழுதிய கட்டுரையில் விவரிக்கிறார்: “நெல்லை நேசன் இலக்கிய மாணாக்கன் என்ற பெயருடனும் கட்டுரை எழுதுவதுண்டு. அந்த அனுபவத்தைக் கொண்டு இலக்கிய மாணாக்கன் என்ற பெயர் பூண்டு ஆனந்தவிகடனில் எழுதினார் என்று ஊகம் செய்தேன். அவ்வாறு ஊகம் செய்தது தவறு என்றும் நண்பர் நெல்லை நேசன் எழுதவில்லை என்றும் அன்பர் ரா. கி. எழுதியிருப்பதை அறிந்துகொண்டு நண்பர் நெல்லை நேசனுடைய பெயரை ஆனந்தவிகடனில் புகுத்தியதற்காக வருந்துகின்றேன். இரண்டு பேரும் ஒருவராய் இருந்தாலும், தனித்தனி பேர்வழியாக இருந்தாலும் விஷயம் மாறிப்போய்விடாது. நண்பர் நெல்லை நேசனுக்கு மனவருத்தம். எழுதி இருந்தாலும் அவர் என்னை மனப்பூர்வமாக மன்னிப்பார் என்று எனக்குத் தெரியும்”)

இரண்டாவது, கல்கியின் பதில் அவர் மனதை வெகுவாகப் பாதித்திருந்தது என்பது. ஏனெனில் ஒவ்வொரு மணிக்கொடி இதழும் வந்தவுடன், ஆரம்ப நாட்களில் கல்கி மணிக்கொடி காரியாலயத்திற்கு வந்து பாராட்டுவார் என ராமையா கூறியுள்ளார்.
இந்தக் கடிதத்தில் தொடர்ந்து அவரெழுதியிருப்பது: “ரா. கி.யின் வேலை எளிது. நம்முடைய வேலை கொஞ்சம் கஷ்டமானது. ஏனெனில் ஜனங்களின் உள்ளத்தில் அறிவுத் தாகமும் நியாய உணர்ச்சியும் அதிகமாக ஏற்படவில்லை.” முடிக்குமுன்னர் இவ்வாறு சொல்கிறார்: “இன்னும் நாலைந்து மாத காலம் கொழும்பில் இருப்பேன். ஒரு வருஷ ஒப்பந்ததத்தின் பேரில் இங்கு வந்தேன். அது முடியுமுன்னரே இந்தியாவுக்குத் திரும்பி வந்து விடவேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறேன். ஏதோ பக்குவமான வேலை இந்தியாவில் செய்யலாம் போல அறிகுறிகள் காணப்படுகின்றன. விபரமாக, அதைப் பற்றி எழுத முடியாவிட்டாலும் நேரில் வந்து சொல்கிறேன். இந்தக் கடிதம் ‘இரட்டையர்களாகிய’ உங்கள் இருவருக்கும் எழுதியது என்பதை நினைப்பூட்டத் தேவையில்லையே? உங்கள் அன்புள்ள வ. ராமஸ்வாமி” என்று முடித்துள்ளார்.

சாதாரணமாக இலக்கிய இரட்டையர் களாக அறியப்பட்டவர்கள் கு. ப. ரா வும், ந. பிச்சமூர்த்தியும் தான். ஆனால் வ. ரா வின் வாக்கைத் தெய்வ வாக்காக எடுத்துக் கொண்டது, முக்கியமாக சிட்டிதான்! ஆகையால் இங்கு சிட்டியும் கு. ப. ரா வும் இரட்டையர் ஆகிவிட்டனர்.

அக்கடிதம் சிட்டி கைகளுக்கு வந்தபோது, ரா. கி வின் ‘பகிரங்கக்’ கடிதம் சுதேசமித்திரனில் வெளிவந்திருந்தது. வ. ரா. வின் நான்கு பக்கக் கடிதத்தைமணிக்கொடி காரியாலயத்தில் சிட்டி படித்துக் காட்ட நண்பர்களிடையே பேச்சு நடந்தது. அங்கு (1935 செப்டம்பர்) ராமையா, புதுமைப் பித்தன், ஆர்யா, செல்லப்பா ஆகியோர் இருந்தனர். சி சு. செல்லப்பா “அந்த விவகாரம், தனக்கும் கல்கிக்கும் உள்ள கருத்து மோதல் இல்லை; மற்றவர்களும் அதில் ஈடுபடவேண்டும் என்று எதிர்பார்ப்பது போல அமைந்திருந்ததாக எனக்கு ஞாபகம்” என்கிறார் ஆகையால் சிட்டிதான் பதில் எழுதவேண்டும் என்று வலியுறுத்தினார். உடனே சிட்டியின் முகத்தில் பிரகாசம் தெரிந்த்தாக செல்லப்பா கூறுவார். “நான் சொல்றேன் நீ எழுது” என்றாராம் சிட்டி! அவ்வாறு அக்கட்டுரை எழுதி முடிக்கப்படுகையில் நள்ளிரவு தாண்டிவிட்டது. அடுத்த வாரமே அது சுதேசமித்திரனில் வெளிவந்தது. (சிட்டி சாதாரணமாக எதற்கும் உணர்ச்சி வசப்படுபவர் இல்லை. ஆனாலும் இப்பகுதியை அவர் எனக்கு விளக்கிக்கொண்டிருக்கையில், அந்நாளைக்கே அவர் சென்று விட்டது போல எனக்குத் தோன்றியது!)

பின்னர் ராமையாவும் புதுமைப் பித்தனும் தினமணியில் இரண்டு கட்டுரைகள் எழுதினார்கள். ஆனால் அவை கல்கியைத் தாக்கியே எழுதப்பட்டவை! இதைப் பற்றி விவரமாகவே ஆய்ந்துள்ளவர்கள் சிவத்தம்பியும் மார்க்சும். (பல வருடங்களுக்குப் பின்னர், இதை நினைவூட்டி, கா. சிவத்தம்பி சிட்டிக்கு எழுதிய கடிதமும் எனக்குக் கிடைத்துள்ளது. அவர்கள் சொல்வது போல, அப்போது தமிழ் இலக்கிய ஜாம்பவான்கள் இரு கோஷ்டிகளாகப் பிரிந்துவிட்டனர். மணிக்கொடி கோஷ்டியில் சிட்டி ஒருவர் தான், இலக்கியத் திறனாய்வு முறையில், விருப்பு வெறுப்பு இன்றி, பாரதி எழுத்துகளை ஆராய்ந்தார். அவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள் கு. ப. ரா, செல்லப்பா, பிச்சமூர்த்தி ஆவர். மற்றவர்கள், எழுதுகையில் காழ்ப்புணர்ச்சியே மிகுந்திருந்தது. ஆனால் அது அக்காலத்தில், மணிக்கொடி வாரிசு இளைஞர்களை எவ்வளவிற்குப் பாதித்திருந்தது என்பதைக் காட்ட மற்றொரு உதாரணம் பார்க்கலாம். வி. ரா. ராஜகோபாலன் என்றவொரு திருச்சி இளைஞர்; கலாமோஹினி என்ற பத்திரிகையை திருச்சியிலிருந்து நடத்திக் கொண்டிருந்தார். மணிக்கொடி வாரிசாக அறிவித்துக் கொண்டவர். அவர் கல்கி குழுவில் இருந்தவர்களைச் சுலபமாக விட்டு வைக்கவில்லை! இந்த விவகாரம் முடிந்து சில வருடங்களுக்குப் பிறகுகூட கல்கியில் எழுதுவோரை விமர்சனம் செய்துள்ளார்! சாலிவாஹனன் என்ற பெயரில் எழுதுவார். 1942 ஆம் வருடத்தில், டி. கே சிதம்பரநாத முதலியாரை அவரது ராமாயணத் தொடருக்காக விமர்சித்தார். அத்தொடரில் கம்பனின் சில கவிதைகளை டி கே சி மாற்றி எழுதியிருப்பதாக அறிந்து அவரைத் தாக்கினார். (அப்போது சிட்டி ஆங்கிலத்தில் இவ்வாறு எழுதியிருந்தார்: "This is an index of the righteous indignation, the Manikkodi group felt, when the Kalki TKC group arrogated to itself the preservation of Tamil letters"1)

கலாமோஹினியில் வி. ரா. ரா. எழுதிய கவிதை (சாலிவாஹனன் என்ற பெயரில்):

“கங்கு கரையற்ற கலவைக் கம்பன் பாட்டை
கழித்தொழித்துக் கூட்டித்தன் கலப்பைச் சேர்த்து தங்களிடம் உள்ள பெரும் புன்மைப் புத்தித்
தான் தோன்றித்தனம் செருக்கு எல்லாம் தோன்ற
இங்கிவை தான் கமபனுடைக் கனிந்த பாடல்
இவற்றையவன் இவ்வாறே பாடக்கேட்டோம்
எங்களுக்கே தெரியுமவன் கவிதைப் பண்பு
என உணர்த்தி திரிகிறதோர் விஷமக் கூட்டம்..”
தொடர்ந்து சிவனையே எதிர்த்துக் குரலெழுப்பிய நக்கீரனைக் குறிப்பிட்டு,
“மங்கிவிட்ட கொஞ்ச ரச மறம் கொண்டேனும்
மாபாதச் செயலிதனை மடக்காவிட்டால்,
சிங்கமெனச் சிவன் தனையேதிர்த்த கீரன்
சீர் மிகுந்த தமிழ்ப் பெருமை அழிந்தே போகும்”

அப்போதைய காழ்ப்புணர்ச்சியை இது காட்டுகிறது. ஆனால் சிட்டி அது போன்ற உண்ர்வுகளுக்குச் சற்றும் இடம் கொடாமல், சீரிய நிலையில் நின்று வாதம் புரிந்தது, தமிழிலக்கிய உலகத்திற்கே ஒரு முன்னோடி!

ஆனாலும் கல்கி சமயம் கிடைத்த போதெல்லாம் மணிக்கொடி குழுவை நையாண்டி செய்து கொண்டு தான் எழுதிவந்தார்!

மித்திரன் வேண்டுகோளின் படி தொடர்ந்து எழுதப்பட்ட சிட்டி, கு. ப. ரா இருவரின் கட்டுரைகளும் சேர்ந்து ஒரு நூலாக, முதற் பதிப்பு சங்கு கணேசனால் பிரசுரிக்கப்பட்டது. மலிவுப் பதிப்பாக 1937 இல் ஆறணா விலை மதிப்புடன். வ.ராவின் முதல் கட்டுரையைச் சிறந்த முறையில் விவரித்தவர் செல்லப்பா; அது கண்ணன் என் கவியின் அடுத்த பதிப்பில் பின்னணியாக வெளியிடப்பட்டது.

சிட்டியுடன் சேர்ந்து பல ஆய்வுகளைப் பிற்காலத்தில் செய்த சோ. சிவபாத சுந்தரம், இந்த இரண்டாவது பதிப்புக்கு அணிந்துரை எழுதினார். அது 1981 இல் வந்தது (பாரதியின் நூற்றாண்டு விழாவையொட்டி) ஆக, முதற் பதிப்புக்கும் இரண்டாவது பதிப்புக்கும் இடைவெளியே 40 ஆண்டுகளுக்கும் மேலே!

சிவபாத சுந்தரம் இலங்கையில் முதன் முதலாக வ. ரா வைச் சந்தித்தார். தனியாக ஒரு அறையில் இருந்த அவருடன் சௌந்தரராஜன் என்ற நண்பரும் தங்கியிருந்தார். அவர் வ. ரா. வை சோ. சி க்கு அறிமுகம் செய்து வைத்து, “இவர் எனது அம்மான்சேய். வீரகேசரிக்கு ஆசிரியராக வந்திருக்கிறார். இப்போதைக்குத் தங்குவதற்கு வசதியான இடம் கிடைக்கவில்லை. நம்மோடு தங்கலாமா?” எனக் கேட்டாராம்.

அது சிவபாத சுந்தரத்திற்கு மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுத்ததாம்! முப்பதுகளின் ஆரம்ப நாட்களிலேயே அப்போது அங்கு கல்வி அதிகாரியாக இருந்த யாழ்ப்பாணம் தி, சதாசிவ அய்யர், முயற்சியால், பாரதி வரலாறும் (வ. ரா. எழுதியது: இது தான் பாரதியைப் பற்றிய முதல் நூலாகக் கருதப் படுகிறது) அவர் கவிதைகளும் பாட நூல்களில் சேர்க்கப்பட்டுவிட்டன. ஆகையால் வ. ரா. அங்கு அறியப்பட்டிருந்தார்.

1- சாதாரண மனிதன் பக்கம் 74 – 75

ஆசிரியர் பக்கம்

உங்களுடன்
உயிர் அணு உலை
கூடங்குளத்தில் மின்சாரம்
உற்பத்தியாகும் முன்னரே
மக்களிடம் அச்சத்தின் உற்பத்தி.
அச்சத்தின் ஊற்றுக்கண்களை
அடைத்தபின்னே அணுமின் உற்பத்தித் தொடங்குமென
அரசுகளின் உறுதிமொழிகள்.
மின்தடைப் பிசாசுகள் ஓடுமென்றும்
நல்லகாலம் பிறக்குமென்றும்
நம்பிக்கை விற்கும் விஞ்ஞானக் கோடாங்கிகள்.
விமான விபத்து, ரயில் விபத்து,
சாலை விபத்து நடைபெறுவதால்
பயணங்கள் நிற்பதில்லையே.
நடைபாதையிலும் விபத்து நடக்கும்
நடக்காமல் இருக்க முடியுமோ?
காற்றிலும் மாசுகலப்பதால்
மூச்சுவிடாமல் வாழ்க்கை ஓடுமோ?
அணுமின் உலையில் விபத்து வருமென்று
நிலையத்தை முடக்க நினைக்கலாமா?
இன்றையத் தொழில்நுட்ப வளர்ச்சி
எதிர்வரும் விபத்தைத்தடுக்காதா?

வாகனவிபத்துகள்
பயணம் செய்வோரையும் பக்கத்தில் இருப்போரையும்தான்
பாதிக்கும்
அணுஉலை விபத்து
அடுத்தடுத்தத் தலைமுறைகளையும் பாதிக்கும்.
புயலையும் மழையையும் வெய்யிலையும்கூட
முன்னதாகச் சொல்லும்
வானிலை ஆராய்ச்சி
முறியடிக்கவோ மழுங்கடிக்கவோ முடிவதில்லையே
நிலநடுக்கமும் சுனாமியும்
எந்த நேரமும் எங்கேயும் நிகழலாம்
தடுத்துநிறுத்தவோ, திருப்பிவிடவோ
இப்போதும் கூட அறிவியல் இல்லை.
மின்சாரம் வேண்டும்தான்
மின்சாரம் இல்லாமல் வாழ்க்கை இல்லைதான்.
அணுமின் உலையின் ஆபத்தைச் சுமக்காமல்
கழிவுகளை
அப்புறப்படுத்தவும் பாதுகாக்கவும்
உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு
ஓயாதுபயத்தில் உழைக்கவேண்டும்
அணுமின் நிலையச் செயற்பாட்டுக்கான
அடிப்படை யுரேனியக் கையிருப்பும்
நடப்பாண்டிற்குள் கரைந்துபோகும்
ஜேம்ஷெட்பூர் சுரங்கத்து யுரேனியம்
அணுமின் உலைக்கான தரத்தில் இல்லை
ஆந்திரா, மேகாலயாச் சுரங்கங்களில்
யுரேனியம் எடுக்கப் பொதுமக்கள் எதிர்ப்பு
அணுமின் நிலைய இடுபொருளுக்கு
அடுத்த நாட்டில் கையேந்தும்நிலை.
அபாயத்தையும் உற்பத்திசெய்யும்
அணுமின் நிலையம்தவிர
யாரிடமும் கையேந்தாமல்
எதற்காகவும் அச்சப்படாமல்
இயற்கையிடம் பெறுவதற்கு
எவ்வளவோ வாய்ப்புகள்.
சூரியனை நம்பலாம்
செலவு அதிகம் என்றாலும்
பயம் இல்லை
காற்று கைகொடுக்க ஓடிவருகிறது
காற்றிலிருந்து மின்சாரம் கறக்க
இந்தியா திட்டமிட்ட 5340 மெகாவாட்டில்
தமிழ்நாட்டிலிருந்தே 2000 மெகாவாட்
கூடங்குளத்திற்கு அருகிலிருந்தே
சாத்தியமாகியிருக்கிறது.
கூடங்குள அணுமின் நிலைய வளாகத்திலும்
காற்றுமின்சாரக் காற்றாடிகள்.
காற்றுக்கும் வெயிலுக்கும் கையேந்தவேண்டாம்
அச்சப்பிசாசுகளின் அணிவகுப்பும் கிடையாது.
இருந்தும் அணுமின் நிலையம் ஏன்?
அணுமின் நிலைய உலக வரலாற்றில்
அச்சம் தரும் பக்கங்கள் உண்டு
அணுமின் நிலையத்தில்
மின்சாரம் மட்டும் உற்பத்தியாவதில்லை
கழிவுகளும் உற்பத்தியாகின்றன.
அவற்றிலிருந்து கிடைக்கும்
புளுட்டோனியம்
அணுஆயுதத்தின் அடிப்படை இடுபொருள்.

அணுமின்சாரம், அணுஆயுதம் என்ற
இருநோக்கும் இதன் கண் உள
உலகச்சந்தையின் வணிகநோக்கும்
உலகப்பாதுகாப்புக்குழுவில் உறுப்பினர் ஆவதும்
ஆய்வு செய்வதும் அண்டைநாட்டாரை மட்டுமன்றி
வல்லரசாக உலகை மிரட்டவுமான
பல்நோக்கும்கூட இதன் கண் உளவென்று
International Automic Energy Agency
கண்காணித்துக் கட்டுப்படுத்துகிறது.
கல்பாக்கத்திலும்
புற்றுநோய் உற்பத்தி கூடியிருக்கிறதாம்
ஒருலட்சம் பேருக்கு இரண்டு முதல் நான்கு பேர்
புற்றுநோயால் உயிர் இழக்கிற
இந்திய சராசரிப் புள்ளிவிவரம்
25ஆயிரம்பேர் இருக்கிற கல்பாக்கத்தில்
மூன்று பேர் உயிர் இழப்பதாக உயர்ந்திருக்கிறது.
கடுமையான புயல் அலைகளிலும்
கட்டுமரத்தில் மனம் கலங்காத மீனவர்கள்
சுனாமி பயத்தைக்கூடக் கொஞ்சகாலத்திலேயே
மறக்க முடிந்த மக்கள்
நடக்கப் போவதாக நினைக்கும்
அணுமின் உலை விபத்துக்காக
அச்சத்தில் காய்கிறார்கள்.
அடுத்தத் தேர்தல், அடுத்த பிரதமர்.
ஊழலற்ற இந்தியா, உத்தம வேடம் என்ற
அரசியல் அன்றாடங்காய்ச்சிகளுக்கு
அடுத்தடுத்தத் தலைமுறையைப் பாதிக்கும்
அணுமின் நிலையம் பிரச்சினையாக இல்லை

அணுமின் உலை வெடித்தால்
பாதிப்பிற்கு ஆளாகப்போவது
வாழும் தலைமுறை
வளரும் தலைமுறை
வரும் தலைமுறைகள்
மட்டுமன்றி
உலகின் மிகத்தொன்மையான நிலப்பகுதியான
பொதிகைமலை
பறவைகளும் விலங்குகளும்
மரம் செடி கொடிகளும்
மருத்துவ மூலிகைகளும் கூடத்தான்.
எனவே
மக்களின் அச்சம் என்பது
வாழ்கிற
வாழ வேண்டிய
தலைமுறைகளின் அச்சம்.
ஆகவே
அணுமின் உலை
உயிர் அணுக்களுக்கு
உலையாக வேண்டாமே!

ம.ரா.

கடைசி பக்கம்: மீண்டும் பாரதி

இந்திரா பார்த்தசாரதி



போன ‘கணையாழி’ இதழில் நான் எழுதியிருந்த கட்டுரையை ஒட்டி, ஒரு நண்பர் என்னைக் கேட்டார், நான் தாகூரைவிட பாரதி உயர்ந்த கவிஞராகக் கருதுகின்றேனா என்று. தாகூர் கவிதைகளையும், பாரதி கவிதைகளையும் துலாக் கோல் கொண்டு ஆராய்ந்து இருவரிலே யார் உயர்ந்தவரென்றூ மதிப்பீட்டு முடிவு எதுவும் கூறவில்லை. தாகூருக்கு இருந்த அதிர்ஷ்டம் பாரதிக்கு இல்லையென்றுதான் கூறியிருந்தேன். ஆனால் பாரதியை நான் தமிழில் படிக்கும் போது எனக்கு ஏற்படுகின்ற பரவசமும் நிறைவும் தாகூரை ஆங்கிலத்தில் படிக்கும்போது எனக்கு உண்டாகவில்லை. காரணம், பாரதி மொழி, தமிழ்க் கலாசாரப் பாரம்பரியத்தின் பிரிக்கவொண்ணாத அம்ஸம்.

இதைப் பற்றி எம்.டி. முத்துக்குமாரஸ்வாமியும் குறிப்பிட்டிருக்கிறார்.
‘தேனை மறந்திருக்கும் வண்டும்
ஒளிச் சிறப்பை மறந்து விட்ட பூவும்’
எனும்போது, கம்பனும், சங்கப் புலவர்களும் என் மனக் கண்முன் வந்து போகிறார்கள்.’

ஒளிச் சிறப்பை மறந்து விட்டப் பூவும்’ என்ற வரி என் ரஸனை உணர்வைத் தூண்டிப் பளிச்சென்று விளக்கேற்றி வைப்பது போல், இவ்வரியினை ஆங்கில மொழியாக்கம் செய்துவிட முடியுமா? ‘ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல் ‘வந்தவர் மஹாகவி பாரதி என்பதைப் பற்றி எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை/ மற்றவர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. காரணம், நான் வள்ளுவன் படித்தவன், கம்பன் படித்தவன், இளங்கோ படித்தவன். பக்தி இலக்கியங்கள் பற்றியும் தெரியும்.

பாரதியின் ‘குயில் பாட்டு’ ஒன்று போதும், உலக இலக்கியத்தில் அவர் தகுதியை நிலை நிறுத்த. அதைப் படித்து ரஸிக்க நமக்கு இந்திய இலக்கியப் பாரம்பரிய இலக்கியத் தேர்ச்சியோடு மட்டுமல்லாமல், மேலை இலக்கியக் காற்றும், நம் ரஸனைச் சாளரங்களில் வீசிக் கொண்டிருக்க வேண்டும். ‘குயில் பாட்டு’ குறிஞ்சித்திணையில் அமைந்த அகத்துறைக் கவிதை என்பதோடு மட்டுமல்லாமல், சமஸ்கிருத நாவலாகிய (உலக இலக்கியங்களின் முதல் நாவல். எட்டாம் நூற்றாண்டு, ஆசிரியர் பாணபட்டர்) ‘காதம்பரியின்’ பாதிப்பும் உண்டு. ’காதம்பரியில்’ கிளி கதை சொல்லும், பாரதி, குயில் காதல் கதையைச் சொல்வதாகப் பாடுகிறார்...பாரதிக்கு இரு குரல்கள் எப்பொழுதுமே இருந்திருக்கின்றன. ஒன்று, அந்தரங்கக் குரல், இன்னொன்று பகிரங்கக் குரல். இதைத்தான், சங்க காலத்தில், ‘அகம், ‘புறம்’ என்று பிரித்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. புறநானூற்றுக் கபிலரின் குரல் பகிரங்கக் குரல், புறம் பற்றிய பாடல்கள். ‘குறிஞ்சிப் பாட்டு’க் கபிலரின் குரல் அந்தரங்கக் குரல்.,அகம் பற்றிய பாடல்கள். பாரதியின், நாட்டுப் பாடல்கள், சமூகச் சீர்திருத்தப் பாடல்கள் யாவும் அவர் பகிரங்கக் குரல்(புறம்). தனிமை பற்றிய பாடல்கள், வசன கவிதை, குயில்பாட்டு, ஆன்மிகப் பாடல்கள் அவருடைய அந்தரங்கக் குரல்(அகம்).

ஆன்மிகம் அகத்துறை ஆகுமா என்ற கேள்வி எழக்கூடும். ஏன் ஆகக் கூடாது? சங்க அகத்துறை அடிப்படையில்தானே பக்தி இலக்கியங்களில் நாயகநாயகி பாவம்(bridal mysticism) உருவாகியது?

ஐந்து வயதில் இழந்த தம் தாயைத்தாம் பாரதி வாழ்நாள் முழுவதும் தேடியிருக்கிறார். விடுதலை வேட்கை மிகும்போது, அவர் தாய் பாரதமாதா. காதல் மிகும்போது, கண்ணம்மா. பக்திப் பரவசத்தில் பராசக்தி. ‘குயில் பாட்டு’, கோல்ரிட்ஜின் ‘குப்ளாகான்’ போல், ‘பாவலர்க்குப் பட்டைப் பகலில் தோன்றுவதாம் ஒரு நெட்டைக் கனவு.’ ‘In Xanadu did Kublakhan in stately dome decree’என்று ஆரம்பிக்கும் வரிகளை ஷெல்லி படித்த போது ஆழ்ந்த பரவசத்தில் மயக்கமுற்று விழுந்தாராம்.விக்கிராமாதிதன் கதைகள், ‘அரபு இரவு’ கதைகள் போல், கதைக்குள் கதை, கனவுக்குள் கனவு, எது கனவு, எது நிஜம் என்ற தோற்ற, யதார்த்த தத்துவச் சிக்கல்கள்!. சால் பெல்லோவின் நாவல்களைப் பற்றிக் கூறும் போது, ‘wheel within a wheel’என்பார்கள்.தமிழில் தோன்றியிருக்கும் மகத்தான இலக்கியங்களில், ‘குயில் பாட்டு’க்கு ஒரு தனி இடமுண்டு. ‘புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி ‘ என்பதற்கு ஈடான வரிகளைக் கம்ப சித்திரத்தில்தான் என்னால் தேட முடியும். ‘குயில் பாட்டை’ப் பற்றி ஒரு விரிவான ரஸனை அநுபவ நூல் ஒன்று எழுத நான் திட்டமிட்டிருக்கிறேன்.

நவம்பர் இதழ் உள்ளடக்கம்.

கவிதை
இசாக்
சிவபாரதி
பா. சேது மாதவன்
பூர்ணா
கவிமுகில்
இளம்பிறை
நபீல்
இராம. குருநாதன்

கதை
பத்மநாபன்
வே. சபாநாயகம்
சம்யுக்தா
நாவல் குமாரகேசன்

கட்டுரை
பிருந்தா ரவிக்குமார்
எஸ். சுவாமிநாதன்

நேர்காணல்
எழுத்தாளர்
ஆர். சூடாமணி

தொடர்
நரசய்யா

திரைப்பார்வை
மு. ராமசாமி

நூல் மதிப்புரை
இமையம்

கடைசிப்பக்கம்
இந்திரா பார்த்தசாரதி

நவம்பர் மாத இதழ்





ஆண்டு சந்தா: (
உள்நாடு )ரூ220/- (வெளிநாடு)US$30
இரண்டு ஆண்டு சந்தா: (
உள்நாடு )ரூ440/- (வெளிநாடு)US$50
ஆயுள் சந்தா: (
உள்நாடு )ரூ5000/- (வெளிநாடு)US$300

அனைத்துத் தொடர்புகளுக்கும்.

பதிப்பாளர்: சேது.சொக்கலிங்கம்
கவிதா பப்ளீகேஷன்: 8, மாசிலாமணி தெரு, தியாகராயநகர், சென்னை-600 017
தொலைபேசி: 24364243, 24322177

Friday, October 7, 2011

கடைசிப்பக்கம்

தாகூரும் பாரதியும்
இந்திரா பார்த்தசாரதி

தாகூருக்கு எந்தவிதத்திலும், கவிதைப்-படைக்கும் ஆற்றலிலோ, ரசனையிலோ, சிந்தனை வீச்சிலோ, உலகளாவியப் பார்வையிலேயோ குறைவில்லாதவர் பாரதி. இருப்பினும், இந்திய இலக்கிய உலகம், பாரதி கவிஞர் என்ற முறையில் அவருடைய முழுப் பரிமாணத்தை உணர்ந்த-தாகத் தெரியவில்லை.



தாகூர் இந்த வகையில் அதிர்ஷ்டம் செய்தவர். செல்வம்மிக்க குடும்பத்தில் பிறந்தவர். நோபல் பரிசைக் குறிக்கோளாகக் கொண்டு அதை அவரால் அடையவும் முடிந்தது. வெற்றி தரும் வெற்றியைப் போல் வேறுஎதுவுமில்லை. நோபல் பரிசு தாகூரை இந்தியாவின் இலக்கிய icon ஆக அடையாளம் காட்டியது.

பாரதிக்கு இவ்வகையில் எந்தவிதமான அதிர்ஷ்டமுமில்லை. இந்தியாவின் தெற்குக்-கோடியில் தமிழ்நாட்டில் பிறந்து, கவிஞன் வாழ்க்கையை மேற்கொண்ட அவர், உலகளாவிய விருது எதனையும் இலட்சியக் கோட்பாடாகக் கொள்ளவில்லை. நாமகள் சொல்வளம் கொடுத்தாளே தவிர, சோற்றுவளம் கொடுக்கவில்லை. வாழ்நாள் முழுவதும் வறுமையிலேயே உழன்றார்.

திருமகளின் செல்வக் குழந்தையாய்ப் பிறந்து, உலகம் முழுவதையும் பன்முறைச் சுற்றி வருவதற்கான வசதிகள் இருந்து, இலக்கியம் படைத்த தாகூரையும், வயிறு காய்ந்தாலும் கவிதையே மூச்சாகக் கொண்டு வாழ்ந்த பாரதியும், இவர்கள் இருவருக்கும் அமைந்துவிட்டச் சமூகப் பின்னணியில் பார்க்கும்போதுதான், பாரதியின் இலக்கியமேன்மை நமக்கு விளங்கும்..
தாகூர் குடும்பம் சர்வதேச அளவில் கலை உலகத் தொடர்பு உடையது. தாகூர் நோபல் பரிசு பெறுவதற்கு எட்டுமாதம் முன்புதான், கலை உலக விற்பன்னராகிய ஸ்வீடிஷ் இளவரசர், தாகூர் இல்லத்தில் தாகூர் குடும்ப விருந்தினராக இரண்டு மாதங்கள் தங்கியிருந்திருக்கிறார். கலைபற்றிய அறிவார்ந்த விவாதங்கள் அன்றாட நிகழ்ச்சி நிரல்.மேல் நாட்டுக்கலாசார இலக்கியச் சூழ்நிலையைப் புரிந்துகொள்ள இந்தப் பரிவர்த்தனைகள் உதவின.
கீதாஞ்சலி வங்கமொழியில் பிரசுரமானபோது. கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியது. தாகூர் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். வங்காள மொழியிலிருந்த கவிதைகள் 157. அவற்றில், பலகவிதைகளைத் தவிர்த்துவிட்டு, ‘மேல்நாட்டு இலக்கிய ரசனை நுண்ணுணர்-வுக்கேற்ப’’ புதிய 53 கவிதைகள் சேர்த்து (அவர் முதலில் இவற்றை ஆங்கிலத்தில் எழுதிய பிறகுதான் வங்கமொழியில் அவற்றைப் பெயர்த்தார் என்றும் கூறுவதுண்டு) அவற்றைப் பிரசுரத்துக்காக லண்டன் எடுத்துச் சென்றார். நோபல்பரிசு நோக்கி வைத்த முதல் அடி இது.
நோபல்பரிசு பெற்றிருந்த டபில்யூ.பி. யீட்ஸ் என்ற ஐரிஷ் கவிஞரின் முன்னுரையுடன் ‘கீதாஞ்சலி’ பிரசுராமாக வேண்டுமென்று அவர் விரும்பினார். ஒரு பொது நண்பர் மூலம் இது சாத்தியமாயிற்று.

யீட்ஸுக்கு இக்கவிதைகள் ஒருபுதிய உலகத்தை அறிமுகம் செய்து வைத்தன. தமிழ்நாட்டுப் பக்தி இயக்கக், கவிஞர்கள் (நாயன்மார்கள், ஆழ்வார்கள்), ஜலாலுதீன்ரூமி, கபீர், சூர்தாஸ் போன்றவர்களின் mysticism பரிச்சயமானவர்களுக்குத் தாகூரின் ‘கீதாஞ்சலி’ ஒரு புதிய வரவாகத் தெரியாது. ஆனால் யீட்ஸுக்கு அவை புதியவையாக இருந்தன. நீண்ட முன்னுரை எழுதினார். நோபல் பரிசை நோக்கி வைத்த இரண்டாம் அடி இது. ஆனால், தாகூருக்கு நோபல்பரிசு கிடைத்ததும், ‘இந்நூலுக்கு நோபல் பரிசு கிடைக்குமென்று நான் எதிர்பார்க்க வில்லையென்று’ யீட்ஸ் கூறியிருப்பது வேறு விஷயம்.

ஒரு குறிப்பிட்ட கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்திருக்கும் கவிதை மொழியை வேற்றொரு மொழியில் ஆக்கம் செய்வது என்பது ஒரு பெரிய சவால்தான். பாரதியின் கவிதைகளுக்குத் திருப்திகரமான ஆங்கில மொழிபெயர்ப்பு இது வரை இருப்பதாகத் தெரியவில்லை. கம்பன், வள்ளுவன், பாரதி ஆகிய மூவரும், தமிழ்க் கலாசாரத்துக்கு உரித்தான சொல் ஆளுமையில் நிகரற்றவர்கள். வேற்று மொழியில் அவை உருப் பெறும்போது அது அம்மொழியின் தோல்வியாக முடிந்து விடுகிறது. அதனால்தான், ஏ.கே.ராமாநுஜன், ஆழ்வார்ப் பாடல்களின் கருத்துகளை உள்வாங்கிக்கொண்டு, அவற்றிற்கு ஆங்கில அவதாரம் தந்திருக்காரே தவிர மாறு வேடம் அணிவிக்கவில்லை.

பாரதி உலகளவில் அறியப்படாததற்கு இதுதான் காரணம். தாகூரின் அதிர்ஷ்டம் அவருக்கில்லை.

Monday, October 3, 2011

ஆசிரியர் பக்கம்

உங்களுடன்
பாவமும் பாவிகளும்


அக்டோபர் 2
காந்தி பிறந்த நாள்
கவிஞர் இரவீந்திரநாத் தாகூர்
மகாத்மா என்றார்.
தென்னாப்பிரிக்க யூனியன் பிரதமமந்திரி (1939) ஜெனரல் ஸ்மட்ஸ் சொன்னார்
‘நீங்கள் ஒரு பாரிஸ்டரை அனுப்பிவைத்தீர்கள் நாங்கள் அவரை
மகாத்மாவாகத் திருப்பி அனுப்பினோம்’ காந்தி சொன்னார்
“நான் பிறந்து வளர்ந்தது இந்தியாவில்
உருவாக்கப்பட்டது தென்னாப்பிரிக்காவில்.”

பாபு என்றும் அழைக்கப்பட்டார்
குஜராத்தியில் தந்தை என்று பொருள் தேசத்தந்தை என்று
பொருள் விரித்தவர் காந்தி
அக்டோபர் 2
வன்முறைக்கு எதிரான நாள் என்று ஐ.நா. 15.3.2007 இல் அறிவித்தது
பாபு உலகத்தந்தையானது.
சகமனித உணர்வுக்கு இடமின்றி
பயணச்சீட்டு இருந்தும் உட்காரவிடாமல்
ஓடும் ரயிலிலிருந்து தள்ளப்பட்ட
ஆட்சியாளர்களின் அநீதிகளுக்கு
ஆதரவாகச் செயற்பட வற்புறுத்தப்பட்ட அதிகாரத்தைப் பலமுறை
அவமானத்திற்கு ஆளாக்கியவர்.
அகமும் புறமும் தூய்மை
உடைமை பொது
மனதில் உறுதி
நம்மை நாமே ஆளக்கற்றல்
இம்மையில் மறுமை காμதல்
புலனடக்கம்
உண்மையாக இருத்தல்
அச்சம் தவிர்த்தல்
பகைமை விரட்டல்
அறங்காவலராகச் செயற்படுதல்
பொதுநலத்தில் அக்கறை
சாதனை காμம் வழிகளிலும்
சத்தியம் கடைப்பிடித்தல்
சொல்லிலும் செயலிலும்
ஒன்றியிருத்தல்
காந்தியை இப்படியெல்லாம்
காட்சிப்படுத்தலாம்
காந்தியின் பெயரால்
விருதுகள் வழங்கப்படலாம்.
இவையெல்லாம்
காந்திக்கு விருதாக வேண்டாமா?

1934 முதல் 1948 வரை
ஐந்து முறை
நோபல்பரிசுக்குக் காந்தி
பரிந்துரைக்கப்பட்டார்
இரண்டுமுறை
இறுதிப் பட்டியல்வரை
இடம் பெற்றார்.
பரிசு கிடைக்காததால்
காந்தி வருத்தப்படவில்லை
வழங்காமல் விட்டுவிட்டோமென்று
நோபல்பரிசுக் குழு வருத்தப்பட்டிருக்கிறது. காந்தி பிறந்ததேசம்
விருது வேட்டையில்
தன்மானத்தை அடகுவைக்கத் துடிக்கிறது.
மதக்கலவரத்தில் மனம் நொந்த
காந்தி நாட்டில்
சாதிக் கலவரங்கள்
மகாத்மாவை அடையாளம் கண்ட நாட்டில் ஆன்மாக்களின் விற்பனை
இந்தியாவின் நாணயத்திற்கு
மதிப்பு சேர்த்தவர் படம்
இலஞ்சத்திலும் ஊழலிலும்...
எல்லாவற்றிலும் வெளிப்படையாக இருந்தவர் கறுப்புப் பணத்திலும்
கள்ளப் பணத்திலும்
நாடு கடத்தப்படுகிறார்
தீயதைப்
பார்க்காதே
கேட்காதே
பேசாதே என்று
குரங்குப் பொம்மைகளாய்
மௌனம் காக்கும் மக்கள்
இருந்தாலும்
இன்னமும் நம்பிக்கை இருக்கிறது
ஏனெனில்
இது காந்தி பிறந்த தேசம்

ம. ரா.

Sunday, October 2, 2011

அக்டோபர் இதழ்: உள்ளடக்கம்

கவிதை
சந்திரசேகர் கம்பார்
சிவபாரதி
சசி அய்யனார்
சூர்யநிலா
அ.கோ. விஜயபாலன்
பா. சேது மாதவன்
ஆ. ஆனந்தன்
இலக்குமிகுமாரன்
பொ. செந்திலரசு

கதை
குமரி எஸ். நீலகண்டன்
நெல்லை கிருஷ்ணன்
கிரேஸி;
தமிழில் உதயசங்கர்
ஜனநேசன்

கட்டுரை
ம.ந. ராமசாமி
ஆர். நடராஜன்
தமிழவன்
க. அம்சப்ரியா

நேர்காணல்
மலையாள எழுத்தாளர் சேது மாதவன்

நூல் மதிப்புரை
அன்பாதவன்
வெங்கட்சாமிநாதன்

கடைசிப்பக்கம்
இந்திரா பார்த்தசாரதி

Saturday, October 1, 2011

அக்டோபர் மாத இதழ்





ஆண்டு சந்தா: (
உள்நாடு )ரூ220/- (வெளிநாடு)US$30
இரண்டு ஆண்டு சந்தா: (
உள்நாடு )ரூ440/- (வெளிநாடு)US$50
ஆயுள் சந்தா: (
உள்நாடு )ரூ5000/- (வெளிநாடு)US$300

அனைத்துத் தொடர்புகளுக்கும்.

பதிப்பாளர்: சேது.சொக்கலிங்கம்
கவிதா பப்ளீகேஷன்: 8, மாசிலாமணி தெரு, தியாகராயநகர், சென்னை-600 017
தொலைபேசி: 24364243, 24322177

Saturday, September 3, 2011

மகாகவி பாரதியும் அதிசயப்பிறவி வ.ராவும்

காலம் கொன்ற விருந்து 2 - (தொடர்)
நரசய்யா

மகாகவி பாரதியும் அதிசயப்பிறவி வ.ராவும்


பாரதியார் மறைந்து (1921 செப்டம்பர் 11) தொண்ணூறு வருடங்கள் ஓடிவிட்டன. சுதேசமித்திரன், பாரதி மறைந்த மறுநாள் (செப். 12) வெளியிட்ட செய்தி இன்னும் பசுமையாக உள்ளது. சிதைக்குத் தீயூட்டியவர் ஹரிஹர சர்மா (பாரதியின் உறவினர்). சடங்குகளுக்கு ரூபாய் 50- கொடுத்துதவியவர் எஸ். துரைஸ்வாமி அய்யர். (விவரம் பி. மஹாதேவனின் ஆங்கில நூல்). கிரியை நடந்த இடத்தில் சக்கரைச் செட்டியார், கிருஷ்ணஸ்வாமி சர்மா, ராமச்சந்திரய்யர் தமிழில் பேச, சுரேந்திர நாத் ஆர்யா தெலுங்கில் அஞ்சலி செலுத்தினார். பாரதியின் உடல் விரைவிலேயே தீக்கு இரையானது. அவர் மூட்டிய தீ வளர ஆரம்பித்தது.

அவருக்கு உரிய இடம் இலக்கிய உலகில் அப்போது அளிக்கப்படவில்லை அவரது நினைவுகளை மண்டயம் ஸ்ரீனிவாசாச்சார்-யாரின் புதல்வி ஸ்ரீமதி யதுகிரி அம்மாள் எழுதி வைத்ததைத் சுமார் பதினைந்து வருடங்களுக்கு அச்சிட எவருமே முன்வரவில்லை என்பதை ரா. அ. பத்மநாபன் கூறுகிறார்! யதுகிரி அம்மாள் காலம் சென்றபிறகு, 1954 இல் தான் இச்சிறு நூல் வெளிவந்திருக்கிறது, திரு ரா. அ. பத்மநாபன், பாரதியார் பற்றிக் குறிப்பிடுகையில், “பல நூற்றாண்டுகளுக்கோர் முறை தோன்றும் மகாமேதை ஒருவரின் வாழ்வு இவ்வாறு முடிவெய்தியது. தம்மிடையே ஒரு அதிசய புருஷர் வாழ்ந்தா-ரென அவர் காலத்திய தமிழுலகம் அறியவில்லை. நண்பர் சிலரே உணர்ந்தி-ருந்தனர்” என்கிறார்.

பி. எஸ். ராமையா, “அன்றையத் தமிழ்ப் பேராசிரியர்களும் புலவர்களும் பாரதியாரை ஒரு கவி என்றே ஒப்புக்கொள்ளவில்லை” என்கிறார்.

சிட்டி, 1935 ஆம் ஆண்டு நடந்த விவரத்தைச் ‘சாதாரண மனிதன்’ எழுதுகையில் என்னிடம் கதை போலச் சொன்னார்.
பாரதிக்கு மஹாகவி எனப் பட்டம் சூட்டிமகிழ்ந்த முதல் மனிதர் வ. ராமஸ்வாமி அய்யங்கார் தான். அதைத் தொடர்ந்தவர்கள் சிட்டி சுந்தரராஜன், கு. ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி, சி. சு. செல்லப்பா போன்ற பாரதி பக்தர்கள்.

முதலில் பாரதியாரை மகாகவிஞராக ஏற்க மறுத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் கல்கி. பின்னர் அவரே முன்னின்று, பாரதிக்கு எட்டயபுரத்தில் மணிமண்டபம் எழுப்பினார். அதே நிகழ்வில் ஆல் இந்தியா ரேடியோவுக்காக, சிட்டியும் அங்கேயே இருந்து ஒலிபரப்பு நிகழ்ச்சியில் பங்கு கொண்டார்.

பாரதியைத் தெய்வமாகவேக் கருதியவர் வ. ரா. புதுச்சேரி சென்று பாரதியைக் கண்ட விவரத்தைத் தமது ‘மகாகவி பாரதியார்’ என்ற நூலில், “அந்தக் கீதங்களைப் படித்துப் பரவசமானவர்களில் நானும் ஒருவன். இது 1910 ஆம் ஆண்டுக்கு முன்னர்” என்று தன்னை அறிமுகம் செய்துகொள்கிறார். இவ்வாறு பாரதியைத் தனது குருவாகவே ஏற்றுக்கொண்ட வ. ரா. பின்னர் மணிக்கொடியுடன் ஐக்கியமானார்.

ஒரு வேள்வி போல, ஸ்டாலின் ஸ்ரீனிவாசன், டி. எஸ். சொக்கலிங்கம் வ. ராமஸ்வாமி அய்யங்கார் மூவருமாக மணிக்கொடியை உருவாக்கினர். 1933 செப்டம்பர் 17 ஆம் தேதி “...மணிக்கொடி ஒரு முயற்சி. முடிவு, காலம் காட்டும். மணிக்கொடி ஒரு பிறவி. இதன் வாழ்வும் வளர்ச்சியும் எங்கள் லட்சியத்திலே. உங்கள் அன்பிலே, இறைவன் அருளிலே” என்ற பிரகடனத்துடன் மணிக்கொடி வாரப்பத்திரிகையாக வெளி வந்தது. அந்த மும்மூர்த்திகளும் இப்-பிரகடனத்தில் கையெழுத்-திட்டனர். பத்திரிகை வெளிவந்த ஒரு மணி நேரத்திற்குள், கல்கி மணிக்கொடி அலுவலகத்திற்கு வந்து தமது உள்ளக்களிப்பை வெளியிட்டதை பி. எஸ். ராமையா சொல்கிறார். பாரதியைப் பாடி மகிழ்ந்தது மணிக்கொடி!

மறுமலர்ச்சி இயக்கமாக வளர்ந்து ஏறு நடை போட்ட மணிக்கொடியுடன் வ. ரா தொடர்பு அறுந்தது ஒரு சோகமான கதை. 1934 அக்டோபரில் காங்கிரஸ் கட்சிக்குப் பிரசாரம் செய்ய வ. ரா, கோயம்புத்தூரில் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது மணிக்கொடியின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றிருந்த சொக்கலிங்கத்திற்கும் வ. ரா. விற்கும் இடையில் ஏதோ காரணத்தால் விரிசல். அக்டோபர் 21 தேதியிட்ட மணிக்கொடியில் இவ்வாறு ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது:
“மணிக்கொடி ஆசிரியர் ஸ்ரீ வ. ராமசாமி ஐயங்கார் பல இடங்களில் பேசியதாகப் பத்திரிகைகளில் செய்திகள் பிரசுரிக்கப்படுகின்றன. இது தவறு. ஸ்ரீ ராமசாமி ஐயங்காருக்கும் மணிக்கொடிக்கும் இம்மாதம் ஒண்ணாம் தேதியிலிருந்து யாதொரு சம்பந்தமும் கிடையாது என்பதை அறிவித்துக் கொள்கிறோம். - ஆசிரியர்”.

சிட்டி இதை ஒரு விபத்தாகவே கருதினார். ஆனால் அவருக்கும் இந்நிகழ்வின் பின்புலம் தெரியாது. உடனே வ. ரா. வீரகேசரியில் (கொழும்பு) பணியில் சேர்ந்தார். பலருக்குத் தெரியாத விஷயம் - வீரகேசரியில் அவர் சேர்ந்தது வ. உ. சி யின் விருப்பப்படியாகும்.
வ. ரா. இதைப் பற்றிச் சொல்கையில், “நான் சென்னையை விட்டுச் சிறிது காலம் வெளியே இருக்க நேர்ந்தது பழங்கதை. அதை இப்போது அவிழ்ப்பதில் இலாபமில்லை. அவசியமேற்பட்டால் பிறகு சொல்கிறேன்” என்றார். ஆனால் அவர் பிறகு அதைப் பற்றி எங்கேயும் சொன்னதாகத் தெரியவில்லை. சிட்டியும் என்னிடம் பேசிய போது, தெரிந்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை.
வ. ரா இலங்கையில் இருந்த போது தான் தமிழகத்தையே குலுக்கிய பாரதியைப் பற்றிய மாபெரும் இலக்கியச் சர்ச்சை நிகழ்ந்தது. அச்சர்ச்சையின் விவரங்களைக் காணுமுன்னர் அன்றைய தமிழ் எழுத்தாளர்களின் பின்புலத்தையும் நோக்கவேண்டும்.

கரைந்துவிட்ட கனவுகளுடன் சொக்கலிங்கம் தினமணியில் சேர்ந்துவிட்டார். கே ஸ்ரீனிவாசன் பம்பாய் சென்றுவிட்டார். மணிக்கொடி, பி. எஸ். ராமையா கைகளில், சிறுகதைக்கென ஒரு பத்திரிகையாகப் பரிணமித்தது. ஜனரஞ்சக பத்திரிகையான ஆனந்த விகடன், வாசன் தலைமையில், கல்கி கிருஷ்ணமூர்த்தியின் புரட்சிகரமான மாற்றங்களால், அவரது நேர்த்தியான திறமையால், தமிழ் நாட்டின் வணிக நோக்கில் சிறந்த பத்திரிகையாகத் தனக்கு ஈடின்றி வெளிவந்து-கொண்டிருந்தது. கல்கியின் எழுத்து ஒரு தனி இடத்தை வாசகர்கள் மத்தியில் பிடித்து விட்டது. அதன் தேசிய இயக்கத்திற்குப் பாரதியின் பாடல்கள் கை கொடுத்து உதவின. அவரது தலையங்கங்கள் மக்களைக் கவரும் வகையில் அமைந்திருந்தன.

ஆனால் இவற்றிற்கெல்லாம் திருஷ்டி பரிகாரமாக, இவர்கள் காலத்தில்தான் பாரதி மஹாகவியா இல்லையா என்ற மேலே குறிப்பிட்ட பிரச்சினை தமிழ் நாட்டில் ஆரம்பித்தது. அதுவும் மணிக்கொடி, கல்கி குழுவினருக்கு இடையில்!

சர்ச்சையின் ஆரம்பம்.

பாரதி மறைந்து சுமார் கால் நூற்றாண்டுக்குப் பிறகு, மணிக்கொடி 1934 ஆகஸ்ட் இதழில் ந. ராமரத்தினம் என்பவர் தமது தொடர்க்கட்டுரையில், “வ. ரா. வுடன் மூன்று நாள்” என்ற தலைப்பில் ஒரு பகுதியை எழுதியிருந்தார். அதில் வ. ரா. பாரதியைப் பற்றிக் காரைக்குடியில் பேசுகையில், ‘ஆங்கிலத்தில் கவி சிரேஷ்டர்களாகக் கருதப்படுபவர்களைப் படித்துள்ளேன்... இவர்களுடைய புத்தகங்கள் யாவும் சேர்ந்தால் கூட பாரதியாரின் ஒரு வரிக்கு ஈடாகாது” என்று கர்ஜித்ததாகக் குறிப்பிட்டார். இதே கருத்தை வ. ரா. வீரகேசரி 11.-09.-35 பாரதி நாள் கட்டுரையிலும் சொல்லியிருந்தார்.

விஷயம் விஷமமாக உருவெடுத்தது, பாரதி மலராக வெளியிடப்பட்ட, 1935 தினமணி முதல் ஆண்டு மலரில் நெல்லை நேசன் என்பவர் எழுதிய ‘வீரகேசரி’ என்ற கட்டுரையில் தான்! அக்கட்டுரையில் அவர் “பாரதியை தேசபக்திக் கவி என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம் அல்லவா? பாரதி ஒரு நல்ல கவி; மகா கவி அல்லர்” என எழுதியிருந்தார். (நெல்லை நேசன் என்பது, பி. ஸ்ரீ. ஆச்சார்யா அவர்கள். இவரும் அப்போதைய ஆனந்த விகடன் எழுத்தாளர்களில் ஒருவர்)

தொடர்ந்து, இலக்கிய இரட்டையர்களான, கு. ப. ரா வும், ந. பிச்சமூர்த்தியும் தினமணியில் ஒரு கடிதம் எழுதினார்கள். அதில் “நெல்லை நேசன் எப்படி பாரதியாரை மகாகவி அல்ல என்று முடிவு கட்டினார் என்பது விளக்கப் படவில்லை; தமிழ்க் கவிதை ஆராய்ச்சி இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதைப் பொறுத்துத்தான் இருக்கிறபடியால், இப்போது அவற்றைச் சோதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டதாக” குறிப்பிட்டிருந்தனர்.

ஆனந்த விகடன் ஆசிரியரான கல்கி கிருஷ்ணமூர்த்தி 3-1.1.-35 ஆம் விகடன் பிரதியில் ஒரு வாசகரின் கடிதமும் அதற்குப் பதிலாக விளக்கமும், பிரசுரித்திருந்தார்.

இலக்கிய மாணாக்கன் என்ற பெயரில் ஒருவர் ‘விகடன் தபால்’ பகுதிக்கு எழுதியதாக உள்ள கடிதத்தில் காரைக்குடியில் ஒருவர் பேசியது சரியா எனக் கேட்கப்பட்டிருந்தது. அக்கடிதம் எழுதியவரும் அதற்குப் பதிலெழுதி-யவரும் ஆசிரியரே (கல்கியே) எனச் சிட்டி கருதினார்.. அவரது அக்கருத்தைப் பற்றி என்னிடம் விளக்குகையில் சிட்டி சொன்னார்.. “முதலில் வ. ரா. இலக்கிய மாணாக்கன் என்பது பி. ஸ்ரீ. ஆச்சார்யா தான் என்றுதான் நினைத்திருந்தார். ஆனால் கல்கியே வ. ராவிடம், அக்கடிதம் எழுதியது பி. ஸ்ரீ. ஆசார்யா அல்ல என்று மட்டும் குறிப்பிட்டா-ராம். ஆனால் அது எவரெனச் சொல்லாமல் மழுப்பிவிட்டதாகத் தெரிகிறது. எழுதியுள்ள பாணியை வைத்துப் பார்த்தால், அது கல்கியால் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என நினைக்கவேண்டியுள்ளது.”

அக்கடிதத்திற்கு ஆசிரியரின் பதில், சற்று அநாகரீகமாகவே இருந்தது. இவை வெளியான நாள் நவம்பர் 3, 1935. (அக்கடிதங்கள் இணைக்கப்பட்டுள்ளன. நான் கேட்டவுடன் தமது பத்திரிகைக் காப்பகத்திலிருந்து எடுத்து அனுப்பிவைத்த விகடன் காரியாலத்தினருக்கு நன்றி.)

ஆசிரியரின் பதிலில், கல்கி, “..மேற்கண்ட அபிப்ராயத்தை உண்மையாகவே யாராவது வெளியிட்டிருந்தால் அவருக்கு இலக்கியம், கவிதைகளைப் பற்றி ஒன்றுமே தெரியா-தென்பது வெளிப்படை. அவர் நிரட்ச-குக்ஷியோ என்று சந்தேகிப்பதற்குக் கூட இடமுண்டு..” என எழுதியிருந்தார்.

விளைவு
முதலில் அக்கடிதங்களுக்கு எவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. வ. ரா. வே எழுதிய மறுப்பு “பாரதியும் இலக்கிய மதிப்புரையும்” என்ற தலைப்பில் 30-.11.-1935 தேதியிட்ட சுதேசமித்திரன் இதழில் வெளிவந்தது. அக்கட்டுரையில், “நண்பர் ரா. கி. மதிப்புரை எல்லையையும் மரியாதை வரம்பையும் கடந்து என் பேரில் வசை மாரி பொழியாமலிருந்திருந்தால் அவருடைய அபிப்ராயத்தில் மூளி ஏற்பட்டிருக்காது. தவறாக இருந்தலும், சரியாக இருந்தாலும் அதை அலட்சியமாகப் பேச இடமிருந்திருக்காது.” என்று குறிப்பிட்டார்.
ஆனால் கல்கி வாளாவிருக்கவில்லை. அதற்குப் பதிலாக, அடுத்தவாரமே, சற்றே தரக் குறைவாக (அன்றைய மணிக்கொடி எழுத்தாளர்களின் கணிப்பு) “பாரதியும் இலக்கிய விமர்சனமும்” என்ற தலைப்பில், சுதேசமித்திரனில் (07.-12.-1935 இதழில்) ஒரு பதில் கட்டுரை எழுதினார். அதில், கல்கி, காவிரி நதியைப் பாரதிக்கும், கங்கையை ஷேக்ஸ்பியர், தாகூருக்கு ஒப்பிட்டும், காவிரி மீது தமக்கு பிரியமிருப்பது என்பதற்காக, காவிரி கங்கையை விடப் பெரிது என்று ஒரு நாளும் சொல்லப் போவதில்லை யென்றும் கூறியிருந்தார். அது மட்டுமல்ல; அக்கட்டுரை-யில் கல்கி, “டால்ஸ்டாயிடம், பாரதியின் வள்ளிப்பாட்டைக் கொடுத்தால் பாரதியின் எல்லா புத்தகங்களையும் நெருப்பில் போட்டுக் கொளுத்தச் சொல்லியிருப்பார்” என்று எழுதியது, வ. ரா. குழுவினர் இடையில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. பாரதியைப் பற்றிய கல்கியின் இக்கருத்து அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையில் இருந்தாலும் அப்போதே சிட்டி கு. ப. ரா முதலானோர் ஒன்றும் செய்யவில்லை. ஆனால் மற்ற சிலர் விபரீதமாக எதிர் விளைவை உண்டாக்கினர்.

உதாரணமாக, 21.-12.-1935 தினமணியில் “டால்ஸ்டாய், பாரதி பாடல்களை எரித்திருக்க மாட்டார் ஸ்வாமி! மாம்பழம், புடலங்காய் என எழுதும் உம் எழுத்தைத்தான் ஒரு பெட்டியில் போட்டு சீல் பண்ணிக் கடலில் எறிந்திருப்பார்” என்று இளங்கோவன் என்பவர் எழுதினார்.
வ. ரா. கல்கியின் கட்டுரைக்குப் பதிலாக, டிசம்பர் 15 அன்று சுதேசமித்திரனில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அக்கட்டுரைக்குப் பதிலொன்றுமில்லை. ஆதலால், இந்த விவகாரம் முடிந்து விட்டதாகக் கருதப்பட்டது.

ஆனால் மனம் நொந்து போயிருந்த வ.ரா. 3-.12.-1935 அன்று கொழும்புவிலிருந்து, கு. ப. ரா. வுக்கு நான்கு பக்க நீண்ட கடிதமொன்று எழுதினார். அதிருஷ்ட வசமாக முக்கால் நூற்றாண்டுக்கு மேலான அக்கடிதம் இப்போது எனது கைகளில் முழுமையாகக் கிடைத்துள்ளது.

கா. சிவத்தம்பி கருத்தில், இளங்கோவன் போல உணர்ச்சி வசப்படாது, சீரான முறையில் சரியான தர்க்கத்தில் பதிலளிக்கப் பிரவேசித்தவர் சிட்டிதான்! அவ்வாறு அமைக்கப்பட்ட தர்க்கமேடையில் பிரசன்னமாகும் சிட்டி சுதேசமித்திரனில் 23-.12.-1935 அன்று ஒரு நீண்ட கட்டுரை எழுதுகிறார். (இக்கட்டுரையை சிட்டி சொல்லச் சொல்ல சி. சு. செல்லப்பா தமது கைகளால் எழுதியதாகச் சொல்வார்.)
(இவ்விடத்தில், இதை வாசிப்போர் நான் இந்தப் பழைய நிகழ்வைக் கல்கிக்கு எதிராகக் காலம் தாழ்த்தி காழ்ப்புணர்ச்சியுடன் எழுப்பிவிட்டதாக நினைக்க வேண்டாம். இதை என்னிடம் கூறுகையில் சிட்டியின் உணர்வை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அவர் அப்போது அகவை 93 தாண்டியிருந்தார். அப்போது கூட அவரால் அன்றைய இச்சொற்களைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்பது தான் எனது முடிவு. இந்நிகழ்வைக் குறித்து சிவத்தம்பியும் அ. மார்க்சும் தமது “பாரதி, மறைவு முதல் மகாகவி வரை” என்ற நூலில் பதிவு செய்துள்ளனர்.)

சிட்டி, தாம் எழுதிய கட்டுரையை மித்திரன் ஆசிரியர் சி. ஆர். ஸ்ரீனிவாசனிடம் தந்த போது, அவர் சிட்டியின் கருத்தை நிரூபிக்கத் தொடர்ந்து கட்டுரைகள் எழுதவேண்டுமெனத் தெரிவித்தார்.

அப்படியாக, சிட்டியும் கு. ப. ரா. வும் எழுதியவை தொகுக்கப்பட்டு “கண்ணன் என் கவி” என்ற நூலாக சங்கு கணேசனால் 1937இல் வெளியிடப்பட்டது. பாரதியின் எழுத்துக்கு இதுதான் முதல் திறனாய்வு என்று கூறிய சங்கு கணேசன் இரண்டாம் பதிப்பாகத் தனது முன்னுரையுடன் 1981இ-ல் பாரதி நூற்றாண்டு நினைவாக மறுபடியும் வெளியிட்டார். அதற்குப் பின்னணி என்ற பெயரில் சி. சு. செல்லப்பா மிகவும் விரிவாக ஒரு முன்னுரை வழங்கியுள்ளார். இந்த நூல் வெளிவரக் காரணமாக இருந்த வ. ராவினால் கு. ப. ராவுக்கு 3-1.2.1935 அன்று எழுதப்பட்ட நான்கு பக்கக் கடிதம் முன்னரே குறிப்பிட்டது போலக் காலம் தாழ்த்தியாயினும், என் கைகளில் வந்தடைந்தது.

ஆசிரியர் பக்கம்

மரணம் தண்டனையா?
வாழ்வது தண்டனை என்றால்
மரணமும் தண்டனை தான்
பிறந்தவர்க்கெல்லாம்
மரணம் உண்டு.

மரணம் தண்டனை என்றால்
எல்லோருக்கும் தண்டனை உண்டு.
விரும்பி, மரணத்தை ஏற்பவர்கள்
தண்டனை என்று நினைக்கிறார்களா?

விரும்பாமலும் மரணம் உண்டு
“சாதலின் இன்னாதது இல்லை”
ஆனால்
சாகாமல் இருக்கவும் முடிவதில்லை.
விரும்பாவிட்டாலும்
மரணத்திலிருந்து தப்பிக்கமுடியாது.
மரணம் இயற்கை எனில்
இயற்கை தண்டனை ஆகலாமோ?
இயற்கை, தண்டனைப்பட்டியலில்
இடம் பெறக்கூடுமோ?

உலகில்
96 நாடுகளில்
மரணதண்டனைக்கு
மரணம் நடந்திருக்கிறது
56 நாடுகளில்
இப்போதும் மரணதண்டனை
சுதந்திரமாகத் திரிகிறது.

மரணதண்டனைக்குச் சுதந்திரம் தருவதில்
தொடர்ந்து முதலிடம் சீனாவுக்குத்தானாம்
தம்மபதம் சொல்கிறது..
“Every one fears punishment;
Every one fears death,
Just as you do.
Therefore you don’t kill or
Cause to be killed”

புத்தமத நாடுகளில்
பூட்டானில் தடை; தாய்லாந்தில் நடைமுறை
கிறித்துவத்தில் பாவமன்னிப்பு
இருந்த போதிலும்
கிறித்துவநாடுகள் சிலவற்றில்
மரணம் தண்டனையாக சிலுவை சுமக்கிறது.
20 ஆம் நூற்றாண்டு இரத்தத்தில் கிடந்தது
உலகயுத்தங்கள்
ஆர்மேனியன் மக்கள்
ஐரோப்பிய யூதர்கள்
கம்போடியர்கள்

1937-&38 இல் ருஷ்யர்கள்
1949 இல் சீனர்கள் என்று
இலட்சக்கணக்கில் மரணதண்டனைகள்.
இந்த நூற்றாண்டிலும்
ஈழத்தில்
இப்போதும் எங்காவது...
சாதி, இனம், மதம், கட்சி, அரசியல்,
சொத்து, காமம் என்று
கொத்துக்கொத்தாக
மரணம் தண்டனையாக
அப்பாவிப் பொதுமக்களுக்கும்.
மரணம் இயற்கை எனில்
காரணம் வேண்டாம்.

தண்டனை எனில் காரணம் சொல்லப்படும்.
தண்டனைக்கு உரியவர்
தண்டனையை அனுபவிக்கவேண்டும்
மரணம் தண்டனை என்று
உயிரைப் போக்கினால்
உயிரைவிட்டபின்
அவருக்குத் தண்டனை எப்படி?
மரண தண்டனை
அவர் குழந்தைகளுக்கும் குடும்பத்திற்கும்
வாழ்நாள் தண்டனை.
குற்றமிழைத்தே தண்டனை பெற்றாலும்
மரணம்,
அவருக்குத்
தண்டனையாவதில்லை
விடுதலையாகிறது.
சுவடிக்கட்டுக்குள் மறைத்திருந்த
கத்தியால் குத்தியவனைப்
பிடிக்க ஓடிய காவலரிடம்
“தத்தாநமரேகாண்” என்று சொல்லித்
தப்பிக்கவைத்தே தண்டனை வழங்கிய
மெளிணிப்பொருள் நாயனாரைப்
பெரியபுராணம் காட்டுகிறது.

மரணம் உடலுக்கென்றால்
தண்டனை உயிருக்கும் தானே
இருந்து வருந்துவதைவிடவும்
இறந்துபோவது நல்லதென்று
தற்கொலை செய்து கொள்கிறவர்களுக்கு
மரணம் தண்டனையா? விடுதலையா?

மரணம்
இயற்கையாகவே இருக்கட்டும்
வாழ்க்கையைப்போல
யாருக்கும்
யாரும்
எதன் பொருட்டும்
மரணத்தைத் தண்டனையாக்குவது
நன்னயம் செய்யும் நாகரிகச் சமுதாயத்தின்
அடையாளமாகுமோ?
அவமானமாகாதோ?

-ம. ரா.

Friday, September 2, 2011

செப்டம்பர் இதழ்: உள்ளடக்கம்

கவிதை
ஞானக்கூத்தன்
கோகிலாராஜ்
குடந்தை பரிபூரணன்
மு. சிபிகுமாரன்
வளவ. துரையன்
நா. விச்வநாதன்
ஸ்ரீரங்க கோபாலன்

கதை
கௌசல்யா ரங்கநாதன்
மணி ராமலிங்கம்
எஸ். அசோகன்
தேவராஜ்
மதிகண்ணன்
குமாரநந்தன்


கட்டுரை
நரசய்யா
ராஜ் கண்ணன்
மரன்
க. அம்சப்ரியா

சந்திப்பு
வெங்கட் சாவாமிநாதன் அவர்களுடன் ஒரு நாள் மாலை

நூல் மதிப்புரை
மு. ராமசாமி

கடைசிப்பக்கம்
இந்திரா பார்த்தசாரதி

செப்டம்பர் மாத இதழ்



சந்தா விவரம்:


ஆண்டு சந்தா: (
உள்நாடு )ரூ220/- (வெளிநாடு)US$30
இரண்டு ஆண்டு சந்தா: (
உள்நாடு )ரூ440/- (வெளிநாடு)US$50
ஆயுள் சந்தா: (
உள்நாடு )ரூ5000/- (வெளிநாடு)US$300

அனைத்துத் தொடர்புகளுக்கும்.

பதிப்பாளர்: சேது.சொக்கலிங்கம்
கவிதா பப்ளீகேஷன்: 8, மாசிலாமணி தெரு, தியாகராயநகர், சென்னை-600 017
தொலைபேசி: 24364243, 24322177

Monday, August 15, 2011

வன்முறையாகலாமா நமது வாழ்க்கைமுறை?

ஒரே கிராமத்திற்குள்ளும்
சாதி, இனம், மொழி, மதம் என்று
கூறுபட்டுக்கிடக்கிற மக்களைப் போலவே
ஒவ்வொரு சாதிக்குள்ளும்
வாழ்வாதாரங்களுக்கு ஏற்பப்
பண்பாட்டின் வெவ்வேறு முகங்கள்
வாயாடிக்கொண்டிருக்கும்
மக்களாட்சிக் காலத்தில்
வாக்குதேடும் கட்சிகளின் பக்கபலத்தோடு
பெரும்பான்மை சிறுபான்மையைக் கட்டுப்படுத்த
பன்முகப்பண்பாட்டின் வாழ்நிலமாயிருந்த
கிராமங்களில்கூட
அமைதியின்மையும் வன்முறையும்
இறக்குமதியாகின்றன.

தகவல் தொழில்நுட்ப வசதிகள்
எட்டிப்பார்க்காத காடுமலைகளின்
பழங்குடி மக்கள் வாக்களித்தபோதும்
பொது பண்பாட்டில் அவர்களுக்கு இடமில்லை.

மாவோ இயக்கத்தினர்
எழுத்தில்லாத கோண்டி மொழிக்கு
எழுத்துருவாக்கிப்
பழங்குடிமக்களையும் படிக்கவைக்கின்றனர்
பண்பாட்டில் இடம் கிடைக்காதவர்கள்
மாவோ இயக்கத்தில் இடம்பிடிக்கிறார்கள்
வேர்விட்ட இடத்திலே படரமுடியாமலும்
புலம்பெயர்ந்த இடத்திலே வேர்விட முடியாமலும்
பண்பாடுகள் அல்லாடுகின்றன.
பழைய விழுமியங்களும் நம்பிக்கைகளும்
மதவழிப்பண்பாடாய் மாறிக்கொண்டிருக்கின்றன.
சாதி, இனம், மொழி, நாடுகடந்த
புலப்பெயர்வுகளும் கலப்பும்
மதம் கடந்த பண்பாட்டை உருவாக்கி வருகின்றன.
என்சாதி, என்இனம், என்மொழி, என்நாடு மட்டுமே
மேல்என்ற ஆதிக்கக்குரலைவிட
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றும்
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றும்
சொன்னவர்களைப் பாராட்டவேண்டும் உலகம்.

ஆனால்
எல்லாக் கடவுளும் சமம் என்று
ஏற்றுக் கொள்கிறவர்களும் கூட
எல்லாமதமும் சமம் என்பதை
ஏற்க மறுக்கிறார்கள்.

மதவழிப் பண்பாடுதான்
மக்களைப் பிரிக்கின்றன.
மதங்கள் சமமில்லை என்றால்
மதவழிப் பண்பாடுகளும் சமமில்லைதானே
உலகமயமாதலில் உருவாகும்
மதம் கடந்த பண்பாடு
மதவழிப் பண்பாட்டின்
அடித்தளத்தை அசைக்கத் தொடங்கியுள்ளது.
மதவழிப் பண்பாட்டுக் கட்டமைப்பை
மதவெறி மூட்டிக் காக்கத் துடிக்கிறார்கள்.
அடிக்கடி நடக்கும் மும்பைத் தாக்குதல்கள்
1984இல் நடந்த சீக்கியர் மீது தாக்குதல்
2002இல் குஜராத் கலவரம்
நார்வேயில் (ஜூலை 22) நடந்த
இரட்டைத் தாக்குதல்
இப்போதும் எங்காவது நடந்துகொண்டிருக்கும்
தாக்குதல்கள் எல்லாம் சாட்சியங்களாகும்.

ஐரோப்பியக்
கிறித்துவ சாம்ராச்சியத்தைக் காப்பாற்றும்
சிலுவைப் போர்வீரராகத்
தன்னைத்தானே நியமித்துக்கொண்டு
நார்வே தாக்குதலை நடத்தி முடித்த
Andres Behring Brevik எழுதிவைத்துள்ள
1500பக்க இலட்சிய அறிக்கையில்
“ஐரோப்பிய நாடுகள்
பன்முகப் பண்பாட்டிற்கு
வழிதிறந்துவிட்டன” என்று
பழிதூற்றியிருக்கிறார்.

பன்முகப்பண்பாட்டை எதிர்த்துப்போராட
பிரெஞ்சு நாட்டு சிவப்பு ஒயினும்
ஊக்க மாத்திரைகளும்
நவீனத்தொழில்நுட்ப Face Book இல் கிடைத்த
நண்பர்களின் ஆலோசனைகளும்
இந்தியாவில் தயாரித்த இலட்சிய முத்திரையும்
நார்வே தாக்குதலுக்குத் தேவைப்படுகின்றன.

தனது நாட்டில்
ஒரே முகத்தோடு கூடிய
மதவழிப் பண்பாட்டைக் காப்பாற்ற
பல்லினப் பன்னாட்டுப்
பன்முகப்பண்பாட்டு உழைப்பு தேவைப்படுகிறது.

படிக்கிற இடத்தில்
பணியாற்றும் அலுவலகங்களில்
பக்கத்து வீடுகளில் என்றிருந்த
பன்முகப்பண்பாட்டுக் காற்று
வீடுகளுக்குள்ளும் வீசத்தொடங்கியுள்ளது.
பண்பாட்டுப்பன்முகத்தை ஏற்காத
மொழியும் நாடும்
ஆயுட்காலத்தைக் குறைத்துக்கொள்கின்றன.
மதம் சாராத, பன்முகப்பண்பாட்டை எதிர்த்து
மதவழிப்பட்ட பண்பாட்டைத் திணிக்கிறபோது
அமைதியின்மையும் வன்முறையும்
அன்றாட வாழ்க்கையின்
நடைமுறை ஆகவும்கூடும்
சொல்லுங்கள்!
வன்முறையாகலாமா
நமது
வாழ்க்கைமுறை?

ம.ரா

கடைசிப்பக்கம் - இந்திரா பார்த்தசாரதி



இப்பொழுது, ‘சமச்சீர் கல்வித் திட்டம்’ அரசியல்வாதிகளிடம் அல்லலுறுவதைப் பார்க்கும்போது, ஆள்பவர்களுக்கு எது சரி, எது தப்பு என்று சொல்லும் எதற்கும் அஞ்சாத ஆன்றோர்கள் இல்லையே என்ற ஏக்கந்தான் மேலிடுகிறது. அக்காலத்தில் அரசனுக்கு இதை அறிவுறுத்துவதற்குத்தான் அமைச்சர்கள் என்ற ஆன்றோர்கள் இருந்தார்கள்.
இக்காலத்தில், ‘அறிவு ஜீவி’ என்றால் ஆங்கிலம் தெரிந்தவர்களை மட்டுந்தான் குறிக்கும் என்ற ஒரு பொதுவான கருத்து நிலவுகின்றது. காரணம், நாம் ஆங்கிலச் சொல்லாகிய ‘Intellectual' என்பதைக் குறிக்க, ‘அறிவு ஜீவி’ என்ற சொல்லை உருவாக்கிக் கொண்டோம். சமஸ்கிருத எழுத்துக்குப் பதிலாக, தமிழில் சொல்ல வேண்டுமென்றால், ‘அறிவு சீவி’. என்று சொல்லலாம். அது ஒரு வகையில் பொருந்துவதாகவும் இருக்கக் கூடும்!

அறிஞர் என்ற அழகிய தமிழ்ச் சொல் இதே கருத்தைத்தான் குறிக்கின்றது. திருவள்ளுவர் ‘அறிஞரா’ அல்லது ‘அறிவு ஜீவியா’? ‘அறிஞர்’ தான். ‘அறிவுஜீவி’ இல்லை, காரணம் அவருக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கக் கூடிய வாய்ப்பில்லை! தமிழகத்தில், சங்க காலத்தில் புலவர்கள் யாவருமே ‘அறிஞர்களாக’ அறியப்பட்டனர். அவர் அரசனாக இருக்கலாம், அமைச்சராக இருக்கலாம், பாணராக இருக்கலாம், சங்கு அறுப்பவராக இருக்கலாம், மருத்துவராக இருக்கலாம், கணியராக(விண்மீன் ஆய்வாளர்) இருக்கலாம், அவர்கள் எத்தொழில் செய்பவராக இருந்தாலும், புலமை மிக்கவராக இருந்தால் அவர்கள் ‘அறிஞர்கள்’ என்று அடையாளம் பெற்றனர்.

இவ் அறிஞர்களின் கடமை என்ன? யார் தவறு செய்தாலும், அவன் அரசனாக இருந்தாலும், சமூகத்துக்கு ஒவ்வாத காரியம் செய்தால், அதைச் சுட்டிக்காட்டித் திருத்த வேண்டியது அவர்கள் பொறுப்பு.

ஓர் அரசன், நாடு வறட்சியுற்ற காலத்தில் பொது மக்களிடமிருந்து வரி வசூலிக்கக் கூடாது. அதுதான் அக்காலத்திய அரசியல் தர்மம். அவ்வாறு செய்யாமல் அரசன் வசூலித்தானானால், அதைக் கண்டித்து, அவன் செவி கைப்ப, அவன் செய்ய வேண்டிய தர்மத்தை அவனுக்கு உணர்த்தவேண்டிய பொறுப்பு, கவிஞர்களுக்குண்டு. இவ்வாறு பாடப்படும் பாடல்களின் துறைக்கு ‘ செவியறிவுறூஉ’ என்ற பெயர்.

‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்’
‘உண்மைச் சுடும் என்று பாராமல், அரசன் கேட்க விரும்பவற்றையே சொல்லாமல், அவனுக்கும் மக்களுக்கும் நல்லவனவற்றைக் கூறும் அறிஞர்களுடைய பாதுகாவலில்லாத அரசன், பகைவர் யாருமில்லாமலேயே கெடுவான்’ என்பது இக் குறளின் பொருள்.
‘அமைச்சர்கள்’ என்றால் என்ன பொருள்? ‘அமாத்தியா’ என்ற சம்ஸ்கிருத சொல்லினின்றும் இது வந்தது. ‘நெருங்கியிருப்பவர்கள்’ என்றுதான் அர்த்தம்.எதற்காக நெருங்கியிருக்க வேண்டும்? ஜால்ரா கொட்ட அல்ல. அரசனுக்குச் சமூக நீதி எதுவோ அதை உணர்த்துவதற்குத் தான். சமஸ்கிருதச் சொல்லாகிய ‘அமாத்தியா’ என்பதற்கும் இதுதான் பொருள். வள்ளுவர் இப்பொருளில்தான், அமைச்சனை ‘உழையிருந்தான்’ என்கிறார். ‘அருகிலிருப்பவன்’ என்று பொருள்படும்.

‘அறிகொன் றறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்’
‘அறிந்து சொல்கின்றவர்களுடைய வார்த்தையையும் மதிக்காமல் ‘நான்’ எனும் செருக்கு என்கிற அறியாமையில் மூழ்கியிருக்கும் அரசனுக்கு, சமூக உண்மை நிலவரங்களை அஞ்சாமல் சொல்ல வேண்டியது அமைச்சர்களுடைய கடமை’ இக்கால ‘அறிஞர்கள்’( அமைச்சர்கள் உள்பட) தங்கள் சமூகப் பொறுப்பை, வள்ளுவர் கூறுவது போல் செயல் படுத்திக் கொண்டு வருகின்றார்களா என்ற கேள்வி எழுகின்றது.

‘சர்வாதிகாரம்’ என்றால் தடியெடுத்தவன் தண்டல்காரன் என்று பொருள். சர்வாதிகாரியை நெருங்கி இருப்பவர்கள் அவனை முதலில் மக்களிடமிருந்து அந்நியப்படுத்தி, அவன் கேட்க விரும்பிவனற்றையே அவன் காது குளிரக் கூறுவார்கள். அவனைப் பற்றியே, அவன் கவனத்தைப் பெறும் பொருட்டு, ஏராளமான புத்தகங்கள் எழுதுவார்கள். பாராட்டுக் கூட்டம் நடத்திக் கொண்டே இருப்பார்கள்.

லூயி பிஷர் என்ற அமெரிக்க ஆசிரியர், ‘ஸ்டாலினின் பிறப்பும், இறப்பும்’ என்று ஸோவியத் யூனியன் அதிபர் ஸ்டாலினைப் பற்றி ஒரு நூல் எழுதியிருக்கிறார். ரஷ்ய கொடுங்கோல் மன்னனை எதிர்த்துப் புரட்சி இயக்கம் நடத்திப் பிறகு தாம் பதவிக்கு வந்ததும் சர்வாதிகாரியாகிவிட்ட ஸ்டாலின் அவர் வாழ்நாள் முழுவதும் விரும்பிப் படித்த நூல்கள், அவருடைய அடிவருடிகளால் எழுதப்பட்ட அவருடைய வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்கள்தாம் என்கிறார் லூயி பிஷர்.

ஆள்கின்றவர் அனைவராலும் அணுகத்தக்கவராக இருத்தல் வேண்டும். நேரு ஒரு சமயம் கூறினார்: ‘இந்த அரசியல் சூழ்நிலையில் இந்த ஸ்தாபன விதிகளை எதிர்த்து, இந்நாட்டின் சாமன்யனோடு என்னால் அளவளாவ முடியவில்லையே என்று என் இயலாமையைக் குறித்து நான் வருந்துகிறேன். என் அருகில் இருப்பவர்களின் துதிகளைக் கேட்டு கேட்டு எனக்கு அலுத்துவிட்டது. சுதந்திரத்துக்கு முன்னால் இது எனக்கு சாத்தியமாயிருந்தது. அப்பொழுது நான் சுதந்திரமாக இருந்தேன்.’

நேரு ஒரு உண்மையான ஜனநாயக வாதியாக இருந்ததால் அவரால் இவ்வாறு சொல்வதற்கான கண்ணியம் அவரிடமிருந்தது. ஆனால், பதவியில் இருக்கும் பெரும்பான்மையோர், பதவிக்கு முன்னால் எப்படி இருந்திருந்தாலும், நாற்காலியில் உட்கார்ந்ததும் அடியோடு மாறிவிடுகிறார்கள். உழையிருப்பவர்களும், மற்றவர்கள் தொடர்ந்து தங்களைப் புகழ்ந்து கொண்டே யிருக்க வேண்டுமென்றுதான் விரும்புகிறார்கள். இப்பொழுது, குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைச் சாடிய ஒரு வெள்ளைக்குடிநாகனார் போன்ற ஓர் அறிஞர் சாத்தியமா? அல்லது ராட்சச விளம்பர ஆவேசங்களைக் கண்டு கூச்சப்பட்ட நேருவின் நாகரிகம், இன்று ஆள்கின்றவர்களிடையே எத்தனைப் பேருக்கு இருக்கிறது? அவர் மகளிடத்திலேயே இல்லாமல் போய்விட்டதே!

வள்ளுவர் இதை ‘நாணுடைமை’ என்கிறார். இதைப் பரிமேலழகர் அருமையாக விளக்குகிறார். ‘சால்பு, பண்பு முதலிய குணங்களால் உயர்ந்தோர் தமக்கு ஒவ்வாத கருமங்களில் நாணுதலுடையாராந் தன்மை’. ‘ஒவ்வாத கருமங்கள்’ என்பன ‘பகட்டு வெளிச்சம், ஆரவாரம். ஆர்ப்பாட்டம், தங்கள் தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ளக் கூனிக் குறுகும் மனிதரிடம் நட்புப் போன்றன’
‘அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கதின்றேல்
பிணியன்றோ பீடு நடை’.
இந்த ‘நாணுடைமை’ உள்ளவர்க்குத் தான் ‘பீடு நடை’ சாத்தியம், ‘வேண்டாமை செருக்கா’வது போல!

அகத்தில் பிணைப்பு இல்லாமல்’ முகம் நக’ப் பாராட்டிப் பேசித் தமக்கு வேண்டியவற்றைச் சாதித்துக் கொள்கின்றவர்கள்தாம் ( நம் நாட்டு அரசியல் ‘தோழமைக் கட்சிகள்’ நினைவுக்கு வருகின்றனவா?) ‘உட்பகை’ என்கிறார் வள்ளுவர்.

‘வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு’
இறுதியாக ஒரு குறள்
‘பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கூறு தலை’.
தன்னலனையே எண்ணி, அரசன் மகிழ, அவன் ‘மகிழும்’ அறிவுரை கூறும் அமைச்சர்களைக் காட்டிலும், பகைவர்கள் எழுபது மடங்கு நல்லவர்கள்.

இத்தகைய ‘அறிவுஜீவிகளை’த் தாம் ‘கூழாட்பட்டார்’ என்கிறார் பெரியாழ்வார். இன்றைய தமிழில் சொல்லப் போனால், ‘கூலிக்கு மாரடிக்கின்ற’ வர்கள்.

Wednesday, August 3, 2011

ஆகஸ்ட் இதழ்: உள்ளடக்கம்

கவிதை
நீலமணி -4
சூர்யநிலா -26
நாகேந்திரபாரதி -38
நலங்கிள்ளி -48
சௌரிராசன் -49

கதை
ஸிந்துஜா -11
சோலை சுந்தரபெருமாள் -42

மொழிபெயர்ப்புக்கதை
தமிழில் சுப்ரபாரதிமணியன் -50

கட்டுரை
செல்வா கனகநாயகம் -6
மரன் -36
நரசய்யா -39

சந்திப்பு
வெங்கட் சாமிநாதன் அவர்களுடன் ஒரு நாள் மாலை -27

நூல் மதிப்புரை
மலர் மன்னன் -62

கடைசிப்பக்கம்
இந்திரா பார்த்தசாரதி -71

Tuesday, July 26, 2011

ஆகஸ்டு மாத இதழ்






சந்தா விவரம்:


ஆண்டு சந்தா: (
உள்நாடு )ரூ220/- (வெளிநாடு)US$30
இரண்டு ஆண்டு சந்தா: (
உள்நாடு )ரூ440/- (வெளிநாடு)US$50
ஆயுள் சந்தா: (
உள்நாடு )ரூ5000/- (வெளிநாடு)US$300

அனைத்துத் தொடர்புகளுக்கும்.

பதிப்பாளர்: சேது.சொக்கலிங்கம்
கவிதா பப்ளீகேஷன்: 8, மாசிலாமணி தெரு, தியாகராயநகர், சென்னை-600 017
தொலைபேசி: 24364243, 24322177

Sunday, July 24, 2011

களங்கமற்ற வர்கள் கல்லெறியட்டும்!

வேத சங்கக் காலத்திலேயே
ஜன நாயகத்தின்
வேர் இருக்கிறது.
இன்றைய உலகில் மிகப்பெரிய
ஜனநாயக நாடு
முதல் தேர்தலில் (1952) 173 மில்லியன்
2009 தேர்தலில் 714 மில்லியன்
வாக்காளர்கள் கணக்கில்
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க நாடு
கூட்டணி சேர்ந்தாலும் கிட்டே வர இயலாது.
இந்தியாவோடு சுதந்திரம் பெற்ற
ஏனைய நாடுகளோடு ஒப்பிட்டாலும்
நெஞ்சு நிமிர்த்தி நடக்க
நியாயங்கள் உள்ளன.
அரசியல் அதிகாரமும்
அறிவியல் கலை இலக்கியச் சாதனைகளும்
அடித்தட்டு மக்களுக்கும்
கைமாறிக் கொண்டிருக்கின்றன.
உலகமே ஆடிப் போன
பொருளாதாரச் சரிவிலும்
நிலைகுலையாத இந்தியா.
குடியரசுத் தலைவர்
சில மாநில முதல்வர்கள் என்று
அதிகாரப் பகிர்வு
பெண்களுக்கும் சாத்தியமாக்கியிருக்கிறது.
ஏழை எளிய மக்கள்
கல்வி பெறவும்
அரசு நிர்வாகத்தில் பங்கேற்கவும்
இந்திய ஜனநாயகம் இடம் தந்திருக்கிறது
ஆனாலும்
ஊடகம் காட்டும் ஜனநாயகம்
ஊழல் பாழ்கிணற்றில்...
ஏழ்மை என்றால் இந்தியா என்று
உலகம் கருதியது ஒரு காலம்.
இன்று
வல்லரசுகள் திரும்பிப் பார்க்க
வளர்கிறது இந்தியா
இந்தப் பிம்பத்தைச் சிதைக்க
யாருக்கோ நாம் அடியாள் ஆகிறோமோ?
இந்தியப் பிரதமர் யார் வரவேண்டும்?
திட்டக்குழுத் தலைவர் யார் வரவேண்டும்?
இந்திய மக்களே தீர்மானித்த காலம் இருந்தது.
ஜனநாயகம் என்றால் தேர்தல் இருக்கும்.
தேர்தல் என்றால் கட்சிகள் வரும்.
ஆட்சியைப் பிடிக்க கட்சிகள் நடத்த
தொழிலதிபர்களின் கருணை வேண்டும்.
கருணை காட்டியவர்கள் அதிகாரச் செயற்பாட்டைக்
கட்டுக்குள் வைக்கும் கருத்தில் இருப்பார்கள்
நேரு சொல்கிறார்:

Elections bring out the evil side of a man
and they donot always lead to the
success of the better man....
We Compromise with some thing
that is wrong, then we have lost
the fight already and
it matters little to who tops the poll.”

இன்றைய ஜனநாயகம்
கட்சிகளின் ஜனநாயகம்
தேர்தலில்
கட்சிகளே வெற்றிபெறுகின்றன
கட்சிகளைக்
கட்டுப்படுத்தவும், ஆராதிக்கவும்
ஊடகங்கள்
ஊடகச் சிறையில்
நமது கண்களும் காதுகளும்
அதனால் தான்
ஊழல் பாழ்கிணற்றில்
இந்திய ஜனநாயகம் என்று
ஊடகம் காட்டுகிறது
உலகம் சிரிக்கிறது
நாமும் கல் எறிகிறோம்.
இந்தியாவில் ஊழலே இல்லையா?
என்பதல்ல நம் கேள்வி.
ஊழலைத் தவிர வேறொன்றுமே
இந்தியாவில்
உருப்படியாக இல்லையா?
இந்திய ஜனநாயகம்
மக்களின் ஜனநாயகமாக
மாறும் போது தான்
இமையம் உலகிற்குத் தெரியும்
ஏசுநாதர் சொல்கிறார்

“If any one of you is
without sin, let him
be the first to throw a
stone at her.”

ஆம்!
களங்கமற்றவர்கள்
கல்லெறியட்டும்!

-ம.ரா

Monday, July 18, 2011

பாகிஸ்தான் சிறுகதைகள் - வெ.சா





பாகிஸ்தான் சிறுகதைகள் தொகுப்பு இது. பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து மத அடைப்படையில், பிரிந்து அறுபது வருடங்களுக்கு மேலாகிறது. முஸ்லிம்கள் மத அடிப்படையில் மாத்திரம் ஹிந்துக்களிடமிருந்து வேறுபட்டவர்கள் இல்லை என்றும். அவர்கள் கலாசாரமும், வாழ்நோக்கும், சரித்திரமும் வேறு, என்றும் அவர்கள் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தியாவில் சிறுபான்மையினராக இருந்துகொண்டு அவர்களது வாழ்வையும் அடையாளங்களையும் காத்துக்கொள்ள முடியாது என்றும் வாதித்து கலவரங்கள் செய்து பிரிந்து சென்றார்கள். அறுபது வருட காலம் இரண்டு தலைமுறைக்கும் மேற்பட்ட காலம் தான். இன்று அறுபது வயதாகிவிட்ட எந்த பாகிஸ்தானியும் அவன் பயந்த ஹிந்து அரசின் கீழும் வாழாதவன் தான். தன் சக மதத்தினராலேயே ஆளப்படுகிறவன். தான் அந்த வாழ்க்கை, அந்த மனிதர்கள் உலகம் அவன் கண்ட கனவுகள் பற்றி இந்தக் கதைகள் சொல்லும் அல்லவா?

நமக்குத் தோப்பில் முகம்மது மீரானோ, ஜாகீர் ராஜாவோ, சல்மாவோ காட்டும் உலகம் ஏதோ வேற்று நாட்டவர் உலகம் அல்ல. வாஸ்தவம் அவர்கள் வாழ்க்கை நியதிகள் கட்டுப் படும் தர்மங்கள், அவர்கள் நம்மிலிருந்து வேறு பட்டவை. எந்த சிறு பிரிவுகளுக்கும் இடையே இந்த வேறுபாடு காணப்படும் தான். ஆனால் அவை நமக்குப் பரிச்சயமானவை. பரிச்சயம் என்ற நிலையிலிருந்து இன்னும் கொஞ்சம் ஆழமாக நமக்கு உணர்த்துபவை. அத்தகைய புரிதலிலிருந்து வேறுபட்டவை அல்ல பாகிஸ்தானில் வாழும் சிந்திகளின் வாழ்க்கையோ பஞ்சாபிகளின் வாழ்க்கையோ. அதே போலத்தான் பங்களாதேஷில் வாழும் வங்க முஸ்லிம்களின் வாழ்க்கையும். அவை நமக்குப் பரிச்சயமானவை தான்.சாதத் ஹஸன் மண்டோ இந்தியாவிலிருந்து கொண்டு எழுதுவதும் பின்னர் பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்து எழுதுவதும் பின்னப்பட்டு விடுமா என்ன? பலூச்சிஸ்தானிலும் எல்லைப்புற பிரதேசங்களிலும் வாழும் மனிதர்களின் வாழ்க்கை வேண்டுமானால் நமக்குப் பரிச்சயமில்லாததாக இருக்கலாம்.

பாகிஸ்தான் பிரிவினைக்கு முன் லாகூர் பெரிய திரைப்பட கேந்திரமாக இருந்தது. அந்த இடத்தைப் பிரிவினைக்குப் பின் மும்பை பறித்துக் கொண்டது. நிகழ்ந்தது இட மாற்றம் தான். பம்பாய் ஹிந்தி படங்கள் என்றால் பாகிஸ்தானில், ஒரு வெறி பிடித்த வரவேற்பு என்று தான் சொல்ல வேண்டும். எவ்வளவு தான் அரசு தடைகள் விதித்திருந்தாலும், பாகிஸ்தானியர்களின் பம்பாய் ஹிந்திப் பட வேட்கையை ஒன்றும் செய்ய முடிவதில்லை. திருட்டு விஸிடி எந்தத் தடையுமில்லாமல் இங்கிருக்கும் அமீர், சல்மான், ஷாருக்கான்களையும், மாதுரி தீக்ஷித்தையும் பாகிஸ்தானின் அடிமட்ட திரைப்பட ரசிகனையும் கவர்ந்த நக்ஷத்திரங்களாக்கியுள்ளன. (ஒரு ஜோக் பரவலாக எந்த பாகிஸ்தானியும் சொல்வது, “மாதுரி தீக்ஷித்தைக் கொடுத்தால், கஷ்மீரை நீங்கள் வைத்துக்கொள்ளலாம்”} எந்த பாகிஸ்தானி அதிகாரியோ, மந்திரியோ ப்ரெசிடெண்டோ எவனானாலும் அவனது இந்தியாவுக்கு எதிரான பகை உணர்வு எவ்வளவு தீவிரமாக இருந்தாலும் அவன் இங்கு காலடி வைத்ததும் பார்க்க விரும்புவது மொகலே ஆஸம் படம் தான். அதோடு அவன் மிக எளிதாக ஆர்வத்தோடு தன்னை ஐக்கியப் படுத்திக் கொள்ள முடிகிறது.

இது ஒரு காட்சி. ஒரு தரத்து மக்களின் ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் என்று சொல்லவேண்டும். இது சாதாரண மக்களின் ரசனையையும் சந்தோஷத்தையும் சொல்கிறது. ஆனால் பாகிஸ்தான் என்று முஸ்லிம்களுக்கான ஒரு தேசத்தை உருவாக்க வேண்டும் என்று முனைந்தவர்கள் இந்திய மண்ணின் பண்பாட்டிலிருந்தும், கலாசாரத்திலிருந்தும், வரலாற்றிலிருந்தும் வேறு பட்ட ஒன்றை பாகிஸ்தான் மக்களின் நாட்டின் அடையாளமாகக் காணவிரும்பினர்கள். அப்படி ஒன்று இருப்பதாகவும் அதைக் கண்டெடுத்து வளர்க்க விரும்பினார்கள். பாகிஸ்தான் 1947-இல் உருவானதாக, அறுபது வருடங்களே ஆன ஒரு புதிய நாடாக நமது சரித்திரம் சொல்லும். ஆனால் பாகிஸ்தானியர் தம் வரலாற்றை இஸ்லாம் தோற்றம் கொண்ட கணத்திலிருந்து தொடங்குவார்களா அல்லது முதல் இஸ்லாமியப் படையெடுப்பைத் தன் வரலாற்றுத் தொடக்கமாகக் கொள்வதா என்பதில் தான் அவர்களுக்குள் சர்ச்சை. படையெடுத்து தன் முன்னோர்களையும் நாட்டையும் நாசப்படுத்தியவர்களை, பலவந்தமாக மதம் மாற்றியவர்களைத் தம் தேச ஸ்தாபகர்களாகக் கொள்ளும் விசித்திரம் அது. அவர்கள் தம்மை இந்தியத் துணைக்கண்ட பண்பாட்டையும் வரலாற்றையும் பகிர்ந்து கொண்டவர்கள் தாம் பின்னர் மதம் காரணமாகப் பிரிந்தவர்கள் என எண்ணுவதில்லை. அவர்கள தம்மை அடையாளப் படுத்திக் கொள்வது மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளோடு. உலக முஸ்லிம் இனத்தோடு சேர்ந்தவர்களாகவே அவர்கள் தம்மைக் காண்கிறார்கள். அல்லது காண விரும்புகிறார்கள். காணத் தொடங்கி யுள்ளார்கள் என்று சொல்ல வேண்டும்.
அதிகார வர்க்கமும் அது சார்ந்த அறிவு ஜீவிக் கூட்டமும், மதத் தலைமைகளும் விரும்புவதும் திட்டமிட்டுச் செயல்படுவதும் ஆனால் சாதாரண மக்கள் தம் இயல்பான வாழ்க்கையை காண்பதும் நேர் எதிரானதாக உள்ளன. முதலில் சொன்னது லதா மங்கேஷ்கரையும் ஹிந்தி சினிமாவையும் உள்ளே வர அனுமதிக்காது. ஹிந்துஸ்தானி சாஸ்திரிய சங்கீத கலைஞர்கள் பெரும்பாலோர் முஸ்லிம்களாக இருந்த போதிலும் அங்கு அந்த சங்கீதத்துக்கு இடமில்லை. ஆனால் ஹிந்திப் படங்களையும் லதா மங்கேஷ்கரின் பாடல்களையும் தாங்கிய திருட்டு டிவிடிக்கள் லாகூரிலிருந்து பெஷாவர் வரை எல்லா பஜார்களிலும் தடையின்று எளிதாகக் கிடைக்கும். காபூலில் கூட கிடைத்து வந்தது இடையில் தடை செய்ய்பட்டு இப்போது மறுபடியும் கிடைக்கத் தொடங்கியுள்ளன.

பாகிஸ்தான் சிறுகதைகளைத் தொகுத்துத் தந்துள்ள இந்தஜார் ஹுஸேனுக்கு இந்த பிரசினைகள் முன்னின்றன. அதைப்பற்றியும் தன் முன்னுரையில் விரிவாக எழுதியுள்ளார்.

பிரிவினைக்குப் பிறகு, பாகிஸ்தான் என்ற ஒரு தனி நாடு உருவான பிறகு ஒரு புதிய தேசிய உணர்வு பிறக்க வேண்டும். அப்படி ஒரு உணர்வு இருப்பதாகச் சொல்லித் தானே தனியாகப் பிரிந்து செல்ல சண்டையிட்டனர். மேலும் பிரிவினைக்குப் பிறகு அதன் சரித்திரமும், அரசியல் சூழலும் தனியாகத் தான் உருவெடுக்கத் தொடங்கின. ஜனநாயகம் என்பது அவ்வப்போது பேருக்கு எட்டிப் பார்த்தாலும், பெரும்பாலும் ராணுவ சர்வாதிகார ஆட்சிதான் பாகிஸ்தானில் நிலவியது. உறவுகளும் மத்திய கிழக்கு நாடுகளோடு தான் விரும்பபட்டது.. மத உணர்வு ஒரு உச்சகட்ட தீவிரத்திற்கு புகட்டப்பட்டது. எழுப்பப்பட்டது. ஹிந்துக்களும் சீக்கியர்களும் இரண்டாம் தர குடிகளாகி ஒதுக்கப்பட்டனர். கிறித்துவர்களும் அப்படியே. ஹிந்துக் கோயில்கள் ஒவ்வொன்றாக மறைந்தன. ஆனால் தக்ஷசீலம் இன்றும் ஒரு புராதன சின்னமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. தக்ஷசீலத்தின் வரலாறு 500 கி.மு.விலிருந்து தொடங்குகிறது. அந்த புராதன நகரம் நாலந்தா போல ஒரு புராதன பல்கலைக் கழகத்துக்கு பிரஸித்தி பெற்ற பௌத்தர்களையும் ஹிந்துக்களையும் வரலாற்றோடு பிணைக்கும் நகரம். அது பாகிஸ்தான் அரசு சொல்வது போல, முகம்மது நபி தோன்றி உலகிற்கு ஒளி வீசும் முன் இருந்த இருண்ட யுகத்தைச் சேர்ந்தது. ஹிந்துக் கோயில்களை விட்டு வைக்காத அரசு இதை ஏன் பாதுகாக்கிறது என்பது புரியவில்லை. ஒரு வேளை பாமியான் புத்தரை வெடி குண்டு வைத்துத் தகர்த்த தாலிபான்களின் வருகைக்குக் காத்திருக்கிறார்களோ என்னவோ.

இந்த மாதிரியான குழப்பமான ஊஞ்சலாட்டத்தில், யதார்த்தத்திற்கும், மத அதிகார அரசியலுக்கும் .இடையேயான இழுபறியில் எழுத்தாளர்கள் உலகம் என்னவாக இருந்திருக்கும்? இருக்க அரசும் மதஸ்தாபனங்களும் விரும்பும்?. எது பாகிஸ்தானின் இலக்கியமாக, தேசிய இன அடையாளம் கொண்ட எழுத்தாகக் கருதப் படும்? பாகிஸ்தான் உருவான அதற்கு முந்தியும் பின்னரும் ஆன சமீப கால கட்டத்தை ஒதுக்கிவிட வேண்டும். அது இந்திய தேசிய உணர்வுகளின் எச்ச சொச்சங்களை பிரதிபலிப்பதாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை ஒதுக்கி பின்னர் எழும் எழுத்துக்களை மாத்திரம் எடுத்துக்கொள்ள வேண்டும், அதாவது பாகிஸ்தான் தேசிய உணர்வுடன் பாகிஸ்தானின் இன்றைய சூழலிலிருந்து எழுந்த எழுத்துக்களை மாத்திரம் தேர்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது தொகுப்பாளர் இந்தஜார் ஹுஸேனின் அணுகலாக இருந்திருக்கிறது என்று அவரே எழுதியிருக்கிறார். இன்னமும் அவர் சொல்கிறார். பிரிவினையை ஒட்டியும் அதன் பின் சற்றுக் காலம் யதார்த்த வகை எழுத்துக்களே எழுதப்பட்டன என்றும் அதன் பின் விட்டு விட்டுத் தொடர்ந்த ராணுவ யதேச்சார அரசுகளின் கட்டுப்பாட்டில் யதார்த்த வகை எழுத்துக்கள் சாத்தியமில்லாமல் போயின. காரணம் ராணுவ அடக்குமுறையில் படும் துன்பங்களை, ஏமாற்றங்களை வெளிப்படையாக சொல்லும் யதார்த்த வகை எழுத்துக்கள் எப்படி எழக்கூடும்?. யாருக்கு அந்த தைரியம் இருக்கும்? எனவே எதையும் நேரடியாகச் சொல்லாத எழுத்து முறை கையாளப்பட்டது. ”குறியீடுகளும், அருவுருவங்களும் ஒன்றோடென்று கொளுவிக்கொண்டு ஒரு புதிய அவதாரம் எடுத்தது” என்று .

கதைகளைத் தேர்ந்தெடுத்த தொகுப்பாளர் இந்தஜார் ஹுஸேன் சொல்கிறார். அதுவும் கண்டனங்களுக்கும் வரவேற்புக்கும் ஆளாகியது என்றும் சொல்கிறார். இருந்தாலும் தான் அனேக சிறந்த கதைகளை எடுத்துக்கொள்ள முடியவில்லை என்றும், பாகிஸ்தானின் 50 ஆண்டு கால சிறுகதை வளர்ச்சியை இது பிரதிபலிக்கும் என்றும் சொல்கிறார்.

இத்தொகுப்பில் பாகிஸ்தானில் பேசப்படும், உருது, பஞ்சாபி, சிந்தி, புஷ்டோ, சரைக்கி, பலூச்சி ஆகிய எல்லா மொழிகளிலிருந்தும் கதைகள் இத் தொகுப்பில் உள்ளன. மொத்தம் 32 கதைகளில், 23 உருது, 3 சிந்தி, 2 பஞ்சாபி, பலூச்சி, சரைக்கி இரண்டிலும் ஒவ்வொன்றும் பலூச்சியிலிருந்து இரண்டு. உருது மொழியில் எழுதியவர்கள் எந்தப் பிராந்தியத்தையும் சேர்ந்தவராக இருக்கலாம்.. அது எல்லோராலும் பேசப்படும், புரிந்து கொள்ளப் படும் அதிகார மொழியும் ஆகும்.
மிகுந்த எதிர்பார்ப்புடன் இத்தொகுப்பைப் படிக்கத் தொடங்கிய எனக்கு இது மிகுந்த ஏமாற்றத்தையே தந்தது. இந்தஜார் ஹுஸேனும் சிறுகதை எழுதுபவர் தான். எனினும் தன் முனைப்போடு அவர் செயல்படவில்லை. ஆஸிஃப் ஃபரூக்கி என்பவருடன் கூட்டாகவே இத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்தஜார் ஹுஸேனின் கதையையே எடுத்துக் கொள்வோமே. அவர் தந்தது இந்தக் கதையை தன் எழுத்தின் சிறந்த அடையாளமாக, பாகிஸ்தானின் இன்றைய தேச உணர்வுகளின் பிரநிதித்வப் படுத்தும் ஒன்றாக,த் தான் கருதியிருப்பார். படகு என்று அந்தக் கதையின் தலைப்பு.. அந்தக் கதை எங்கோ ஆரம்பித்து எங்கோவெல்லாமோ தன்னிஷ்டத்துக்குப்பயணம் செய்கிறது. பயணிகள். ஒயாது பெய்யும் மழை. எப்போது தம் பயணத்தைத் தொடங்கினார்கள் என்று நினைத்துப் பார்க்கிறார்கள். மழை பெய்யத் தொடங்காத அன்று தான் கிளம்பியிருப்பார்கள். வீடுகள் அடித்துச் செல்லப்படுகின்றன. அடுத்து கில்காமேஷும் தன் சக பயணிகளுடன் பேசுகிறான். உத்னாபிஷ்டமிடம் கடவுள் சொன்னாராம்.” நீ தப்ப விரும்பினால் வீட்டை இடி, படகைக் கட்டு” என்றாராம். ஒவ்வொரு உயிரினத்திலிருந்து ஒன்றை படகில் ஏற்றிக்கொள், தப்பிச் செல்” என்றாராம். பின் லாமாக் வருகிறான். நோவா வருகிறான். அடுத்து “ஒரு பிரும்ம முகூர்த்தத்தில் தொட்டியில் ஒரு மீன் வளர்ந்து தொட்டியை விட பெரிதாகிறது. அது மனு முந்தின நாள் தர்ப்பணம் செய்தபோது ஆற்றில் கிடந்த மீனாம். அது அடைக்கலம் கேட்டு முதலில் தன் கமண்டலத்தில் அடைக்கலம் தந்து எடுத்துவரப்பட்டு, வளர்ந்து பின் தொட்டியில் விடப்பட்டு பின் தொட்டியையும் மீறி வளரவே கங்கையில் விடப்பட்டு பின்னும் அது ஆற்றையும் மீறி வளரவே அதை சமுத்திரத்தில் விடுகிறார் மனு. மீன் இப்படி வளர்வது விஷ்ணு குள்ளனாக வடிவெடுத்து பின் திரிவிக்கிரமனாக உலகை அளந்த நினைவு வருகிறது. மனு பயந்து போய் இறைவனை வேண்டுகிறார். இறைவன் ஒரு பிரளயம் வரப் போகிறதென்றும், அதிலிருந்து தப்ப “ஒரு படகைக் கட்டு. ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஒன்றாக படகில் ஏற்றித் தப்பித்துக்கொள்” என்றாராம். ஒரு பெரிய சர்ப்பம் தோன்ற இந்த சர்ப்பத்தால் இந்தப் படகை மீசையோடு இறுக்கிக் கட்டு” என்று இறைவன் பணிக்க, அடுத்த பாராவில் ஹஸரத் நோவாவின் மனைவி அவனை நோக்கி வருகிறாள். அவள் முகத்தில் சாம்பல் துகள். கைகளில் கோதுமை மாவு’’ இப்படி கதை போகிறது. “போதுமடா சாமீ” என்று கதறத்தான் தோன்றுகிறது. கஜினி முகம்மதுவிலிருந்து பாகிஸ்தான் வரலாற்றைத் தொடங்குகிறவர்கள் கற்பனையில் விஷ்ணுவும், மனுவும், தர்ப்பணமும், பிரும்ம முகூர்த்தமும் கில்காமேஷும் நோவாவும் வந்து தொந்தரவு செய்வது வேடிக்கைதான்.

இது போன்று தான் பெரும்பாலான கதைகள் இத்தொகுப்பில் நிறைந்துள்ளன. என் எளிய மூளைக்கு இதெல்லாம் ஒன்றும் புரியவில்லை. நம்ம ஊர் ஸ்ட்ரக்சுரலிஸ்டுகள், போஸ்ட் மாடர்னிஸ்டுகள், மந்திர யதார்த்த வாதிகளுக்கு புரியலாமோ என்னவோ. யதார்த்தம் மீறிய கற்பனை, கதை புனைவு என்பது நம் மரபில் உள்ளது தான். பல நூற்றாண்டுகளா,க ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக. நமது புராணங்கள், பஞ்ச தந்திரக் கதைகள், நமது பழம் காவியங்கள், (பகுத்தறிவாளர்கள் கோஷமிடும் சிலப்பதிகாரத்தையும் சேர்த்து) விக்கிரமாதித்தன் கதைகள் என நிறைய உண்டு. அவற்றை நாம் சலிப்பில்லாது படிக்க முடியும். அவை யதார்த்தம் மீறிய ஒரு உலகை சிருஷ்டித்தாலும், அவற்றின் பேச்சிலும் சம்பவங்களிலும், நடப்பிலும் ஒரு அர்த்தம் இருக்கும் தர்க்கம் இருக்கும்.

ராணுவ அடக்கு முறைகளை மீறி எழுத வந்தவர்கள் இப்படி கற்பனைகளில் ஆழ நிர்ப்பந்திக்கப் பட்டார்கள் என்றால், இவை என்ன அர்த்தத்தில் ராணுவ அரசின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி நமக்கு ரகசியமாக என்ன செய்தியைச் சொல்கின்றன என்று தெரியவில்லை. இம்மாதிரியான ஜாலங்களே கதையாக உள்ளவை அனைத்தையும் நான் ஒதுக்கிவிடுகிறேன். மாதிரிக்கென ஒன்றைச் சொல்லியாயிற்று. உருது மொழியில்தான் இம்மாதிரியான கதைகள் நிரம்பத் தரப்பட்டிருக்கின்றன. மொத்தம் 503 பக்கங்களைக் கொண்ட இப்-புத்தகத்தைப் படிப்பது ரொம்பவும் பொறுமையைச் சோதிக்கிற காரியமாகப் பட்டது. கடைசியில் 32 கதைகள் தேர்ந்தெடுக்கப் பட்டவை படித்தும் பாகிஸ்தான் பற்றி ஏதும் பிம்பமோ உணர்வோ எழவில்லை.
ஆனால் எனக்குப் பிடித்திருந்த, படிக்க சுவாரஸ்யமாக இருந்த, இன்றைய, நேற்றைய பாகிஸ்தானைப் பற்றிச் சொன்ன கதைகளும் இருந்தன. முதலில் ஸதத் ஹஸன் மண்டோ வின் ஜன்னலைத் திறங்கோ. பிரிவினையின் போது நிகழ்ந்த கலவரத்தில் அம்ரித்ஸரிலிருந்து தன் மகளோடு தப்பி ஓடி வந்த சிராஜ்ஜுதீன் பாகிஸ்தானில் தன் அகதி முகாமில் சந்திப்பவர்களையெல்லாம் சகீனாவின் அடையாளம் சொல்லி சகீனாவைப் பார்த்தீர்களா என்று கேட்டு அலைகிறார். தடியும் லாரியுமாக அலையும் ஒரு வாலிபர் கூட்டத்திடமும் சொல்கிறார். அவர்கள் உதவுவதாகச் சொல்கிறார்கள். பின்னர் அம்ரித்சரில் வயல் வெளியில் பயந்து ஒடுங்கிக் கிடக்கும் ஒரு பெண்ணைப் பார்க்கிறார்கள். அவளுக்கு உணவும் ஆறுதலும் அளித்து லாரியில் எடுத்துச் செல்கிறார்கள். முகாமுக்குப் பக்கத்தில் ரயில் பாதைக்கருகில் ஒரு பெண் மூச்சற்றுக் கிடப்பதைப் பார்த்த சிலர் அவளை முகாமின் மருத்துவ மனையில் சேர்க்கிறார்கள். தன் மகளெனத் தெரிந்து பார்க்க சிராஜ்ஜுதீன் அங்கு வர டாக்டர் ஜன்னலைத் திறந்து வெளிச்சத்தில் பார்க்க அவள் விரல்கள் அசைய நல்ல வேளை உயிருடன் இருக்கிறாள் என்று சொல்கிறார். அந்தப் பெண்ணின் விரல்கள் அசைந்தது தன்னையறியாது தன் பாவாடை நாடாவைத் தளர்த்தத் தான். வெறி பிடித்த கும்பல் மதமும் அறியாது. மனிதாபிமானமும் அறியாது என்று மண்டோ யாரை நோக்கிச் சொல்கிறார்? ஹிந்துக்களையா முஸ்லிம்களையா?

பிரிவினைக்கு முன்னும் பின்னும், இந்தியாவிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் எழுதியவர் மண்டோ. அவர் யார்?

இந்தஜார் ஹுஸேன் மண்டோ பாகிஸ்தானுக்குப் போன பின் எழுதிய கதையிலிருந்துதான் பாகிஸ்தானிய கதை என்று ஒன்றைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இந்தக் கதையிலிருந்து மண்டோ எந்த வகைப் படுத்தலில் அகப்படுகிறார்?

பகவன் தாஸ் மேஸ்திரி என்று ஒரு கதை ஷௌக்கத் சித்திக் என்பவர் எழுதியது. யார் நிலத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது என்பது ஒரு கிராமத்துக் கலவரப் பிரசினை. கலவரம் வெட்டு குத்து என்று வளரும் ஒன்று. இரண்டு தரப்புகளும் மோதிக்கொள்ளும் போது பகவன் தாஸ் மேஸ்திரி எந்த அதிகாரமும் இல்லாத போதும் தன் எளிமையும் இல்லாமையுமே தன் தார்மீக பலமாக அவர்களைச் சமாதானப்படுத்துகிறார். இவர்கள் ஜீலம், சிந்து நதிக்கரையில் வாழும் நிலப் பிரபுக்கள் இல்லை. மலைப் பகுதிகளில் வாழும் இனக்குழு மக்கள். அவர்களுக்கு ஒரு பெரிய மனுஷர். நீதி மன்றமாக இருப்பவர். சர்தார் மஜாரி. அவர் எந்த வழக்கையும் தள்ளிப் போடும் சுபாவத்தவர். ஒரு பழைய வழக்கைத் தீர்த்தே ஆகவேண்டும். எத்தனை காலம் தான் தள்ளிப் போடுவது? இரண்டு தரப்பையும் அபராதம் கட்டச் சொல்லி அதை, அந்த அபராதத்தை பகவான் தாஸ் மேஸ்திரிக்குக் கொடுக்கிறார். இதுவும் ஒரு மாதிரியான கட்டைப் பஞ்சாயத்து தான். அதில் சர்தார் மஜாரியிடம் பாது காப்பு பெறுவது, அங்கு அந்த மலைப் பிரதேச இனக் குழு முஸ்லிம்களிடையே தனித்து விடப்பட்ட பலமற்ற ஹிந்து மேஸ்திரி.

கதவு எண் 34 ஒரு சிந்தி கதை. சக்கர் அணைக்கட்டை பார்வையிட வந்த காவலாளி அங்கு ஒரு கதவில் பிணம் ஒன்று கிடப்பதைப் பார்த்து ரொம்ப விசுவாசமாக, நல்ல பிரஜையாக போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்கிறான். அங்குள்ள போலீஸும் நம்மூர் போலீஸ் மாதிரிதான். நீண்ட வாதத்திற்குப் பின், அதைத் தள்ளிவிட முடியாது ஒரு ஆளை அனுப்பி பார்த்து வரச் சொல்கிறான். பார்த்தவன் அது கதவு 35-இல் தொங்குவதால் தன் ஆணைக்குட்பட்டதல்ல என்று இன்னொரு போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி விடுகிறான். அத்தோடு அந்தப் பிணத்தை அடுத்த கதவில் தொங்கவிடச் செய்து விடுகிறான். இதே கதை அடுத்த போலீஸ் ஸ்டேஷனிலும் நடக்கிறது. அதைப் பார்வையிடச் சென்றவன் அது கதவு எண் 34-இல் தொங்குவதால் தன் அதிகார வரம்பிற்குட்பட்டதல்ல என்று சொல்லி அந்தப் பிணத்தை மறுபடியும் கதவு 35இலிருந்து 34-க்கு எடுத்துச் சென்று தொங்கவிடுகிறான். எந்த போலீஸும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாத அந்தப் பிணம் கடைசியில் ஆற்றில் தூக்கி எறியப்பட்டு கேஸ் க்ளோஸ் செய்யப்படுகிறது விசாரணை இல்லாமலேயே. இவர்கள் நல்லவர்கள் என்று தோன்றுகிறது. நம்மூரில் புகார் சொல்லவந்தவன் கொலை காரனாவான், எந்த கட்சிக் காரன் என்று விசாரித்து. அல்லது அவனிடம் பணம் பிடுங்கலாமா என்று பார்ப்பான்.

இஸ்மெய்ல் கௌஹரின் ‘அப்பா’ கதை புஷ்டோ கதை. பட்டாணிய இன மக்களைத் தான் நமக்குத் தெரியுமே. ஒரு நிலத் தகராறு. வெளியில் வீட்டு வாசலில் சத்தம் கேட்டதும் துப்பாக்கி எடுத்து வெளியே வருகிறார் அப்பா. மனைவி தடுக்கிறாள். இரண்டு மகன்களும் அழுகிறார்கள். வெளியே வந்த அப்பா தகராறு செய்த குல்மீரின் இரண்டு மகன்களையும் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பி ஓடிவிடுகிறார். பின்னர் வெகுநாட்கள் கழித்து பிடிபட்டதும் அவர் கோபம் தணிந்து கிராமத்துப் பஞ்சாயத்துத் தீர்ப்புக்கு பணிவதாகச் சொல்கிறார். பஞ்சாயத்து பெரியவர்கள் தீர்ப்பு சொல்கிறார்கள். ஒரு லக்ஷம் பணம் நஷ்ட ஈடாகவும் அத்தோடு ஒரு பெண்ணையும், அப்பா. குல்மீருக்குக் கொடுக்கவேண்டும். கொடுப்பதற்கு அப்பாவிடம் இருக்கும் பெண் அவர் மனைவி தான். அப்பா தன் இரு மகன்களோடு தனித்து விடப் படுகிறார். குல்தீனுக்கு ஒரு லக்ஷம் பணமும் ஒரு பெண்ணும் கிடைக்கிறது. பஞ்சாயத்துத் தீர்ப்பை கிராமமே ஒத்துக்கொண்டு சமாதானமடைகிறது.

நீறு பூத்த நெருப்பு. சரைக்கி இலாகாவைச் சேர்ந்த கதை. இன்றைக்கான கதை. என்றைக்குமான கதை. தார் பாலை வனத்தில் தலைமறைவில் வாழும் ஒரு ரகசிய புரட்சியாளர் கூட்டம். ஹூஸ்னி தலை மறைவாக வாழ் இடம் தேடி வருகிறார். கடைசியில் விசாரித்து வந்த இடம் இரண்டு பெண்கள் தனித்து வாழும் ஒரு குடிசை. ஒரு பெண் ஆசிரியை. இன்னொருத்தி இளையவள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தகவல் எடுத்துச் செல்பவள். கதை நிகழ்வுகள் என்று ஏதும் இல்லை. அவர்கள் அங்கு வாழும் சூழ்நிலையைச் சொல்கிறது. இரண்டு பெண்கள். ரகசிய வாழ்வில். பேப்பரில் ஹூஸ்னியின் பெயர் வந்து விடுகிறது. ஹூஸ்னி அந்த இடத்தை விட்டு மறுபடியும் வெளியேறுகிறார். வழியில் தான் வழி கேட்ட பக்கிரி ஹூஸ்னியைக் கடிந்து கொள்கிறார்.

இப்படி இன்னும் ஒரு சில கதைகள் உள்ளன. இன்றைய பாகிஸ்தானின் காட்சிகள் சிலவற்றை நமக்குச் சித்திரித்துக் காட்டுபவை.

ஆனால் மொத்தத்தில் 500 பக்கங்களில் ஒரு பெரும்பகுதி வெறும் மாயா ஜாலங்கள். நாம் அவை எதுவும் சொல்கின்றனவா என்று தலையைச் சொரிந்து கொள்ளவேண்டியது தான். அப்படி என்ன இந்த மாயா ஜாலங்கள் ராணுவ அரசை எதிர்த்து ரகசிய மொழியில் என்ன சொல்ல முயல்கின்றன, தெரியவில்லை.

பாகிஸ்தான் சிறுகதைகள் தொகுப்பு: இந்தஜார் ஹுஸேன். தமிழாக்கம் மா. இராமலிங்கம் “எழில் முதல்வன்” வெளியீடு சாகித்ய அகாடமி, குணா பில்டிங்ஸ், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, சென்னை-600 001
பக்கங்கள் 503 விலை ரூ 220

Saturday, July 16, 2011

இன்று பகல் உணவுக்கு...


ஈரோடு தமிழன்பன்

எந்தக் கவிதையும்
இந்தப் பகலில் கனவுகாண முடியாது
வார்த்தைகளின்
வெப்ப தட்ப நிலைகளைப் பொருத்தமாகப்
பராமரிக்க முடியவில்லை;
குளிரூட்டும் யாப்பு உறுப்பு எதையும்
யாப்பிலக்கணக்காரன்
கண்டுபிடித்துத் தரமுடியவில்லை
அர்த்தம் ஆவியாகப் போய்விடாமல்
பாதுகாப்பதற்குக் கவிஞனாலும் வழிசொல்ல
முடியவில்லை.

இன்று பகல் உணவுக்கு உன் வீட்டுக்கு
நீ சொன்னபடி வரமுடியவில்லை நண்பனே!

பகலை எழுத எழுதக்
காலம் கூடத் தனது கையைச்
சுட்டுக் கொள்கிறது
மரத்தின் அடியிலிருந்து வெளியே வர
அஞ்சுகிறது நிழல்
பறவைக் கூடுகள் சட்டிகளாக அவற்றுள்
வெயில்
வெள்ளைக் கிழங்குகளை வேகவைக்கிறது
இரவின் தூதர்கள் கைது செய்யப்பட்டும்
பூடகக் கவிதைகளுக்குள்ளும்
கடவுள் தரகர்களின் உதடுகளுக்குள்
ஒடுங்கியிருக்கும் உச்சாடனங்களிலும்
அடைக்கப்பட்டனர்.

எங்கிருந்து எதிர்ப்புக் கிளம்பும் என்று
வெப்பத் துப்பாக்கிகளோடு
வேவு பார்த்துக் கொண்டிருக்கிறது பகலின்
உளவுப் படை
இன்று பகல் உணவுக்கு உன்வீட்டுக்கு
நீ சொன்னபடி வரமுடியவில்லை நண்பனே!

பகல் தாள்களில்
பதிப்பிக்கப்பட்டிருக்கும் கோடை உத்தரவுகளால்
பச்சை உடைகள் களையப்பட்டுப்
பரிசோதிக்கப் படுகின்றன வனங்கள், காடுகள்,
மலைச்சரிவுகள்
கிணறு குளங்களின் திரவ வாழ்க்கை மீது
விசாரணைகள் நடத்தப்படுகின்றன
கருத்த காகங்கள் மேலும் கரித்து
கரைதல் தடைசெய்யப்பட்ட அச்சத்தில்,
உடைய இருக்கும் கிளைகள் மீது
உட்காருவதும் எழுவதுமாய் உள்ளன.

ஈரம் பறிமுதல் செய்யப்பட்ட
உரையாடல்களின் விக்கல்களுக்குள்
புழுங்கிப் புதைகின்றனர் மக்கள்
நதிகளின் ஓடைகளின் ஏரிகளின்
வெறுமைகளுக்குள் இருந்து மனிதர்களை
விழுங்க
ஒரு பெரிய சமாதியாக வாய்திறக்கிறது
பகல்
ஒருவேளை அங்கு நாம் பார்த்துக் கொள்ளலாம்
இன்று பகல் உணவுக்கு உன்வீட்டுக்கு
நீ சொன்னபடி வரமுடியவில்லை நண்பனே!

Friday, July 15, 2011

வீதிதோறும் காமதேனு - இந்திரா பார்த்தசாரதி



தமிழ் நாட்டில் இன்று பணத்தை அள்ளித்தரும் காமதேனுவாக இருப்பது கல்வி வியாபாரம். வியாபாரம் செவ்வனே நடப்பதற்கு உறுதுணையாக இருப்பவர்கள் ஆட்சியில் அமர்ந்திருக்கும் அரசியல்வாதிகள்.

கல்வியின் நோக்கம் இதுதானா? ‘கல்’ என்றால் ‘தோண்டுதல்’. இது ‘வி’ என்ற விகுதி பெற்றுக் ‘கல்வி’ என்றாகிறது. ‘தோண்டுதல்’ என்றால் துருவித்துருவி ஆராய்தல். அதாவது கல்வியின் நோக்கம் விசாரித்துத் தெளியும் அறிவு.

பிரமிப்பு உணர்வுதான் அறிவின் தொடக்க நிலை. முதல் அடிவைக்கக் கற்று நடக்கும் குழந்தைக்குப் பிரபஞ்சத்தின் எல்லையின்மையை அறிந்துகொள்ளத் தூண்டி விரியும் பிரமிப்பு உணர்வு. சந்திரனில் காலை வைத்த லூ யிஸ் ஆர்ம்ஸ்டாராங் சொன்ன முதல் வாக்கியம்‘ ‘மனிதனுக்கு ஓர் சிறிய அடி, ஆயினும் இது மனித சமுதாயத்துக்கு மாபெரும் பாய்ச்சல்’ அணுவாக(வாமனாக) வந்து அகிலத்தை அளந்த திருவிக்கிரமனைப் போல.

தற்காலக் கல்வித் திட்டத்தில் இப்பிரமிப்பு உணர்வின் உந்துதலினால் விளையும் விசாரணை அறிவுக்கு இடமிருக்கின்றதா? கல்வியை வியாபாரமாக்கிய பிறகு, விசாரணை அறிவைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்?

பழங்காலத்தில் கல்வியை மூன்று நிலைகளில் கண்டார்கள்.
1. ஸ்ரவணம்
2. மனனம்
3. நிதிதியாசனம்.

‘ஸ்ரவணம்’ என்பது கேள்வி அறிவு. ’கற்றலில் கேட்டல் நன்று’
‘மனனம்’ என்பது கற்பவற்றை மனத்தில் நிறுத்துதல்.
சிந்தனையை ஒருமைப்படுத்தி விசாரித்தறியும் அறிவு ‘நிதிதியாசனம்’.
‘தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத் தூறும் அறிவு’ என்பது குறள்.

ஆனால் இன்றையக் கல்வித் திட்டத்தில் காலியாக இருக்கும் அறையைப் பொருள்கள் வைத்து நிரப்புவது போல், ஒரு மாணவனின் மூளையைத் தன்னளவில் செயல்பட வைக்காமல், ஏட்டுக் கல்வியை வைத்துத் திணிக்கிறார்கள்.

உபநிஷத்தில் சனத்குமாரன் நாரதரிடம் சொல்லுகிறான்: ‘நீ வேதங்களை மனனம் செய்திருப்பதாகக் கூறுகிறாய். நீ கற்றிருப்பவை அனைத்தும் வெறும் வார்த்தைகள்தாம்’.
‘வார்த்தைகள், வார்த்தைகள், வார்த்தைகள்’ என்று சலிப்புடன் அலுத்துக் கொள்கின்றான் ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட்.

இன்றையக் கல்வித் திட்டத்தின்படி, ஒரு கெட்டிக்கார மாணவன் என்பவன் சுயமாகச் சிந்திக்கத் தெரியாத, மற்றவர்களால் மூளையில் நிரப்பப்பட்ட ஒரு நடமாடும் கலைக்களஞ்சியம், அவ்வளவுதான். தன் அறிவை ஓர் ஆக்கப்பூர்வமான கருவியாகப் பயன்படுத்தத் தெரியாத ஒரு புத்தக அலமாரி.

முன்பெல்லாம், சுதந்திரம் பெற்ற பிறகு, ஒரு இளைஞனின் அதிக பட்ச ஆசை, ஐ.ஏ.எஸ் தேர்வுகளில் வெற்றிப் பெற வேண்டுமென்பது. இப்பொழுது மென்பொருள் விஞ்ஞானி ஆக வேண்டுமென்பது. காரணம், கவர்ச்சிகரமான வேலை, கைநிறையச் சம்பளம். ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் இப்பொழுதெல்லாம் அமைச்சர்களின் கொத்தடிமை என்பதால், அதில் இருந்த கவர்ச்சி போய்விட்டது.

உண்மையான கல்வி அறிவு நடைமுறை அறிவை (சிஷீனீனீஷீஸீ sமீஸீsமீ) விரிவாக்கும். இதை விளக்க ஒரு கதை உண்டு.

ராமானுஜருடைய சிஷ்யர் கூரேசர். அவருடைய மகன் பராசரப்பட்டர். கருவிலே திருவுடையவரான அவர், சிறுவனாக இருந்தபோது, அவர் தோழர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த தெருவில், வட இந்தியாவிலிருந்து அனைத்து நூல்களையும் கற்றறிந்த ஒருவர் விருது ஊதிக்கொண்டு வந்தார். (அதாவது, அந்தக் காலங்களில்,கல்வி கேள்விகளில் சிறந்த ஒருவர் வீதியில் வரும் போது, அவர் பெற்ற பட்டங்களையெல்லாம் ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டு வருவது வழக்கம். நாம் இன்றும் அந்த மரபை வேறு வகைகளில் பேணி வருகிறோம் என்பது அனைவரும் அறிந்த செய்தி.) பட்டர் வீதியிலிருந்த மண்ணைக் கையில் அள்ளி கொண்டு அந்த சர்வஞ்ஞரிடம் போய், ‘இதில் எவ்வளவு மண் இருக்கிறது?’ என்று கேட்டார். அந்த அறிஞர் அவர் கையை நெடுநேரம் உற்றுப் பார்த்து மனத்தில் கணக்குப் போட்டு யோசித்துப் பார்த்து விட்டு, ‘எவ்வளவு மண் என்று எப்படிச் சொல்ல முடியும்? எண்ணிப் பார்த்தால்தான் தெரியும்.” என்றார்.

பட்டர் சொன்னார்: ‘அறிஞரே! ஒரு கைப்பிடி மண் என்று சொல்லத் தெரியவில்லையே! உங்களுக்கா விருது?’ நூல்களைப் படித்தால் மட்டும் போதாது, படித்தவற்றின் அடிப்படையில், சுயமாகச் சிந்திக்கப் பழக வேண்டுமென்பதை விளக்க இக்கதை.
இன்று நம் பள்ளிக்கூடங்களோ, அல்லது பல்கலைக் கழகங்களோ அப்படி இயங்குகின்றனவா? வகுப்பறைகள் நாடக அரங்குகளாயிருக்கின்றன. ஆசிரியர் நிகழ்த்தும் கலைஞர். மனனம் செய்தவற்றை வசனமாக ஒப்பிக்கின்றார். மாணவர்கள் பார்வையாளர்கள். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமிடையே அறிவுபூர்வமான உரையாடல் ஏதுமில்லை. எல்லாம் ஆசிரியரின் தனிமொழிதான். மாணவர்களைச் சிந்திக்கத் தூண்டினால்தானே உரையாடல் சாத்தியம்?
சாந்தோக்கிய உபநிஷத் கூறுகிறது:‘ சிஷ்யனைச் சிந்திக்கத் தூண்டுபவனே ஓர் உண்மையான குரு. அவர் சிஷ்யனைக் கைப் பிடித்துப் போய்ச்சேர வேண்டிய இடத்துக்கு அழைத்துச் செல்ல மாட்டார். அவர் இந்தத் திசையில் உன் நாடாகிய காந்தார தேசம் இருக்கிறது. வழியை விசாரித்துக் கொண்டு போ என்று சொல்லும் வழிகாட்டி. நீ இவ்வாறு விசாரித்துப் போவதனால் பெறும் அநுபவமே கல்வியறிவு’.

ஒவ்வொரு மாணவனின் உள் ஆற்றலை அவனுக்கே தெளிவிக்கும் ஒரு கலாசாரக் கருவியாகத்தான் ஆசிரியர் இருக்க வேண்டுமென்றால், அப்பணி அவ்வளவு எளிதன்று. எல்லா வகைகளிலும் பரிணாமமுற்று, நன்கு தேர்ந்த ஆசிரியரால்தான் இதைச் செய்ய இயலும்.
இன்று பல்கலைகழகப் பேராசிரியர்களில் பெரும்பான்மையோர் இப்பணிக்கு வேறு பல வாய்ப்புக்களை இழந்ததன் காரணமாக வந்தவர்கள். மற்றவர்கள், ஆட்சிபீடத்தின் ஆசிர்வாதத்தால் வந்தவர்கள். இவர்களில் மீனாட்சிசுந்தரம் பிள்ளைகளையோ, தியாகராசச் செட்டியார்களையோ எதிர்பார்க்க முடியாது.

கல்வியையும் கலாசாரத்தையும் பிரித்துக் காண இயலாது. கல்வியின் நோக்கமே, தனிமனித சுயசிந்தனையினால், சமூகப் பண்பாட்டைப் பேணுதல் என்பதுதான்.
கலையின் சாரத்தைத் தனதாக்கிக் கொள்ளுதல் கல்வி. ‘கற்கும் கல்விக்கு எல்லை இலனே’ என்னும் என்பது திருவாய்மொழி. அதாவது, கல்விக்கு நிலைக்களனாக இருக்கும் பிரமிப்பு உணர்வுக்கு ஓய்வே இல்லை என்று பொருள்.’ அறியுந்தொறும் அறியாமைக் கண்டற்றால்’ என்றார் வள்ளுவர்.

‘ஒழுக்கம் என்றால் நடை யழகு.
ரீபூக் கடையில் ஆயிரம் ரூபாய்’
என்பது போல், கல்வியைக் கடை வியாபாரமாக்கிவிட்டால், கலாசாரம் எங்கிருந்துவரும்?