Friday, July 15, 2011

வீதிதோறும் காமதேனு - இந்திரா பார்த்தசாரதி



தமிழ் நாட்டில் இன்று பணத்தை அள்ளித்தரும் காமதேனுவாக இருப்பது கல்வி வியாபாரம். வியாபாரம் செவ்வனே நடப்பதற்கு உறுதுணையாக இருப்பவர்கள் ஆட்சியில் அமர்ந்திருக்கும் அரசியல்வாதிகள்.

கல்வியின் நோக்கம் இதுதானா? ‘கல்’ என்றால் ‘தோண்டுதல்’. இது ‘வி’ என்ற விகுதி பெற்றுக் ‘கல்வி’ என்றாகிறது. ‘தோண்டுதல்’ என்றால் துருவித்துருவி ஆராய்தல். அதாவது கல்வியின் நோக்கம் விசாரித்துத் தெளியும் அறிவு.

பிரமிப்பு உணர்வுதான் அறிவின் தொடக்க நிலை. முதல் அடிவைக்கக் கற்று நடக்கும் குழந்தைக்குப் பிரபஞ்சத்தின் எல்லையின்மையை அறிந்துகொள்ளத் தூண்டி விரியும் பிரமிப்பு உணர்வு. சந்திரனில் காலை வைத்த லூ யிஸ் ஆர்ம்ஸ்டாராங் சொன்ன முதல் வாக்கியம்‘ ‘மனிதனுக்கு ஓர் சிறிய அடி, ஆயினும் இது மனித சமுதாயத்துக்கு மாபெரும் பாய்ச்சல்’ அணுவாக(வாமனாக) வந்து அகிலத்தை அளந்த திருவிக்கிரமனைப் போல.

தற்காலக் கல்வித் திட்டத்தில் இப்பிரமிப்பு உணர்வின் உந்துதலினால் விளையும் விசாரணை அறிவுக்கு இடமிருக்கின்றதா? கல்வியை வியாபாரமாக்கிய பிறகு, விசாரணை அறிவைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்?

பழங்காலத்தில் கல்வியை மூன்று நிலைகளில் கண்டார்கள்.
1. ஸ்ரவணம்
2. மனனம்
3. நிதிதியாசனம்.

‘ஸ்ரவணம்’ என்பது கேள்வி அறிவு. ’கற்றலில் கேட்டல் நன்று’
‘மனனம்’ என்பது கற்பவற்றை மனத்தில் நிறுத்துதல்.
சிந்தனையை ஒருமைப்படுத்தி விசாரித்தறியும் அறிவு ‘நிதிதியாசனம்’.
‘தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத் தூறும் அறிவு’ என்பது குறள்.

ஆனால் இன்றையக் கல்வித் திட்டத்தில் காலியாக இருக்கும் அறையைப் பொருள்கள் வைத்து நிரப்புவது போல், ஒரு மாணவனின் மூளையைத் தன்னளவில் செயல்பட வைக்காமல், ஏட்டுக் கல்வியை வைத்துத் திணிக்கிறார்கள்.

உபநிஷத்தில் சனத்குமாரன் நாரதரிடம் சொல்லுகிறான்: ‘நீ வேதங்களை மனனம் செய்திருப்பதாகக் கூறுகிறாய். நீ கற்றிருப்பவை அனைத்தும் வெறும் வார்த்தைகள்தாம்’.
‘வார்த்தைகள், வார்த்தைகள், வார்த்தைகள்’ என்று சலிப்புடன் அலுத்துக் கொள்கின்றான் ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட்.

இன்றையக் கல்வித் திட்டத்தின்படி, ஒரு கெட்டிக்கார மாணவன் என்பவன் சுயமாகச் சிந்திக்கத் தெரியாத, மற்றவர்களால் மூளையில் நிரப்பப்பட்ட ஒரு நடமாடும் கலைக்களஞ்சியம், அவ்வளவுதான். தன் அறிவை ஓர் ஆக்கப்பூர்வமான கருவியாகப் பயன்படுத்தத் தெரியாத ஒரு புத்தக அலமாரி.

முன்பெல்லாம், சுதந்திரம் பெற்ற பிறகு, ஒரு இளைஞனின் அதிக பட்ச ஆசை, ஐ.ஏ.எஸ் தேர்வுகளில் வெற்றிப் பெற வேண்டுமென்பது. இப்பொழுது மென்பொருள் விஞ்ஞானி ஆக வேண்டுமென்பது. காரணம், கவர்ச்சிகரமான வேலை, கைநிறையச் சம்பளம். ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் இப்பொழுதெல்லாம் அமைச்சர்களின் கொத்தடிமை என்பதால், அதில் இருந்த கவர்ச்சி போய்விட்டது.

உண்மையான கல்வி அறிவு நடைமுறை அறிவை (சிஷீனீனீஷீஸீ sமீஸீsமீ) விரிவாக்கும். இதை விளக்க ஒரு கதை உண்டு.

ராமானுஜருடைய சிஷ்யர் கூரேசர். அவருடைய மகன் பராசரப்பட்டர். கருவிலே திருவுடையவரான அவர், சிறுவனாக இருந்தபோது, அவர் தோழர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த தெருவில், வட இந்தியாவிலிருந்து அனைத்து நூல்களையும் கற்றறிந்த ஒருவர் விருது ஊதிக்கொண்டு வந்தார். (அதாவது, அந்தக் காலங்களில்,கல்வி கேள்விகளில் சிறந்த ஒருவர் வீதியில் வரும் போது, அவர் பெற்ற பட்டங்களையெல்லாம் ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டு வருவது வழக்கம். நாம் இன்றும் அந்த மரபை வேறு வகைகளில் பேணி வருகிறோம் என்பது அனைவரும் அறிந்த செய்தி.) பட்டர் வீதியிலிருந்த மண்ணைக் கையில் அள்ளி கொண்டு அந்த சர்வஞ்ஞரிடம் போய், ‘இதில் எவ்வளவு மண் இருக்கிறது?’ என்று கேட்டார். அந்த அறிஞர் அவர் கையை நெடுநேரம் உற்றுப் பார்த்து மனத்தில் கணக்குப் போட்டு யோசித்துப் பார்த்து விட்டு, ‘எவ்வளவு மண் என்று எப்படிச் சொல்ல முடியும்? எண்ணிப் பார்த்தால்தான் தெரியும்.” என்றார்.

பட்டர் சொன்னார்: ‘அறிஞரே! ஒரு கைப்பிடி மண் என்று சொல்லத் தெரியவில்லையே! உங்களுக்கா விருது?’ நூல்களைப் படித்தால் மட்டும் போதாது, படித்தவற்றின் அடிப்படையில், சுயமாகச் சிந்திக்கப் பழக வேண்டுமென்பதை விளக்க இக்கதை.
இன்று நம் பள்ளிக்கூடங்களோ, அல்லது பல்கலைக் கழகங்களோ அப்படி இயங்குகின்றனவா? வகுப்பறைகள் நாடக அரங்குகளாயிருக்கின்றன. ஆசிரியர் நிகழ்த்தும் கலைஞர். மனனம் செய்தவற்றை வசனமாக ஒப்பிக்கின்றார். மாணவர்கள் பார்வையாளர்கள். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமிடையே அறிவுபூர்வமான உரையாடல் ஏதுமில்லை. எல்லாம் ஆசிரியரின் தனிமொழிதான். மாணவர்களைச் சிந்திக்கத் தூண்டினால்தானே உரையாடல் சாத்தியம்?
சாந்தோக்கிய உபநிஷத் கூறுகிறது:‘ சிஷ்யனைச் சிந்திக்கத் தூண்டுபவனே ஓர் உண்மையான குரு. அவர் சிஷ்யனைக் கைப் பிடித்துப் போய்ச்சேர வேண்டிய இடத்துக்கு அழைத்துச் செல்ல மாட்டார். அவர் இந்தத் திசையில் உன் நாடாகிய காந்தார தேசம் இருக்கிறது. வழியை விசாரித்துக் கொண்டு போ என்று சொல்லும் வழிகாட்டி. நீ இவ்வாறு விசாரித்துப் போவதனால் பெறும் அநுபவமே கல்வியறிவு’.

ஒவ்வொரு மாணவனின் உள் ஆற்றலை அவனுக்கே தெளிவிக்கும் ஒரு கலாசாரக் கருவியாகத்தான் ஆசிரியர் இருக்க வேண்டுமென்றால், அப்பணி அவ்வளவு எளிதன்று. எல்லா வகைகளிலும் பரிணாமமுற்று, நன்கு தேர்ந்த ஆசிரியரால்தான் இதைச் செய்ய இயலும்.
இன்று பல்கலைகழகப் பேராசிரியர்களில் பெரும்பான்மையோர் இப்பணிக்கு வேறு பல வாய்ப்புக்களை இழந்ததன் காரணமாக வந்தவர்கள். மற்றவர்கள், ஆட்சிபீடத்தின் ஆசிர்வாதத்தால் வந்தவர்கள். இவர்களில் மீனாட்சிசுந்தரம் பிள்ளைகளையோ, தியாகராசச் செட்டியார்களையோ எதிர்பார்க்க முடியாது.

கல்வியையும் கலாசாரத்தையும் பிரித்துக் காண இயலாது. கல்வியின் நோக்கமே, தனிமனித சுயசிந்தனையினால், சமூகப் பண்பாட்டைப் பேணுதல் என்பதுதான்.
கலையின் சாரத்தைத் தனதாக்கிக் கொள்ளுதல் கல்வி. ‘கற்கும் கல்விக்கு எல்லை இலனே’ என்னும் என்பது திருவாய்மொழி. அதாவது, கல்விக்கு நிலைக்களனாக இருக்கும் பிரமிப்பு உணர்வுக்கு ஓய்வே இல்லை என்று பொருள்.’ அறியுந்தொறும் அறியாமைக் கண்டற்றால்’ என்றார் வள்ளுவர்.

‘ஒழுக்கம் என்றால் நடை யழகு.
ரீபூக் கடையில் ஆயிரம் ரூபாய்’
என்பது போல், கல்வியைக் கடை வியாபாரமாக்கிவிட்டால், கலாசாரம் எங்கிருந்துவரும்?

No comments:

Post a Comment