Thursday, July 14, 2011

கவிதை

இந்த முறை
என்னைக் கொல்லப் போவதில்லையென
அறியலானேன்
கொலையாளி
பிறந்த நாளுக்கென
ரோஜாக்களைப் பரிசளிப்பதில்லை
பசித்த முகத்தின்
சுவாச மறிந்து
விருந்துச் சோறு தருவதில்லை
கொலை செய்கிறவன்.
தெருக் குழந்தையை
அள்ளியெடுத்து
இக்கத்தில் வைத்துக் கொள்கிறவன்
கொலை செய்யக் கூடுமென்று
யாரும் நம்பப் போவதில்லை
உதடுகளில் பொருத்திய
சொற்களைத் தூர வீசிவிட்டு
புன்னகையைப்
போவோர் வருவோர்க்கெல்லாம்
வாரியிறைக்கிறவனுக்கு
கொலை வெறி இருக்குமென
சந்தேகிக்க வேண்டியதில்லை
என்னை முத்தமிடுகிறாய்
அணைத்துக் கொள்கிறாய்
ஆயிரமாயிரம் ஆண்டு
வாழ்ந்துவிட வேண்டுமென்று
திரும்பத் திரும்ப பிரியமாகிறாய்
எனினும்
இவைகளின் வழியே
எப்போதும் மறைத்தே வைத்திருக்கிறாய்
எனைக் கொல்வதற்கான ஆயுதமொன்றை.

- க. அம்சப்ரியா.

No comments:

Post a Comment