Monday, February 20, 2012

பெப்ரவரி 2012 - ஆசிரியர் பக்கம்

எழுத்தும் தண்டனையும்


எழுத்து தண்டனையெனில்
எழுதுகிறவர்களுக்கா? படிப்பவர்களுக்கா?
படிப்பவர்களுக்கு என்றால்
படிக்காமல் போகலாம்
எழுதுகிறவர்களுக்கு என்றால்
எழுதுவானேன்?
விவரம் அறியும் பருவத்திலேயே
சுவரில் கிறுக்கும் குழந்தைக்கு
எழுத்து, தண்டனையா?
படிக்காமல் இருப்பதும் எழுதாமல் இருப்பதும்
சுயதண்டனைகள் அல்லவா?
படிப்பதும் எழுதுவதும்
மனசாட்சியின் தண்டனையிலிருந்து
தப்பிக்கத்தானோ!
படிக்கவிடாமலும் எழுதவிடாமலும்
தடுப்பவர்களே தண்டனைக்குரியவர்கள்.

தாமத வருகைக்கு
சிறுசிறு தவறுகளுக்குப்
பள்ளிக்கூடத்தில்தான்
எழுத்து, தண்டனையாகிறது.
எண்ணும் எழுத்தும் கண்கள் என்று
சொல்லிக்கொண்டே
இம்போசிஷன் என்று
எழுத்தைத் தண்டனையாக
இளம்வயதில் பதிக்கிறோம்.
தண்டனை என்றால்
பயமும் வெறுப்பும் வரும்.
எழுத்தில் வெறுப்பு வந்தால்
படிப்பதில் வெறுப்பு வராதா?
படிப்பதற்காக அனுப்பப்படும்
பள்ளிக்கூடங்களில்
எழுத்தில் வெறுப்புத்தீ!

ஜெய்ப்பூரில் இலக்கியத்திருவிழா.
எழுத்தாளர்களும் வாசகர்களும்
இருக்கவிரும்பும் உலகம்
2006 முதல் நடந்துவருகிறது
இந்த ஆண்டு ஜனவரி 20- 24
சல்மான்ருஷ்டி தடுக்கப்பட்டார்
The satanic verses
சிந்திப்பதற்கு
யாருக்கும் எப்போதும் தடையில்லை
வெளிப்படுத்தும் போதுதான் தகராறு.
வரலாற்றில் பிப்ரவரி
சிந்தனை வெளிப்பாட்டிற்குத்
தண்டனை வழங்கும் புனிதமாதம்
புருனோ (G iordam o Bruno) வைக்
கைது செய்தனர்;
மணிக்கணக்கில் தலைகீழாகத்
தொங்கவிட்டனர்;
கண்களைக் குத்தினர்.
கட்டுப்பட மறுத்த புருனோவை
உயிருடன் எரித்தநாள்
பிப்ரவரி 17, 1600.
சல்மான்ருஷ்டிக்கு
மரணதண்டனை (Fatwa) விதிக்கப்பட்ட நாள்
பிப்ரவரி 14, 1989
அவருக்கு ஒன்றும் ஆகவில்லை
ஆனால் அவரது புத்தகத்தை
ஜப்பானில் மொழிபெயர்த்தவர்
1991 இல் கொல்லப்பட்டார்.
சல்மான்ருஷ்டியின் எழுத்து,
தரமற்றதாக இருக்கலாம்
அவரைப்படிப்பது
வெளிநாட்டில் வாழ்வதால் போற்றுகிற
இந்தியத் தாழ்வுமனப்பான்மையாக இருக்கலாம்.
ஆனால் சல்மான்ருஷ்டியின்
இலக்கியச் சேவைக்காக
அட்லாண்டா, எமரிக்
பல்கலைக்கழகத்தில் பதவி,
புக்கர் பரிசு
1945க்குப் பிறகு மிகச் சிறந்த
50 எழுத்தாளர்கள் வரிசையில்
டைம்ஸ் இதழ் தந்த 13ஆவது இடம்
ஐரோப்பிய, அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில்
மதிப்புறு முனைவர் பட்டங்கள் -
தாழ்வு மனப்பான்மை
இந்தியர்களுக்கு மட்டுமல்ல போலும்!

ஆண்டவனை மறுத்ததால்
நக்கீரன் எரிக்கப்பட்டான்.
திருமாலுக்கு எதிராகப் பேசியதால்
இரணியன் கிழிக்கப்பட்டான்.
அப்பரைக் கட்டிக் கடலில் போட்டார்கள்.
இராமனைப் போற்றியவர் கண்களைப் பறித்தார்கள்
நந்தனை நெருப்பில்... வள்ளலாரை அறைக்குள்...
உலகத்தமிழ்மாநாட்டிலிருந்து
கார்த்திகேசு சிவத்தம்பி வெளியேற்றம்.
நமது நாடு
மிகப்பெரிய ஜனநாயக நாடு
எழுத்துரிமையும் பேச்சுரிமையும்
சுதந்திரத்தின் மூச்சுக் காற்றுகள்
எழுத்தை எழுத்தால் பேச்சைப் பேச்சால்
மறுக்கலாம்; மாற்றலாம்.
எழுதுகோல் அல்ல எழுத்தே ஆயுதம்
எழுத்து இல்லாமல் அதிகாரம் இல்லை.
எழுத்தை அதிகாரம் எதிர்க்கலாமோ?
எழுத்தாளர்கள்
சாதி மதம் நாடு கடந்த
உலகக் குடிமக்கள்.
அவர்கள் வாழ்நிலை வேறு
வாழ விரும்பும் உலகம் வேறு
அடிமைப்பட்ட இந்தியாவில்
ஆனந்தப் பள்ளு ஆடியவன் பாரதி.
வரவிரும்பிய உலகை வரவேற்க
வாழும் உலகின் கதவுகளை உடைக்கிறார்கள்
வாழும் உலகைப் போற்றிப் பெறும்
விருதுகளைவிட
வரவேண்டிய உலகிற்கு வழிதிறப்பதில்
விழுப்புண் ஏந்துகிறார்கள்.
எழுத்தாளரின் சுதந்திரத்திற்கு
எழுத்தின் தரமதிப்பீடு தீர்வாகாது
அண்மையில் நடந்த புத்தகக் காட்சியில்
நீதிநாயகம் சந்துரு சொல்லியிருக்கிறார்
“ஓர் எழுத்தாளரின் நூல்கள் தாக்கப்பட்டால்
ஒரு சமுதாயத்தின் பண்பாடு அழிக்கப்படுகிறது.
ஓர் எழுத்தாளர் தாக்கப்பட்டால்
ஒரு வரலாறு அழிக்கப்படுகிறது”
ஆம்! ஒரு சமுதாயத்தின்
பண்பாடு என்பதும் வரலாறு என்பதும்
ஒட்டுமொத்த மனிதகுல வரலாற்றில்
உள்ளடங்கும் தானே!
வாழும் உலகை எப்படிப் பார்ப்பது?
வரவேண்டிய உலகை வரவேற்பது எப்படி என்று
யாரும் யாரையும்
கட்டாயப்படுத்துவதில்
நாகரிகம் தண்டனைக்காளாகிறது.
தடையும் தண்டனையும்
எழுத்திற்கென்றாலும்
எழுத்தாளருக்கென்றாலும்
தலைகுனிவது மானுட நேயமே!
-ம.ரா

No comments:

Post a Comment