Monday, January 23, 2012

காலம் கொன்ற விருந்து - 5

ரிஷிக்கூட்டங்களும் ஆசிரமங்களும்
நரசய்யா


வ. ரா. தமிழ்நாட்டிற்குத் திரும்பிய போது மஹாகவி சர்ச்சை முடிவு பெற்றிருந்தது. பாரதியார் குறித்து அவர் பேசாதிருந்ததற்குக் காரணம் பற்றி வீரகேசரி 15 .09. 1936 இதழில் இந்தியச் செய்திகள் என்ற தலைப்பில் பின்வரும் குறிப்பு வெளியிடப்பட்டிருந்தது:

தமிழ்நாட்டில் பாரதியார் தினம்
கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் காங்கிரஸ் மாளிகையில் பாரதியார் தினம் கொண்டாடப்பட்டது.

மாலையில் கே. பாஷ்யம் அய்யங்கார், வித்வான் டி. பி. மீனாட்சிசுந்தரம்பிள்ளை, ரா. கிருஷ்ணமூர்த்தி, சங்கு சுப்பிரமணியம் முதலியவர்களூம் மற்றும் பல தலைவர்களும் பேசினார்கள்.

வ. ரா. பிரதிஞ்கை: சபையினர் வ. ரா. பேசவேண்டுமென்று கேட்டார்கள். அப்பொழுது வீரகேசரியின் மாஜி ஆசிரியர் திரு, வ. ராமஸ்வாமிஅய்யங்கார் (வ. ரா.) எழுந்து, தமிழ்நாட்டில் அடுத்த வருஷத்திற்குள் 300 பாரதி சங்கங்கள் ஏற்பட வேண்டுமென்றும் அதன்பின்னர்தான் தாம் பொதுக் கூட்டங்களில் பேசப்போவதாகவும், அதற்குமுன் பேசு வதில்லை என்ற பிரதிஞ்கை மேற்கொண்டிருப் பதாகவும் கூறினார்.

இதிலிருந்தே வ.ரா வின் பாரதி பக்தியைத் தெரிந்துகொள்ளலாம். தவிரவும். ரா.கி, வ, ரா.வின் பாரதி சர்ச்சை அவர்களது நட்பை ஒருபோதும் குறைத்து விடவில்லை! மாறாக, வ. ரா. எல்லாரையும் சந்தித்துப் பேசி சுமுகமாகவே இருந்தார் என்பது சிவபாத சுநதரம் இலக்கிய யாத்திரை என்றகட்டுரையில் எழுதியிருப்பதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

சிவபாதசுந்தரம் சொல்கிறார்:
“1937 இல் முதன் முறையாக சென்னைக்கு வந்த என்னை அன்றைய எத்தனையோ எழுத்தாளர் பலரைக் கேள்விப்பட்டிருந்தும், கல்கி அமர்ந்திருந்த ’ஆனந்தவிகடன்’ காரியாலயத்தை நாடச் செய்தது. ஆசிரியர் கல்கியைப் பார்க்கவேண்டும் என்று அங்கிருந்த ஒருவரிடம் சொல்லி என்னை அறிமுகப் படுத்தியவுடன், இலங்கையிலிருந்து ஒரு வாசகர் வந்திருக்கிறார் என்று காரியாலத்தினர் பெருமிதப்பட்டார்கள். உடனே ஆசிரியருக்குத் தகவல் அனுப்பிவிட்டு என்னை அங்கே அழைத்துச் சென்றவுடன் கல்கி எழுந்து அபிமானத்துடன் வரவேற்ற சமயத்தில் ‘வாங்கோ சிவபாதசுந்தரம்’ என்று அழைத்தது ஒரு குரல். ஏற்கனவே வீரகேசரி ஆசிரியராக இருந்த நண்பர் வ. ரா.தான் அப்படி அழைத்தார்.

அந்தச் சமயத்தில் கல்கியின் பக்கத்தில் வ. ரா.வை நான் எதிர்பார்க்கவில்லை. அதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னர்தான் பாரதி மகாகவி போரில் முகம் கொடுத்துப் பேசாத அளவில் எழுத்துச் சண்டை போட்டவர்கள். ஆனால் அதில் ஆச்சரியப்படவேண்டியதில்லை என்று சொல்லவேண்டும். வ.ரா.வை அறிந்தவர்களுக்குத் தெரியும் அவரோடு முரண்படுவதும் வெகு சுலபம். அவரோடு கட்டித்தழுவுவதும் சுலபம்”
கருத்தில் வேறுபட்டாலும் அந்த ஜாம்பவான்கள் ஒருவரையொருவர் வெறுக்கவில்லை! ஆனாலும் சமயம் கிடைத்த போதெல்லாம் கல்கி வ. ரா. வையும் அவரது நண்பர்களையும் கிண்டல் செய்வதில் தவறியதேயில்லை.

1938 ஆம் ஆண்டில் சென்னை வானொலி நிலையம் துவக்கப்பட்டது. அப்போது நிலைய இயக்குனர் விக்டர் பரஞ்சோதி என்பவர். இவர் இலண்டன் பி பி சி யில் பயிற்சிக்கு அனுப்பப்பட்டவர். துணை இயக்குனர் ஜி. டி. சாஸ்திரி. இருவரும் வ. ரா. வை விரும்பியவர்கள். மணிக்கொடியை ரசித்தவர்கள். அவர்கள் முயற்சியால், நிலையம் தொடங்கிய மறுநாளே வ. ரா. வின் பேச்சு ஒலிபரப்பாயிற்று. அப்பேச்சின் தலைப்பு ‘மூடநம்பிக் கைகள்.’ அவரது பேச்சு மக்களால் விரும்பப்பட்டதால், அப்போதிருந்தே அடிக்கடி வ. ராவைப் பேச நிலையத்தார் அழைத்துக் கொண்டிருந்தனர். அச்சமயங்களில் சிட்டியும் வ. ரா. வுடன் நிலையம் செல்வது வழக்கமாக இருந்தது. ஆகையால் சிட்டிக்கும் ரேடியோவில் பேசும் வாய்ப்புகள் சில கிட்டின. சில நாடகங்களும் வானொலிக்கு சிட்டி எழுதித்தர, அவை ஒலிபரப்பாயின. 1939 ஆம் ஆண்டில் திருச்சியில் ஒரு நிலையத்தை வானொலி துவக்கியது. அங்கு பேச்சாளர்களும் எழுத்தாளர் களும் தேவைப்பட்டனர். ரேடியோவில் ஏற்கனவே பணி புரிந்துகொண்டிருந்த ரா. பார்த்த சாரதி என்ற ஒரு சிறந்த நகைச்சுவை எழுத்தாளர் சிட்டியைத் திருச்சிக்கு வர அழைத்தார். முதலில் தயங்கிய சிட்டி பின்னர் அந்த நாட்களில் திருச்சியில் மருத்துவராக இருந்த டாக்டர் வா. சுவாமிநாத சாஸ்திரி என்பவரின் உந்துதலால் திருச்சி சென்றார். ஆகையால் சிட்டியின் மரியாதைக்குரியவராக டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி இருந்தார். தவிரவும் டாக்டர் சாஸ்திரி, டாக்டர் டி. எஸ். எஸ். ராஜனுடன் சேர்ந்து உப்பு சத்தியாகிரஹத்தில் ஈடுபட்டு, சிறை சென்றவர்.

இரண்டெழுத்தும் ஐந்தெழுத்தும்

டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி ஒரு சுதந்திரப் போராட்டவீரர். அவர் நோயாளிகளைப் பார்க்கும் போது கூட ராட்டையில் நூல் நூற்றுக் கொண்டுதான் இருப்பார். ஆங்கிலத்தில் அப்போது பிரசித்தி பெற்ற நகைச்சுவை பத்திரிகையான PUNCH போல தமிழில் ஒரு நகைச்சுவை பத்திரிகை நடத்த விரும்பினார். டாக்டர் சாஸ்திரி மணிக்கொடியின் தீவிர ரசிகர் அவர் அவ்வாறு மணிக்கொடி தோன்றிய அடுத்த ஆண்டே தொடங்கிய பத்திரிகையின் பெயர் களிராட்டை என்பதாகும். ராட்டையால் நூற்பது தான் மகிழ்ச்சி என்ற பொருளில் அத்தலைப்பு அமைந்தது. 1934

மார்ச்சு மாதம் வெளியான முதல் இதழில், அப்பெயர் கொடுக்கப் பட்டதன் பொருளை விளக்கியிருந்தார். “களி, கவலையைப் போக்கும் ராட்டை வறுமையை நீக்கும். நம் நாட்டினர் களிப்புடன் இருந்தாலே வலிமையுடன் வாழ்வார்கள். ராட்டை போன்ற கைத்தொழிற் கருவிகளைக் கையாடி வருவதால், தான் நமது வறுமை நீங்கும். உள்ளம் களிக்கும் வண்ணம் நகைச் சுவைததும்பும் கட்டுரைகளும் கதைகளும், நம் நாட்டினர் முன்னேற்றத்திற்கு ஏற்ற விஷயங்களும் வெளிவரும்”
சிட்டி அதிசயப்பிறவி வ. ரா. என்ற நூலில் இதைக் குறித்து எழுதியுள்ளார். வ. உ. சி., எஸ். ஜி. ராமானுஜுலு நாயுடு, வ. ரா., சங்கு சுப்பிரமணியம் போன்றவர் களும் களிராட்டையில் எழுதினார்கள். இதைத் தெரிந்துகொண்ட கல்கி. போடு பத்திரிகை என்ற வொரு கட்டுரையை விகடனில் புதுப் பத்திரிகை களை விமர்சித்து நகைச்சுவை யுடன் எழுதினார். நகைச்சுவையையே அடிப்படையாகக் கொண்ட களிராட்டை தோன்றியபோதே அந்தச் சுவையின் முன்னுரிமை கொண்டாடிய ஆனந்த விகடன் ஆசிரியர் அதைக் கிண்டல் செய்யும் பாணியிலும், புதிய பத்திரிகை ஆரம்பிக்கும் ஒரு தம்பிக்கு புத்திமதி சொல்வது போலவும் அமைந்திருந்தது அக்கட்டுரை. ஆனந்தவிகடன் 50,000 பிரதிகளுக்கும் அதிகமாக விற்றுக்கொண்டிருந்தபோது, சில நூறு பிரதிகள் விற்பனையான மணிக்கொடியும் களிராட்டையும் தரமான இலக்கியம் தேடும் வாசகர்களின் கவனத்தை ஈர்த்தகாலம். முதலில் சங்கு சுப்பிரமணியும் பின்னர் சொக்கலிங்கமும் தினமணியின் பொறுப்பேற்கச் சென்று விட்ட படியால், காந்தியும் சுதந்திரச் சங்கும் மறைந்து விட்ட காலம்; எஞ்சிய இரு பத்திரிகைகளின் வளர்ச்சியைக் கல்கி கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார் என்பது அக்கட்டுரை மூலம் மணிக்கொடி குழுவுக்குத் தெரிந்து விட்டது. உடனே எதிர்ப்பு ஒன்றும் எவராலும் தெரிவிக்கப்படவில்லையாயினும் மணிக்கொடி எழுத்தாளர்களை இது மனம் நோகத்தான் செய்தது.. தொடர்ந்து இப்பத்திரிகையில் டாக்டர் சாஸ்திரியின் விருப்பப்படி, சிட்டியின் இரண்டு எழுத்துகள் என்றவொரு கட்டுரை வெளியாயிற்று. “ஒன்று குறில் மற்றொன்று நெடில்” என்று தொடங்கிய அக்கட்டுரை வ. ரா. வைப் பற்றியது. (வ, குறில் ரா, நெடில்) அதில் சிட்டி வ. ரா. வின் தமிழ்ச் சேவையைப் புகழ்ந்து எழுதியிருந்தார். இது கல்கிக்குப் பொறுக்கவில்லை போலும்! உடனே இக்கட்டுரையைப் பரிகாசம் செய்யும் பாணியில் கல்கி ஆனந்த விகடனில் ஐந்து எழுத்துக்கள் என்றவொரு கட்டுரை எழுதினார்.

தனக்கே உரிய நகைச்சுவையுடன் கல்கியால் அக்கட்டுரை எழுதப்பட்டிருந்தது.

ஐந்தெழுத்துக்களில் உணர்ச்சியைக் கிளப்பிக் கண்ணீர் வடிக்கச்செய்யும் என்ற வகையில் எழுதி முடிக்கையில் அதுதான் வெங்காயம் என்று குறிப்பிட்டார்! நான் இது குறித்து சிட்டியைக் கேட்டபோது, அவரைப் பொறுத்த வரையில் “இத்தகைய நிலை உருவானது பற்றி மணிக்கொடியைச் சேர்ந்த எங்களில் சிலர் மார்தட்டிக்கொள்ளவும் தயங்கவில்லை. இது முதல் அன்று நடந்தேறிய இலக்கிய வேள்வியில் பலதரப்பட்ட ஆசிரமங்கள் ஈடுபட்டதன் விளைவாக ‘ரிஷிகூட்டங்களி’டையில் சிறிது பொறாமையும் பகையுணர்வும் வளர்வதற்கு வாய்ப்பு கிடைத்தது” என்றார்.

சிட்டி அக்காலத்தைத் தமிழின் பொற்காலம் எனக்கூறுவார். சற்றே பின்னோக்கிச் சென்றால், அப்போதைய, வ. ரா. வின் செதுக்கிய நடையும் கு. ஸ்ரீனிவாசனின் ஆழ்ந்த சிந்தனைகளும் தமிழுக்குப் பொலிவைக் கொடுத்ததாகச் சிட்டி கருதினார். அப்போது வந்து கொண்டிருந்த காந்தி, டி. எஸ். சொக்கலிங்கத்தின் நேரடித் தாக்குதல் கட்டுரைகளைப் பிரசுரித்துக் கொண்டிருந்தது. ஆகையால் விஷயங்களை உடனுக்குடன் விளக்கும் சக்தி வாய்ந்திருந்தது. மணிக்கொடி பத்திரிகையின் நிழலில் வளர்ந்தவர்களில் ஒருவர் ந. ராமரத்தினம். திருச்சி டாக்டர் சாஸ்திரியின் உறவினரான இவர், திருமணம் முடிந்த மறுமாதமே சத்தியாகிரஹத்தில் ஈடுபட்டு, போலீசாரிடம் அடியும் வாங்கி சிறை சென்றவர். அவருடைய இளம் மனைவியும் மற்ற பெண்களுடன் சிறைப்பட்டவர். இசை ஞானம் பொருந்திய ராமரத்தினம் சங்கீத விமர்சனக் கட்டுரை ஒன்றை மணிக்கொடிக்கு அனுப்பியிருந்தார். அதைப் பார்த்து மகிழ்ந்த வ. ரா. அவரைச் சென்னைக்கு வந்து எழுத்துலகில் சேருமாறு அழைப்பு விடுத்தார். அப்படித்தான் ராமரத்தினம் எழுத்தாளரானார்.
(தமிழ் எழுத்து வரலாற்றில் சிட்டி ஒரு மைல் கல் எனக் குறிப்பிடும் காலம் சென்ற இலங்கை கா. சிவத்தம்பி, ஜனவர் 16, 2003 அன்று சிட்டிக்கு எழுதிஅய கடிதம் இணைக்கப்பட்டுள்ளது)



1 comment:

  1. பல புதிய தெரியாத செய்திகள். நன்றி.

    ReplyDelete