Monday, January 23, 2012

கடைசிப்பக்கம் - பக்தி உழவா்கள்



இந்திரா பார்த்தசாரதி

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், மார்கழி மாதம் குளிர்பருவம். காலையில், மஃப்ளரைக் காதுவரை இறுகிமூடியவாறு, மார்கழி பஜனையில் வீதிகளிடையே திருப்பாவை பாடிக்கொண்டு(?) செல்பவர்களைப் பார்க்கலாம்.

திருப்பாவை, ஆண்டாள் கண்ணனைக் கணவனாகப் பெறுவதற்காக நோற்ற நோன்பா அல்லது இந்தநிகழ்வுக்கு வேறு ஏதாவது முக்கியத்வம் இருக்கிறதா? திருப்பாவையை ஊன்றிப் படித்தால்தான் இதுபுரியும். மேலெழுந்தவாரியாகப் படிக்கும்போது, திருமணமாகாதக் கன்னிப்பெண்கள், நல்ல கணவர்கள் வாய்க்கவேண்டுமென்று, சிற்றங் சிறுகாலையில், நீராடிவிட்டு, நெய்யுண்ணாமலும், பாலுண்ணாமலும், கண்ணுக்கு மை எழுதாமலும், மலரிட்டு முடியாமலும், இத்தகைய சிறு தியாகங்களை மேற்கொண்டு, இறைவன் கோயிலுக்குச் சென்று, வழிபாடு செய்வதுதான் இந்த நோன்பு என்ற பரவலான அபிப்பிராயம் நிலவிவருகிறது.

அப்படியானால், திருப்பாவை நோன்பு சமயச்சடங்கு மட்டுந்தானா என்ற கேள்வி எழுகிறது.
உலகச் சமயச்சடங்குகள் அனைத்துக்குமே விவசாய உட்பொருள் உண்டு என்று சமூக மானுடவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். மனித நாகரிகத் தொடக்கக்காலத்தில் சமயமல்லாத வேறு காரணங்களுக்காகத் தொடங்கிய நிகழ்வுகள், பிற்காலங்களில் சமயச் சடங்குகளாக மாறிவிட்டன என்பது மார்க்ஸிஸ்ட் இலக்கிய விமர்சகர் கிறிஸ்டஃபர் கால்ட்வெல்லின் கருத்து.

மார்கழி மாதத்தில், தை மாதத்தில் அறுவடை செய்வதற்காக, உழவர்கள் காத்திருப்பார்கள்.. எப்படி விளையப் போகிறதோ, நல்ல விளைச்சலாக இருக்க வேண்டுமே என்ற ஆர்வமும் நம்பிக்கையும் இருந்து கொண்டே இருக்கும். இதற்குத் தெய்வத்தை வேண்டுவது தான் மனித இயல்பு.

மார்கழி மாதத்தில் ’நிலமகள்மடியில்’ (நப்பின்னை முலைத் தடத்தில்) அறுவடை (கண்ணன்) உறங்குகிறது.. அதனை உயிர்ப்பிக்கப் பாடும் பாட்டே திருப்பாவை. இப்பாடல்கள் கண்னனைத் துயிலெழுப்புவது போல் குறியீட்டுக்கோலம் கொள்கின்றன.
திருப்பாவையில் வரும் வரிகளைப் பார்க்கும்போது இது புலனாகிறது.
‘தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிப் பெய்து,
ஓங்கு பெருஞ் செந்நெலூடுகயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைப்பற்றி
வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம்...’

‘ஆழிமழைக்கண்ணா! ஒன்று நீகைகரவேல்
ஆழியுள் புக்குமுகந்து கொடார்த்தேறி
ஊழிமுதல்வனுருவம்போல் மெய்கறுத்து
பாழியந்தோளுடைப்பற்பநாபன்கையில்,
ஆழிபோல்மின்னிவலம்புரிபோல்நின்றதிர்ந்து
தாழாதேசார்ங்கமுதைத்தசரமழைபோல்,
வாழவுலகினில்பெய்திடாய்..

கூடாரை வெல்லும் சீர்க்கோவிந்தா உன்றன்னைப்
பாடிப்பறை கொண்டுயாம் பெறும்சம்மானம்
நாடுபுகழும் பரிசினால் நன்றாக
சூடகமேதோள்வளையேதோடேசெவிப்பூவே
பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போ மதன்பின்னே பாற்சோறு
மூடநெய்பெய்துமுழங்கைநெய்வார
கூடியிருந்து...

‘கூடாரைவெல்லும் சீர்க்கோவிந்தா” என்று 27ஆம்பாட்டில்வரும்வரி, ‘கூடாரவல்லி’ யாகி இன்றும் வைணவர்கள் வீடுகளில், மார்கழி 27ஆம்நாள் ஒரு சமயப் பண்டிகையாகிக் கொண்டாடப்பட்டு வருகிறது.

நல்ல அறுவடை வேண்டிப் பாடப்பட்ட செய்யுட்கள், சமய வழிபாட்டுத் தோத்திரப் பாடல்களாக மாறிவிட்டன என்பதுதான் காலத்தின் நியதி!

1 comment:

  1. ம்ம்ம்ம் யோசிக்க வேண்டிய ஒன்று.

    ReplyDelete