Monday, January 23, 2012

இலக்கியமாகும் வரலாறு - காவல் கோட்டம்

கருத்து சா. கந்தசாமி

இந்தியாவில் இலக்கியத்திற்காக இந்திய அரசு தரும் உயர்ந்த விருது சாகித்ய அகாதமி பரிசு. அது விண்ணப்பம் போட்டு, புத்தகம் அனுப்பிப் பெறுவது கிடையாது. சாகித்ய அகாதமி தானாகவே ஒரு புத்தகத்தைத் தேர்ந்தெடுத்து அதன் ஆசிரியருக்கு விருது வழங்குகிறது. அது பற்றி எத்தனைத்தான் குறைகள் சொன்னாலும், அசலான படைப்பு எழுத்தாளர்கள் சிலர் விருது பெற்றுக் கொண்டே வருகிறார்கள். அதனால் சாகித்ய அகாதமி குறைபாடுகள் கவனிப்பு பெறாமல் போய்விடுகின்றன.

1954 ஆம் ஆண்டில் சாகித்ய அகாதமி தொடங்கபட்டது. அதன் முதல் தலைவராகப் பிரதம மந்திரி ஜவகர்லால் நேரு இருந்தார். பத்தாண்டுகள். தன் மரணம் வரையில் சாகித்ய அகாதமி தலைவராக இருந்த அவர் சாகித்ய அகாதமி விருது பெறாதவர்.

சாகித்ய அகாதமி தொடக்கத்தில் பதினெட்டு மொழிகளுக்கு விருது கொடுத்தது. பின்னர் கொங்கணி மொழி சேர்க்கப்பட்டது. தற்போது மணிப் புரி, போடோ சந்தாலி, டோக்ரி சேர்க்கப்பட்டு விருது கொடுக்கப் படுகிறது அதில் ஆங்கிலமும் உண்டு. ஆங்கிலம் இந்திய மொழிகளில் ஒன்றாகவே கருதப்படுகிறது.

ஆங்கில மொழிக்காக முதன் முதலாக விருது பெற்றவர் ஆர்.கே. நாராயண். தமிழ் மொழிக்க முதன்முதலில் சாகித்ய அகாதமி விருது பெற்றவர் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேராசிரியராக இருந்த ரா.பி. சேது பிள்ளை. விருது பெற்றது தமிழின்பம் என்னும் கட்டுரைத்தொகுப்பு.

சாகித்ய அகாதமி படைப்பிலக்கியத்தைப் புறக்கணிக்கிறது மேம்போக்கான, பள்ளிக் கூடப் பாடப் புத்தகத்தரமான புத்தகங்களுக்கு விருது வழங்குகிறது என்று சொல்ல தமிழின்பம் முதல் காரணமாக அமைந்தது. விருது, பரிசு என்பதால் ஒரு படைப்பு சிறப் படைவது இல்லை. அதன் தரத்திற்காகவும்; அசலான தன்மைக்காகவும் கவனிப்பு பெறுகிறது. ஆனால் விருது, பரிசு என்னும் அங்கீகாரம் ஒரு மொழி இலக்கியத்தை முன்னெடுத்துக் செல்கிறது.


தமிழகத்தில் மாநில சாகித்ய அகாதமி இல்லை. எனவே இந்திய சாகித்ய அகாதமி தமிழ்மொழிக்கான விருது முக்கியத்துவம் பெறுகிறது. அதனை அடைய எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் என்று ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள்.
இந்த ஆண்டு சாகித்ய அகாதமி விருதைத் தமிழ் மொழிக்கென பெற்று இருப்பவர் சு. வெங்கடேசன். நூல்: காவல் கோட்டம். பெரிய நாவல். ஆயிரம் பக்கங்களுக்கு மேல். 2008 _ ஆம் ஆண்டில் வெளி வந்தது.


சரித்திரந்தான் காவல் கோட்டம். அதாவது மதுரையின் சரித்திரத்தையே ஒரு கதாபாத் திரமாகக் கொண்டு மாலிக்கப்பூர், நாயக்கர்கள், ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தின் சரித்திரத்தைத் தன் படிப்பின் வழியாகவும் தன் ஈடுபாடு, அக்கறையின் அடிப்படையில் எழுதியிருக்கிறார்.

காவல், களவாகிப் போனபோது அதில் சம்பந்தப்பட்டவர்கள் வாழ்க்கை சீர்குலைந்து போவது விவரமாகச் சொல்லப்படுகிறது. நாவல் என்பதற்கு இலக்கணம் ஏதும் கிடையாது என்பது மட்டுமல்ல ஒவ்வொரு அசலான நாவலும் ஏற்கனவே எழுதப் பட்டிருக்கும் நாவல்களுக்கு எதிராகவே எழுதப்படுகிறது. சொல்லப்பட்ட வரலாறு சொல்லப்பட்ட வரலாற்றின் வழியாகச் சொல்லப்படாத வரலாறும் படைப்பு என்பதற்கு அர்த்தம் கொடுக்கிறது. வரலாறு என்பதில் படைப்பு எழுத்தாளன் நோக்கம் பார்வை தனித்தன்மை மிளிர இடம் பெறும் போது, சொல்லப்படும் முறையால் அது கலைத்தன்மை பெற்று நாவலாகிறது.

நடந்தது, எழுதி வைக்கப்பட்டிருக்கிறது என்பதால் எதற்கும் சிறப்பு கிடையாது. அது ஒரு கலைஞனால் சொல்லப்படும்போதுதான் மதிப்படைகிறது . ஆனால் சரித்திரத்தை எவ்வாறு கலைஞன் தீர்மானித்தான். அதுவே ஒரு படைப்பைத் தன்னளவில் நிலை நாட்டுகிறது.
காவல் கோட்டம் நாவலில் முக்கியமான அம்சம் களவு. காவல் பார்த்து வந்த மக்கள் களவாடுகிறவர்களாக மாறியது; அரசாங்கம் அவர்கள் மீது எடுத்த நடவடிக்கை, காவல் கூலி, துப்புக் கூலி விவகாரம். ஆங்கிலேயர்கள் மதுரைக்கு மட்டும் குற்றப்பரம்பரைக் கூட்டத்தைக் கொண்டு வரவில்லை. தங்கள் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் அடங் காதவர்களைத் தனித்தனியாகச் குற்றவாளிகள் என்று கண்டுபிடித்துத் தண்டிப்பதை விட சட்டமாகக் தண்டித்துவிடலாம் என்று 1871 ஆம் ஆண்டில் குற்றப்பரம்பரைச் சட்டத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்தார்கள். அதன் அடிப்படை மனிதன் சுதந்திரமாகப் பிறக்கின்றான் என்பது இல்லை. மனிதன் குற்றவாளியாக பிறக்கின்றான். மூன்று வயதில் குற்றம் செய்யக்கூடிய தன்மை ரத்தத்தில் ஓடுகிறது.

அப்படிப்பட்டவர்களைத் தனியாகப் பார்க்கவேண்டும். சுதந்திரமாக நடமாட விடக்கூடாது. இரவில் போலீஸ் ஸ்டேசனில் ஆஜராகிப் படுத்துக் கிடக்க வேண்டும். வெளியூர் சென்றால் ஆதார சீட்டு வாங்கிக் கொண்டு போக வேண்டும் என்றெல்லாம் சட்டம் போட்டார்கள். இந்தியாவின் பல மாகாணங்களில் குற்றப் பரம்பரைச் சட்டம் அமலில் இருந்தது.
சென்னை மாகாணத்தில் மதுரை, ராமநாதபுரம் குற்றப் பரம்பரைச் சட்டம் அமலுக்கு வந்தது என்றாலும் மதுரை அதில் பிரதான இடமாகியது. பிரமலைக் கள்ளர்கள் குற்றப் பரம்பரைச் சட்டத்தில் முதலில் சேர்க்கப்பட்டார்கள். அவர்கள் காவலர்களாக இருந்தவர்கள். எனவே களவும் அவர்களுக்குச் சாத்தியமாகியது. குற்றப்பரம்பரைச் சட்டத்தில் மறவர், அகம்படியர் வலையர், ஒட்டர், கேப்மாரி, குறவர் எனப்பலர் இருந்தார்கள்.
பத்தொன்பது வயதில் களவும், காவலும் கற்று அழகர்மலைக் கருப்புக்குக் கிடாவெட்டி மொட்டையடித்து காவல் கம்பு தாங்கியவர்கள், கம்பு பறிக்கப்பட்டு ஆதாரச் சீட்டு வாங்கிக் கொண்டு அடுத்த ஊர்க்குப் போகும் பரிதாப நிலை பிரமலைக்கள்ளர்களுக்கு ஏற்பட்டது, காவல் கோட்டத்தில் அதிகமாகச் சொல்லப்படுகிறது.

காவல் கோட்டம் கதைச் சொல்லும் நாவல் இல்லை வரலாற்றை வரலாறாகவே சொல்லும் நாவல். அதுவே அதன் பலம் அதற்கு சாகித்ய அகாதமி விருது வழங்கி இருக்கிறது. படைப்பு இலக்கியத்திற்கு வழங்கி இரு என்பது மகிழ்ச்சியானது தான்.

1 comment:

  1. நாவலைத் தேடிப் பிடித்துப் படிக்கவேண்டும் என்னும் ஆவலைத்தூண்டி விட்டது இந்த விமரிசனம். நன்றி சுபா.

    ReplyDelete